ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன்

Protest_Londonதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Reggie_TROதமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.

தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

”எமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் வீரமரணம் அடைந்துவிட்டார்!” எஸ் பத்மநாதன் த.வி.பு

Pirabakaran_VPoddu_AmmanSoosai_Colஎமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் கடந்த 17ம் திகதி இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி யுத்தத்தில் வீரமரணமடைந்த செய்தி எனக்குத் தெரிந்த நண்பர்களுடாக உறுதி செய்யப்பட்டது. தலைவர் வீரமரணமடைந்துவிட்டார்.

அந்த மகாபாரத்த்தில் கூறப்படும் கண்ணின் பாத்திரம் போல எனது தலைவன் தனது இரு வெற்றிப் புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பினார். வெற்றிப் புதல்வர்கள் என் தலைவனின் மடியில் வந்து வீழ்ந்தார்கள். சிங்கள இராணுவத்தின் குண்டடிபட்டு. இருந்தும் மனம் தளராத தான் முன்வைத்த தனது விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்களின் விடிவை நோக்கி எமது மக்களின் சுதந்திரத்தை நோக்கி தான் எடுத்த பயணத்தை தொடர்ந்து சிங்கள இராணுவத்துடன் போராடி சண்டையில் வீரமரணம் அடைந்தது எம்மினம் மிகவும் கவலையுற்ற இந்த நேரத்தில் வீர மகா புருசரை தமிழினம் கண்டது ஒருவகையில் எமது இனத்திற்குப் பெருமைதான். அவருடைய மனைவி இறுதி மகன் பாலா இவர்களுடைய இவர்கள் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

என்னைப்பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல்களின்படி தளபதிகள் பொட்டம்மான் சூசை போன்றவர்களும் தலைவனின் பாதையில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள்.

செல்வராஜா பத்மநாதன் பிபிசி தமிழோசைக்கு இன்று (மே 24 2009)வழங்கிய செவ்வி

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதை தமிழழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நேரடி மோதலில் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

ஆனால் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் போராளிகள் குடும்ப அங்கத்தவர்கள் சரணடைந்த பின்னரே மரண தண்டனை வழங்கும் பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலைத் தகனம் செய்ததாக அறிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் நலமாகவே உள்ளார் என்று நிச்சயமாகத் தெரிவித்து இருந்த சர்வதேச இணைப்பாளர் இன்று இதனை உறுதிப்படுத்த முன்வந்தமையின் பின்னணி தெரியவரவில்லை. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

 செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

24 வைகாசி 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.

கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு  எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.

அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.

தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.

போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.

தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

செல்வராசா பத்மநாதன்
அனைத்துலக வெளியுறவுச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

முன்னைய செய்தி: பிரபாகரன் – பொட்டு அம்மான் – சூசை : புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடைசியாக இடம்பெற்ற நேருக்கு நேரான மோதலில் இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.

மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பலனளிக்காத நிலையில் கடைசியாக நடைபெற்ற மோதலில் இவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களுடைய உடலங்கள் இன்று மாலை கொழும்பிற்கு எடுத்துவரப்பட உள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் குடும்பத்தினரும் உயிரிழந்து உள்ளனர்! – எஸ் பத்மநாதன் த வி பு

LTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.