::பெண்ணியம்

::பெண்ணியம்

பெண்ணியம் பற்றிய செய்திகள் கட்டுரைகள்

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

Regie_Varsa திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டு இருந்த வேளையில் 11.03.09 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இக்கொடூர நிகழ்வு திருமலையில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்துள்ள தமிழ் மக்களையும் உலுக்கி உள்ளது.

சம்பவத்தின் விபரமானது:

பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டினருடன் ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார்.

வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு “ஆட்டோ”விலேயே பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முனைகையில் அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்த நிலையிலும் வத்சா ‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்’ என்று சொல்லியதில் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கியதில் பாடசாலை மூலம் பொலிஸாரிடம் புகார் கொடுத்து தீவிரமாக தேடத்தொடங்கினர்.

இந்நிலையில் வத்சாவைக் கடத்திய நபர்கள் தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களுடன் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார்.

இதே நேரம் பாடசாலையிலும் அலுவல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வத்சாவை பலவிதத்திலும் தேடத் தொடங்கினர். பாடசாலையில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறத் தொடங்கின.

வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி உறுப்பினர் தனது நண்பர்கள் அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து திரிந்தனர். இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்)வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர்.

வத்சா கொல்லப்பட்ட பின்னரும் கொலையாளிகள் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள ஓடித்திரிந்துள்ளனர்.

குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார்.

பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளந்திரையன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர்.

வத்சா என்ற இச்சிறுமி இருவருக்கு மேற்பட்டோரால் மிக மிருகத்தனமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன் அகோரத்தினாலேயே சிறுமி மரணித்து உள்ளதாகவும்  பிரேத பரிசோதணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பெண்ணுறுப்பு மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு உள்ளதும் அச்சிறுமி அணிந்திருந்த ஆடை முழு இரத்தத்தில் தோய்ந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது. இதனை பெற்ற தாயால் எப்படிப் பார்க்க முடியும். இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.03.09) ஊரே சோகமும் திகிலும் விடுபடாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

நீதவான் இளந்திரையன் அவர்களின் விடா முயற்சியால் மேவின் உட்பட்ட குற்றவாளிகள் 6 பேர் கைதானார்கள். இன்னும் இரு முக்கிய குற்றவாளிகள் இதுவரை தேடப்பட்டு வருகின்றனர். (வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு) கடந்த ஞாயிறு குற்றவாளிகளை வைத்திய பரிசோதணைக்கு கொண்டு சென்ற நேரத்தில் ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் என்ற குற்றவாளி தப்பி ஒட முயன்றதாக சொல்லப்பட்டு பொலிஸாரால் அதே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகுதி கொலையாளிகள் விசாரணையில் உள்ளனர். மேவின் தப்ப முயன்றதாக சொல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதானது மேவினுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்றதாக தெரிகின்றது.

ஏனெனில் இப்படியாக கடந்த காலங்களில் நடந்து வரும் இது போன்ற கடத்தல், கொலை மிரட்டல், கப்பம் கேட்டல், கொலைகள் என்பன ஏதோ ஒரு விதத்தில் இலங்கை புலனாய்வுக்குப் பின்னால் இயங்கும் தகவல் கொடுப்போரை (இன்போமர்) மையப்படுத்தியே ஒரு கூட்டு வேலைத் திட்டமாக பலதரப்பட்ட தகவல் மூலம் தெரிகின்றது.

இந்த சிறுமியின் கடத்தல், கப்பம் கோரல் கூட கொலைவரை வந்து கொலையாளிகள் கையும் மெய்யுமாக பிடிபட்டதாலேயே தெரியவந்துள்ளது. (திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை) மற்றும் படி கடத்தல் மிரட்டல் நடைபெறுவதும், லட்சம் லட்சமாக கப்பப் பணம் பொது மக்களிடமிருந்து பறிக்கப்பட்டும் இவ் விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் வெளியே வராமல் அவர்களே ஒடுங்கிப்போய் அடுத்த வீட்டிற்கு கூட தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியாமல் பீதியிலும் சொல்லோணாத் துன்பங்களுடன் நெருப்பிற்குள் வாழ்கின்றனர். யாரும் வெளியே வந்து சாட்சி சொல்லிவிட்டு உயிருடன், உறவுகளுடன், உடமைகளுடன் வாழமுடியுமா?

