ஜெயபாலன் த

ஜெயபாலன் த

‘மனுசி ஒரு பொம்பிளை’ ஆக இருப்பது ரொறன்ரோ மேயருக்கான தகுதி! – சிரிபிசி வானொலியின் சர்ச்சைக்குள்ளான விளம்பரம் : த ஜெயபாலன்

George_Smitherman_Mayoral_Candidate_TorontoRob_Ford_Mayoral_Candidate_Torontoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் ரொறன்ரோ மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது. ரொறன்ரோ சனத்தொகையும் நிதிவருவாயும் அதிகமுள்ள கனடாவின் ஆறாவது பெரும் அரசாங்கமாகும். இதனைக் கைப்பற்ற Rocco Rossi, George Smitherman, Joe Pantalone, Rob Ford ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் றொப் போர்ட், ஒன்ராரியோவின் முன்னாள் துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற உலகத் தலைநகர்களில் ரொறன்ரோ முக்கியமானது.

இந்தத் தேர்தலில் வலதுசாரியான றொப் போர்ட் க்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிரிபிசி வானொலி லிபரல் கருத்தியல் உடையவரும் ஒத்தபாலுறவைக் கொண்டவருமான ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிராக அவருடைய பாலுறவை கொச்சைப்படுத்துகின்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேர்தலில் றொப் போர்ட்க்கும் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுககையில் அவர்களுக்கு இடையே ஒரு வீத வாக்கு வித்தியாசமே காணப்படுவதாக வாக்களிப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோவில் 40 வீதமானவர்கள் தென்னாசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களது சமய கலாச்சாரக் கூறுகள் ஒத்தபாலுறவுக்கு எதிரானது ஆகையால் இத்துருப்புச்சீட்டு லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

வலதுசாரியான றொப் போர்ட் சிறுபான்மை இனங்களிடையே காணப்படுகின்ற ஒத்தபாலுறவுக்கு எதிரான சமய கலாச்சாரக் கூறுகளைக் குறி வைத்து இவ்வாறான விளம்பரங்களுக்கு துணையாக நின்றிருக்கலாம் என கனடியப் பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஆனால் ‘மற்றையவருடைய வாழக்கைத் தெரிவு பற்றி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் பன்மைத்துவத்தை ஆதரிப்பவன். அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்கிறார் றொப் போர்ட்.

தேர்தல் முடிவுகள் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிரானதாக அமைந்தால் ஒத்தபாலுறவுக்கு எதிரான இவ்விளம்பரம் பாரிய சட்டச் சிக்கலுக்கு உள்ளானதாகலாம். ஜோர்ஜ் ஸ்மிதர்மன் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட பாலியல் சமூகத்திற்கு எதிரான இவ்விளம்பரம் ஒரு அலையை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. ஒத்த பாலுறவுச் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற ‘எக்ஸ்ரா’ என்ற அமைப்பு ஏற்கனவே இவ்விளம்பரத்தை கடுமையாகக் கண்டித்து உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிரிபிசி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம்:
‘முதலாமவர்: மணியன்னை மேயர் எலக்சனில யாருக்கு உங்கள் வோட்டுக்கள்?
இரண்டாமவர்: (நளினச் சிரிப்புடன்) இதென்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு சமயம், கலாச்சாரம் என்று இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ அவற்றை மனுசி ஒரு பொம்பிளை.
அதுமட்டுமல்ல வீடு வேண்டேக்க மாற்று வரி மற்ற வரிகளையும் குறைப்பாராம்.

முதலாமவர்: அப்ப இமிகிரேசன்?
இரண்டாமவர்: (மீண்டும் நளினச் சிரிப்புடன்) அது பெடரல் கவுமன்ற் விசயம். வெள்ளையன்ர வோர்ட்டை எடுக்க வாக்கும்.
முதலாமவர் அப்ப நானும் ரொப் போரட் க்குத் தான் போடப்போறன்.’

இந்த விளம்பரத்தில் ரொறன்ரோ மேயர் ஆவதற்கு வேட்பாளரின் ‘அவற்றை (றொப் போர்ட் இன்) மனுசி பொம்பிளை’ யாக இருப்பது முக்கிய தகுதியாகக் காட்டப்படுகின்றது. ஏனெனில் எதிராக நிற்கின்ற வேட்பாளர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஒத்தபாலுறவுடையவரை மணந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கின்றார்.

வலதுசாரியான றொப் போர்ட்டை ஆதரிக்கின்ற அதே வலதுசாரிக் கருத்துக்களைப் பரப்புகின்ற சிரிபிசி வானொலி ஜோர்ஜ் ஸ்மிதர்மன் யை ‘அலி’ எனவும் விமர்சித்துள்ளார். ஒருவருடைய பாலியல் தன்மை தொடர்பாக மெலினத் தன்மையைக் கடைப்பிடித்த இவ்வானொலி, மேற்படி விளம்பரம் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இவ்வாறான ஒரு விளம்பரம் ஒரு கிறிஸ்தவ அமைப்பினரூடாக தங்களுக்கு வந்ததாகவும் அதனை விளம்பரப்படுத்த தாங்கள் மறுத்துவிட்டதாகவும் சிரிஆர் வானொலியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேசம்நெற் சிரிபிசி வானொலியுடன் தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்பிற்குப் பதில் இல்லை.

