09

09

யாழ். அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் ஒதுக்கீடு.

Jaffna_Developmentயாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதிகள் பலநோக்கு கூட்டுறவுசங்கக் கிளைகள், பொதுக்கட்டடங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள் திருத்துதல் முதலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் மீட்சித்திட்டத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சேமமடுவில் காட்டுயானைகள் அட்டகாசம்.

Elephant_Went_Wild_2007_Galleவவுனியா சேமமடு மக்கள் குடியிருப்புக்களில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருகின்றன. குடியிருப்புக்களில் புகுந்து பயன்தரு மரங்களை அழித்து வருவதோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இக்காட்டு யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இப்பகுதியில் இக்காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவத்தினரும் இணைந்து இந்த யானைகளை நெடுங்கேணியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இந்திய அரசாங்கம் அமைக்கவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Kilinochiஇந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கிளிநொச்சிப் பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீட்டுத்திட்டம் அடுத்துதவருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை யடுத்து இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஐந்து இலட்ச ரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி உட்பட வன்னியில் வீடுகளை இழந்தவர்களுக்கு ‘நேர்ப்’ நிறுவனத்தினுடாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்துப்பட்டு வருகின்றன. 3 இலட்சத்து 25 ஆயிரம் ருபா பெறுமதியான வீடுகளே இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.

பல பொதுமக்களிடம் காணி உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீட்டுத்திட்டங்களுக்கு பதிவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

LandMine_Signவட மாகாணத்தில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இக்கண்ணிவெடியகற்றும் பணியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுடன் 1000 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும் அவற்றை மீட்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள 20 ஆயிரம் முல்லைத்தீவு மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

மீசாலையில் பொதுமக்களிடம் பணம் சேகரித்த சிங்கள இளைஞர்கள் இருவர் கைது.

மீசாலைப்பகுதி வீடுகளில் பணம் சேகரிக்கச் சென்ற இரு சிங்கள இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி இவர்கள் மீசாலைப் பகுதி வீடுகளில் பணம் சேகரித்துள்ளனர். பணம் வழங்க மறுப்புத் தெரிவித்தவர்களிடம் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

அப்பகுதி சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குச் சென்று இவர்கள் பணம் கேட்ட போது விட்டிலிருந்த பெண் கணவருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சாவகச்சேரி பெலிஸாரினால் குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவ்விளைஞர்களுக்கு பணம் வழங்கியவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் கிளிநொச்சிப் பகுpகளிலும் இவ்வாறு சிலர் சிறுவர் இல்லம், அநாதைகள் இல்லம் எனக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் நிதி சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பதை பாதுகாத்துக் கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்ளும் உபாயத்தை தேடுவோம் – அமைச்சர் தேவானந்தா

douglas-devananda.jpgதமிழ் இனத்தின் விடுதலை என்ற பெயரில் கடந்த 60 வருடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இழுத்து விடப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தியிருக்கின்றார்கள். எனினும் ஜனநாயக வழி ஆயுத வழியென இரண்டு வழிகளில் நடந்த போராட்டங்களால் இன்றுவரை எதனையும் சாதிக்க முடியவில்லையென அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நல்லூர் பிரேதச செயலகத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை  ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இனத்தின் விடுதலைக்காக 30 வருடம் ஜனநாயக வழியிலான போராட்டமும் அதன் பின்னர் 30 வருடங்கள் ஆயுத வழியிலான போராட்டமும் நடந்து முடிவுற்றுள்ளது.இந்த இரண்டிலுமே தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஜனநாயக வழயிலான போராட்டத்தின் முகம் சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் ஆயுதங்களை ஏந்தினோம்.ஆனால் பின்னர் ஆயுத வழியிலான போராட்டமும் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே நின்றமையினால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற முடியவில்லை.ஆகவே இரண்டு வழியிலான அனுபவங்களையும் நாங்கள் கொண்டிருக்கின்றோம்.அதனடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வழியை தேர்ந்தெடுக்கப் போகின்றோம்.சில விடயங்களை எதிர்க்கத்தான் வேண்டும் அதேவேளை தேவையானவற்றை பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வளாகம் வேண்டாம் பல்கலைக்கழகம் தான் வேண்டும் என வளாகம் அமைக்கப்பட்ட போது எதிர்த்தார்கள்.அதையும் மீறி வளாகம் அமைக்கப்பட்டு இன்றைக்கு அது பல்கலைக்கழகமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் இந்த முடிவைத்தான் அடையும் என நாங்கள் அன்றைக்கே கூறியிருந்தோம்.ஆனால் நாங்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டோமே தவிர வேறெதுவும் நடக்கவில்லை.