மொத்தத்தில் கிழக்கில் குறிப்பாகத் திருமலையில் நடையெறும் கொடூரங்களும் சட்ட விரோதச் செயல்களும் பல்வேறு கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. அதாவது: 

சிறிது காலமாவே பாலையுற்று, அன்புவழிபுரம் போன்ற நகர்புற கிராமங்களிலும், திருமலை நகரப் பகுதியிலுள்ள சோனகவாடி என்ற பகுதியிலும் ரி.எம்.வி.பி யைச் சேர்ந்தோரும், இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் ஒட்டி உறவாடிக்கொண்டு தகவல் கொடுக்கும் (இன்போமர் குழுவினரும் தீவிரமாக கப்பம் கடத்தல் கொள்ளை கொலை என்பவற்றில், ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது. (சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.)

மேலும் ரி.எம்.வி.பியிலிருந்து கருணா பிரிவதற்கு முன்பே இருந்து இதுவரை இவர்கள் மிக மோசமாகவே கப்பம் கேட்டு துன்புறுத்துவதாகவும் அதுவும் கருணா – பிள்ளையான் குழு என பிரிந்த நிலையிலும், இன்று வரை இந்த இரு குழுவிலிருந்து பிரிந்து உதிரியாகி வீதியில் திரியும் இவர்கள் உறுப்பினர்கள் வரை தங்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் தமது தேவைகளுக்காக, வெளிநாட்டிற்குச் செல்வதற்காக என மிக மோசமாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகின்றார்கள்.

எனவே மொத்தத்தில்:

1) கருணா குழு

2) பிள்ளையான் குழு

3) அல்லது கருணா – பிள்ளையான் மோதலால் உள்ளிலிருந்து வெளியேறிய உதிரியான உறுப்பினர்கள்

4) கருணா குழு, பிள்ளையான் குழுக்களுடனும் இலங்கை இராணுவத்துடனும் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் கொடுக்கும் குழுவினர் (ஊரிற்குள் இருந்து கொண்டு காட்டிக் கொடுப்போர் உட்பட)

5) எதேச்சதிகாரம் கொண்ட இலங்கை ராணுவக் குழுக்கள்

என இந்த 5 வகைக்குடுபட்டோரின் மூலமே கிழக்கில் – முக்கியமாக திருமலையில் அனைத்து அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. நடைபெறும் சம்பவங்களில் 95 வீதமானவை பலவிதத்திலும் மக்களை மிரட்டி மறைக்கப்படுகின்றன. வெளிவரும் சில சம்பவங்கள் – கொலைகள் கூட சட்டத்தின் முன், நீதியின் முன்நிறுத்தப்பட்டாலும் இறுதியில் அவை சட்டத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்டவையாகி விடுகின்றது. இவை  அனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் இலங்கை இராணுவத்தாலோ, அல்லது அதிகார வர்க்கத்தினாலோ சாட்சிகளை மிரட்டி, விடயத்தை திசை திருப்பியோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை ஓடவைத்தோ, காணாமல் பண்ணியோ, சட்டங்களை தமதாக்கியோ அல்லது இழுத்தடித்தோ, உண்மைகள் – நியாயங்கள் – அத்தனையும் நிர்மூலமாக்குகின்றன.

