07

07

இலக்கியத்துக்கான நோபல் – பெரு நாட்டு எழுத்தாளர் வர்காஸ் லோசாவுக்கு

00mario-vargas-llosa.jpgபெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி  பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.

74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.

லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும். 1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.

பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம்  பயின்றார். 1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை  பார்த்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்

மன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்!

LandMine_Signவன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அதிகளவான பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் கணவரை இழந்த விதவைப் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எவ்.பி செய்திச்சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது. வறுமை காரணமாகவே இப்பெண்கள் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்! 

 கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள் )

மாதம் ஒன்றுக்கு 200 டொலர்களை அவர்கள் ஊதியமாகப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தொழில்களை விடவும் இத்தொழில் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதாக அப்பெண்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும். இளம் வயதுப் பெண்கள் பலருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக  இவ்வாறான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News:

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணி வெடியகற்றல் சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

கண்ணிவெடி அகற்றல்; 25 மோப்ப நாய்களுக்கு கண்டியில் பயிற்சி

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் – ஜனாதிபதியிடம் யசூசி அகாஷி உறுதி

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.குடாநாட்டில் தீவிர நடவடிக்கைகள் ஆரம்பம்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் யாழ்.குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள டெங்கு நோயைக் கட்டப்படுத்தும் நோக்கில் இன்று முதல் 13ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

  டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்விடங்களில் தீவிரமாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது, வீடுகள் தோறும் சென்று  டெங்கு நோய் குறித்து விளக்கமளித்து பொதுமக்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்குத் தூண்டுவது. டெங்கு நுளம்புகள் பரவக்கூடியதான விதத்தில் சுற்றாடலை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் டெங்கு ஒழிப்பு வாரத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அமர்வுகள் நவம்பர் மாதமே நடைபெறும்!

Lessons_Learnt_And_Reconciliation_Commissionபடிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இம்மாதம் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களை பதிவு செய்யப்போவதாக அறிவித்திருந்த போதும் தற்போது அது இந்நாட்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைக்குழுவின் அமர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் நவம்பர் மாதமே யாழப்பாணத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் ஆறு இடங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதிவுகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் ரூ.190 கோடியில் சுகாதார திட்டம்

cc.jpgவட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலை கள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். “வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது அம்சத்தின் கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் சங்கக்காரவுக்கு முதலிடம்

sangakkara.jpgஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.

2002 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தற்போது தான் முதன் முறையாக 3வது இடத்திற்கு சச்சின் முன்னேறியுள்ளார்.

இதுபோல், வி.வி.எஸ். லட்சு மண் 4 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைக் கைப்பற்றியுளார். இலங்கை வீரர் குமார சங்கக்கார முதல் இடத்திலும், ஷேவாக் இரண் டாமிடத்திலும் உள்ளனர். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப் பட்டது.

நாடுமுழுவதும் 2066 கிராமசேவகர் வெற்றிடங்கள். போட்டிப் பரீட்சை மூலம் நிரப்ப முடிவு

sena.jpgநாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்பட மாட்டார்களென பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் விளையாட்டு – அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் நேற்று தங்கப் பதக்கங்களை வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியில் ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார். மேலும் மல்யுத்தப் போட்டியில் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கின்து. நேற்றுக் காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியின் 58 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.