அதேபோல இன்றுள்ள பாதையும் எங்கு போய்முடியும் என்பது எனக்குத் தெரியும்.பகவத் கீதையை நினைத்துப் பாருங்கள் எல்லாம் நன்றாக நடந்தது எல்லாம் நன்றாகவே நடக்கவிருக்கிறது.இருப்பதையாவது காப்பாற்றிக் கொண்டு தேவையானவற்றை பெற்றுக் கொண்டும் உபாயத்தை தேடுவோம்.நாளைக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கம் நீங்கிய வாழ்க்கை ஜனாதிபதியால் பெற்றுத் தரப்பட்டுள்ளது.அதை பயன்படுத்துவோம் என்றார்.இந்நிகழ்வில் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்,பாராளுமன்ற உறுப்பினர் அலென்டின், மாநகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் இதன் போது ஊருணி என்ற நூலும் வெளியிடப்பட்டது.

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ், கிளினிக் வாகனங்கள் கையளிப்பு

வட பகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வட மாகாண சபை 150 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டி களும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்க ளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலும் விசேட உரை

india-obama.jpgஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.

பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.காங்கேசன் துறை வீதியை அகலமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அகலமாக்கி காப்பற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகுமென வீதி அகலமாக்கும் பணியை பொறுப்பேற்றிருக்கும் சீன ரயில்வே கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியை அகலமாக்கும் பணியில் எழுபது சதவீதமான பணியை நிறைவேற்றியுள்ளது. கால நிலை சீராக இருக்குமானால் இப்பணி அடுத்தமாத முற்பகுதியில் முடிவுபெறும் என அந்நிறுவன செயல்பாட்டு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

Prof_Hoole9-11-2010
ஆசிரியர்
தேசம் நெட்
 
ஆசிரியர் த ஜெயபாலன் அவர்கள் அறியவும்,

யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.

தேசம்நெட் இல் யாழ் பல்கலைகழகத்தின் முன்னேற்றத்தையிட்டு நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் அவற்றில் உள்ளடங்கிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
 
ஆனால் போட்டி உச்சக் கட்டத்தை அணுகும் இவ்வேளையில், என்னைப் பற்றிப் பல பொய்ப் பிரச்சாரங்கள் பரவலாகின்றன. இக்கட்டுரைகள் என்னால் அல்லது என் வேண்டுகோளுக்கு இணங்கவே எழுதப்படுபவை என்ற பொய்யும் அவற்றிலொன்று.
 
நாமிருவரும் நண்பராகிலும் சுயாதீனமாக இயங்குகிறவர்கள். ஆகவே, நான் சொல்லி நீங்கள் இக்கட்டுரைகளை எழுதவில்லை என்பதையும் இவற்றை நான் முதல் படித்தது உங்கள் இணையத் தளத்திலேயே என்றும் வாசகர்களுக்கு உறுதியாய்த் தெரிவிக்கிறேன்.
 
இதைப் பிரசுரப்படுத்துவதற்கு என் மெத்தப் பெரிய உபகாரங்கள்.
 
இப்படிக்கு

சா. இரத்தினஜீவன் ஹே. ஹூல்
88 செம்மணி வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்