உதாரணமாக:

1) மூதூரில் நடந்த ‘அக்சன் பாம்’ 17 பேர் படுகொலை

2) திருமலை கடற்கரைமுன் நடந்த 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை

3) திருமலை கோணேஸ்வரர் ஐயர் படுகொலை

4) கல்முனைப் பகுதியில் வீட்டினுள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு சகோதரிகள்

5) வெல்லாவெளியில் 28.02.09ல் நடந்த 14வயது சிறுமி புனிதவதியின் பாலியல் பலாத்காரம்

6) இதனைத் தொடர்ந்து 02.03.09ல் மகாதேவி சிவகுமார் என்ற பெண்ணின் பாலியல் பலாத்காரமும் படுகொலையும்

7) ஒரு வாரத்தில் வெல்லாவெளியில் இன்னொரு பெண் சுட்டுக்கொலை என முடிவில்லாமல் தொடரும் படுகொலைகள் பாலியல் வன்முறைகள்

பிந்திய செய்தி:

1) உவர்மலை (ஓசில்) என்னுமிடத்திலிருந்த ரி.எம்.வி.பி அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

2) திருமலை நகரிலுள்ள ‘பெரியகடை’ என்னும் பகுதியிலுள்ள பிள்ளையான் அல்லது கருணா குழுவினரின் அலுவலகம் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் முக்கிய தடயங்களும், ஒரு முக்கிய சந்தேக நபரான இவர்களின் இயக்க உறுப்பினரான ஒருவரும் கைதாகியுள்ளதை அறிய முடிகின்றது. கடந்த கால இப்படியான பல குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் இக் கைது நடந்துள்ளது தெரிகின்றது.

2006 நடுப்பகுதிக்குப் பின்னர் திருமலை மாவட்டத்தில் இலங்கையரச இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ராணுவக் குழுக்களான கருணா – பிள்ளையான் குழுக்கள் உட்பட்ட ரி.எம்.வி.பி கட்சியனரும், இலங்கை ராணுவத்திற்கு தகவல் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சில முஸ்லீம் நபர்களும் தங்கள் சொகுசு வாழ்கைக்காகவும், ஆடம்பர தேவைக்காகவும் திருமலை மக்களை பல வழிகளிலும் துன்புறுத்தியுள்ளனர். கொலை செய்துள்ளனர். நாட்டை விட்டே ஓட வைத்துள்ளனர். என்ன? எப்போது நடக்கும் என தெரியாமல் மக்கள் பீதியின் மைத்தியிலேயே வாய் திறவா மௌனிகளாக வாழ்ந்துள்ளனர்.

தற்போது வவுனியாவிலிருந்து திருமலைக்கு மாற்றலாகி வந்திருக்கும் நீதிவான் இளந்திரையன் அவர்களின் உற்சாகத்தாலும் – விடாமுயற்சியாலும் அவரின் நேர்மைத்திறனாலும் இப்படியான குற்றச்செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றது. அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முகமென் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலத்திவைக்கப்படல் வேண்டும். இபபடி பாரபச்சமற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படுமானால் நாடு ஏதோ சிறிது தப்பிக்கொள்ள வழியுண்டு. 

மேலும் கருணா பிள்ளையான் மோதல்களால் சிந்துஜன் உட்பட 5 உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் கண்டெடுக்ப்பட்டது. அதை நியாயம் கேட்கப் போன சிந்துஜனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் உட்பட பார்த்து நிற்கையில் கழுத்து வெட்டிக்கொலை. பிரான்ஸில் இருந்து வந்த மகிலூரைச் சேர்ந்த வேலுச்சாமி நடேசன் என்ற கிலீபன் அல்லது ஜீவன் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். இவற்றுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் 17 பேர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அதின் பின்னர் கொல்லப்பட்டனர். இப்படியே குழுவாதங்களாலும் பதவி ஆசைகளாலும் இயக்க மோதல்கள் வன்முறைகள் முடிவின்றித் தொடர்கின்றது.

Related News:

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.