‘வெள்ளையன்ரை வோர்ட்டை எடுக்கவாக்கும்’ போன்ற இனவாதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளையர்கள் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதை கட்டமைத்துக் கொண்டே அவ்வாறு குடிவரவாளர்களுக்கு எதிரானவருக்கே வாக்களிக்குமாறு அத்தமிழ் விளம்பரம் கோருகின்றது. அண்மையில் கனடாவிற்கு கப்பலில் வந்த நூற்றுக் கணக்காண தமிழர்களுக்கு எதிராக றொப் போர்ட் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் றொப் போர்ட் கோரி உள்ளார். அவ்வாறு இருந்தும் அண்மையில் குடியேறிய தமிழ் சமூகத்தின் வானொலி குடிவரவுக்கு எதிரானவரை ஆதரிக்குமாறு விளம்பரப்படுத்தியது முரண்நகையாக உள்ளது.

அதற்கு முக்கியமாக எதிர்த்தரப்பு வேட்பாளரின் பாலியல்தன்மை காரணமாகி உள்ளது. வட அமெரிகாவிலேயே ஒத்தபால் திருமணங்களை ஏற்றுக்கொண்ட நாடு கனடா. பாலியல் தொடர்பாக லிபிரல் கருத்துக்களை உடையநாடு. அங்கு ஒருவருடைய பாலியல் தன்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது சட்டத்திற்கு முரணாணது. உள்ளுணர்விற்கு ஒவ்வாதது.

இந்த விவகாரம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சியை கண்காணிக்கின்ற சிஆர்ரிசி அமைப்புக்கு குற்றச்சாட்டுக்கள் சென்றுள்ளது. சிஆர்ரிசி அமைப்பும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இவ்விளம்பரத்துக்கு எதிராக கனடிய தமிழர்கள் மத்தியில் பரவலான எதிர்க் கருத்துக்களும் கிளம்பி உள்ளது. இவ்விளம்பரத்தை வெளியிட்டமை இனவாதமானது, ஒத்த பாலுறவுக்கு எதிரானது, எவ்வாறான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்வாறான மோசமான விளம்பரங்களை வெளியிட முடியாது என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ நூல் வெளியீடும் ஆவணப்பட திரையிடலும்

Yamuna Rajendiranஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )

‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.

ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.

மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

UK_Student_Visa_Advertலண்டன் கல்லூரிகளில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டி வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் லண்டன் வந்திறங்கியதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் படிக்க வந்த கல்லூரிகள் உள்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையாததால் மூடப்பட்ட நிலையில் கட்டிய பணம் இழக்கப்படுகிறது.

2006ல் London Reading Collegeக்கு 3 ஆண்டுகள் பட்டப்படிப்பான Business Managment படிப்பதற்கு 3000 பவுண்வரை கட்டி விசா பெற்றுவந்த எஸ் கணேஸ்வரன் 2007ல் இரண்டாவது ஆண்டுக்கு வந்த போது அக்கல்லூரி உள்துறை அமைச்சின் தரப்பட்டியலில் இருந்த நீக்கப்பட்டது. அதனால் அம்மாணவன் London School of Business and Computing என்ற மற்றுமொரு கலலூரியில் மேலும் ஒரு 3000 பவுணைக் கட்டித் தன் படிப்பைத் தொடர்ந்தார். அதுவும் நீடிக்கவில்லை. 2008ல் அக்கல்லூரியும் தரப்படிட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்னுமொரு கல்லூரிக்குப் இன்னுமொரு 3000 பவுண் கட்டி விசாவைப் புதுப்பிக்க முடியாத மாணவன் ஊரில் பட்டுவந்த கடனை அடைக்க முடியாது உள்துறை அமைச்சுக்கு ஒழித்து சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.

இவர் படிக்க வந்த இரு கல்லூரிகளில் மட்டும் 200 இலங்கை இந்திய மாணவர்கள் வரை கற்றுக்கொண்டிருந்தனர். உள்துறை அமைச்சின்  தரப்பட்டியல் இறக்கத்தினால் 50ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்க வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 1000 பவுண் கட்டி CECOS College க்கு கணணித் தொழில்நுட்பம் கற்க ஓகஸ்ட் 31 09ல் லண்டன் வந்தார் எஸ் ஹரிகரன். வந்து 7 நாட்களில் செப்ரம்பர் 7 09ல் அவர் படிக்க வந்த கல்லூரி உள்துறை அமைச்சால் மூடப்பட்டது. கட்டிய பணத்தை இழந்தார். இதே கல்லூரிக்கு வர 3500 பவுண்களை கட்டிய ஹரியின் மூன்று நண்பர்களுக்கு கல்லூரி மூடப்பட்டது, தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதால் விசா  வழங்கப்படவில்லை. ஆனால் பயண ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் அவர்கள் கட்டிய தொகையின் 50 வீதத்தையே பலத்த போராட்டத்தின் பின் மீளக்கையளித்தார்.

மாணவருக்கான விசா உத்தியைப் பயன்படுத்தி பல கல்லூரிகள் லண்டனிலும் புறநகர்ப் பகுதிகளிலும் முளைத்துள்ளன. குறைந்த கட்டணத்தை காட்டி மாணவர்களைக் கவரும் இக்கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

மேலும் மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும் போது 350 பவுண்களை உள்துறை அமைச்சு அறவிடுகிறது. குறிப்பிட்ட கல்லூரிக்கு விசா மறுக்கப்பட்டால் கட்டணத்தையும் இழக்கின்றனர். இன்னொரு கல்லூரிக்கு விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்க மீண்டும் 350 பவுண்கள் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளின் மத்திய தர உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் பலர் தங்கள் இளமைக் கல்வி வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசு அனுமதிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.