இன்று (08.03.09) அகில உலக பெண்கள் தினம்! : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

International_Women_Dayஇன்னும் இரு வருடங்களில் ‘அகில உலக பெண்கள் தினம் நூற்றாண்டு விழா’ எடுக்கவிருக்கிறது. 98 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினமான இன்று கிட்டத்தட்ட 61 நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள், ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் நிறையப் பயன் பெற்றவர்கள் பெண்கள் எனபது மறுக்க முடியாத உண்மை. கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களும் (முதலாம் உலக யுத்தம்1914-1919, இரண்டாம் உலக யுத்தம் 1939-1945) பெண்களின் வாழ்க்கை மாற்றமடைய முக்கிய காரணிகளாகவிருந்தன. ஆண்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற போருக்குச் சென்றார்கள். அதே நேரம் பெண்கள், இதுவரையும் ஆண்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் செய்த அரசியல், தொழிற்சாலை வேலைகளையும், போருக்கான ஆயுத உற்பத்தி வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டார்கள்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இதுவரை பெண்களின் நிலையில் பல முன்னேற்றங்கள் பெரும்பாலான ரீதியில் மேற்கு நாடுகளில்  ஏற்பட்டாலும் வளர்ச்சியடையாத, வளர்ச்சியடையும் பல நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையில் பெரிய விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று உலகில் அதி தீவிரமாக வளர்ந்து வரும் ‘அடிப்படைவாதக் கொள்ளைகள்’ (பெரும்பாலும் சமய ரீதியானது சில கொள்கைகள் இன ரீதியானவை) பெண்களை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிது.

ஓரு சமுதாயத்தின் கலாச்சார, சமயப் பாதுகாவலாளார்களாகப் பெண்கள் கணிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடைகள், வாழ்க்கை முறை என்பன கலாச்சாரப் பிணைப்பு, கலாச்சாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற பெயரில் ஆண்களால் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் பெண்ணினம், இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆணினம் பொறாமைப்படுமளவுக்குக் கல்விப் படிப்பில் மட்டுமல்லாது, பல தொழிற்துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றததைக் கண்டிருக்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட சிறு தொகையினர் அரசியற் தலைவிகளாக வந்திருக்கிறார்கள்.படை வீரர்களாகப் பணி புரிகிறார்கள். விஞ்ஞானிகளாக விண்ணில் பறக்கிறார்கள்.

ஆனாலும் இன்று, ”பெண்ணியம்” என்ற கோட்பாடு ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாது ஒடுக்கபட்ட அத்தனை மக்களுக்கும் போராடும் ஒரு தத்துவ நியதியைக் கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் மட்டும் தாங்கள் சரியென நினைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தப் பெண்ணிய வாதத்தையும் பெண்ணிய தத்துவங்களையும் கையாடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பல திசைகளிலுமிருந்தும் வருகின்றன.

என்னதான் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பெண்ணிய சிந்தனைகள் பல மாற்றங்களை முன்னெடுக்க முனைகிறது. பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் உண்டாக்கவும் தொழில் நிலையங்களில் சம உரிமை, சம ஊதியம் பெறவும் இப்போராட்டஙகள் உதவுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் ஆண்களின் ‘உடமைகள்’ என்ற சட்டம் இருந்தது. இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டு, மனைவியின் சம்மதம் இன்றி அவளை அவளின் கணவர் தொடுவதும் இன்று சட்ட விரோதமாகியிருக்கிது.

இப்படி எத்தயையோ மாற்றங்களைக் கண்டாலும், பெண்கள் உண்மையாகவே தாங்கள் போராடும் ‘சமத்துவத்தை’ அடைந்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் அந்தப் பெண்களின் கணவர் அல்லது காதலனாற் கொலை செய்யப்படுகிறாள். ஓவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியற் கொடுமைக்காளாகிறார்கள். சமய. குடும்ப கவுரவம் என்ற பெயரில் பல பெண்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்களாற் கொலை செய்யப்படுகிறார்கள்.

வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களாகப் பெண்கள் விலை பேசப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள்.

வளர்ச்சியடையாத நாடுகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களால் அவதிப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். வசதி படைத்த நாடான அமெரிக்காவிலேயே மிகவும் கொடிய வறுமையை அனுபவிப்பவர்கள் கறுப்பு இனப் பெண்களாகும். ஆனாலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பெண்கள் எப்போதும் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள்.கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் பெண்களின் பங்கு எப்படி முன்னிலை வகித்தது என்பது சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும்

1861-65  வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னால் நடந்த சமுதாய, பொருளாதார மாற்றங்கள் அமெரிக்காவில் பல மாற்றங்களை உண்டாக்கின. பெண்களும் சொத்துடமை வைத்திருக்கலாம் (கோன் வித் த விண்ட் என்ற படம் இதற்கு ஒரு உதாரணம்) என்பது போன்ற அடிப்படைச் சட்டங்கள் பெண்களின் வாழ்க்கை மாற்ற மடையவும் பொருளாதாரத்தில் உயர்நிலை காணவும் உதவின.

அத்துடன் 19ம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் இரஷ்யாவில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய மார்க்சியப் புரட்சிக் கருத்துக்கள் மேற்கத்திய பெண்களின் போராட்டத்திற்கும் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கம் வித்திட்டதா என்பது பற்றியும் பல ஆய்வுகள் செய்யலாம்.

பெண்கள் தங்கள் சம உரிமைக்கான போராட்டத்தை தொடங்க முதல் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் (1869) ஜோன் ஸ்ருவார்ட் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆண் பாராளுமன்றவாதியாகும்.

1893ல் பிரித்தானியக் காலனியாகவிருந்த நியுசீலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமையளிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பல போராட்டங்களுக்குப் பின்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரவேசம் மிகவும் குறைந்த நிலையியே இருக்கிறது. இவவருடம், சவுதி அரேபியாவில் முதற்தடவையாக ஒரு பெண் பிரதி நிதித்துவம் பெற்றிருக்கிறார்.

இன்று நடைமுறையிலிருக்கம் பெண்ணிய சிந்தனைகளுக்க வித்திட்டவர்கள் அமெரிக்கப் பெண்கள் என்றால் அது மிகையாகாது.

1909ம் ஆண்டு, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்த உடுப்புத் தொழிற் சாலையிலிருந்த பெண்களின் ஞாபகார்த்தக்கூட்ட அணிவகுப்பாக சோசலிசப் பார்டடியைச் சேர்ந்த பெண்களாற் தொடங்கிய (28.2.1909) இந்த நிகழ்ச்சி அகில உலகப்பெண்கள் தினம் என்று உருவாகியது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த முதலாவது பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்காக ஒரு தினத்தை விசேடமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஜேர்மனிய நாடடைச் சேர்ந்த சோசலிஸ்ட் பார்ட்டி அங்கத்தவரான கிலாரா ஷெட்கின் என்ற பெண்மணியாற் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த அகில உலகப் பெண்கள தின விழாக்களும் அதன் வளர்ச்சியும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் பெண்கள் தின விழாவை ‘அகில உலக மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.  உலகம் பரந்த விதத்தில் பார்த்தால் பெண்களின் அரசியற் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. ஆண்கள் தந்கள் அதிகாரத்தை நிலை நிறுததப் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

இன்று, பெண்கள் தினத்தன்று, தென்னிந்திய வியாபாரிகள் இவ்வினத்தை ‘மலிவு சேலை வியாபார’ தினமாக நடத்துகிறார்கள். மலிவான சேலைக்குள் பெண்ணிய சிந்தனைகளைச் சுருட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தியப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்னும் 33 விகிததிற்கு வரவில்லை. மத வெறி பிடித்த – (பெண்ணைத் தெய்வமென மதிக்கும்)  இந்து தீவிரவாதிகளன் கொடிய பாலியல் வெறிக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றக்கணக்கான தலித் பெண்கள் பலியாகிறார்கள்.

பாலஸ்தினியாவின் காஷாப் பகுதியிலும் சூடானின் டாவோர் அகதி முகாமிலும் ஆயரக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் படும் துயர் சொல்ல முடியாதவை.

இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழப் பெண்களும் குழந்தைகளும் போர் சூழ்நிலைக்குள் அகப்பட்டு சொல்லவொண்ணாத் துயரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கிழக்கிலங்கைப் பெண்கள் பலர் பாதுகாப்புப் படையின் பாலியற் கொடுமைக்காளாகித் துன்பப்படுகிறார்கள். இவை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியவை. இவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்பட அரசியல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படப் பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.