நூலகம்

நூலகம்

நூல்கள் அறிமுகம், விமர்சனம் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றிய பதிவுகளும் செய்திகளும்.

லண்டன் நூலுரையாடல்: பாமரன் உண்மையில் பாமரனா?

நேற்று ஒக்ரோபர் 23 இல் ‘திரள்’ இலக்கிய குழுமம் ஏற்பாடு செய்த தோழர் பாமரனின் ‘பகிரங்க கடிதங்கள்’ நூலின் வாசிப்பனுபவமும் கலந்துரையாடலும் ஹரோவில் சிறப்பாக நடைபெற்றது. இருபது வரையான மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வை ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் பா நடேசன் தலைமையேற்று நடத்தினார். கோவிட் காலத்தில் கருக்கொண்ட ‘திரள்’ குழுமத்தின் முதலாவது நிகழ்வு இதுவென்பதிலும் பார்க்க பா நடேசன் தம்பதியர் மீது அரசியல் என்ற பெயரில் சேறடிப்பு மேற்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது நேரடி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சட்டவல்லுநர், விமர்சகர் கருணா தம்பா பாமரனுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பாமரன் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழும்பிய குரல் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் ரஜிதா சாம், பாமரன் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரும்புள்ளிகளாக இருந்தாலும் அவர்களை தன் எழுத்துக்கள், கிண்டல்கள் மூலம் விமர்சனத்திற்கு உட்படுத்தியதாகவும் அவருடைய எழுத்துக்களில் இருந்த நளினத்தையும் விதந்துரைத்தார். திரைச் சமூகத்தைச் சேர்ந்த கே பாலச்சந்தர், சங்கர், மணிரத்தினம், வைரமுத்து, வாலி ஆகியோர் உட்பட ஜெயலாலிதா, வைக்கோ, சோ ராமசாமி ஆகியோரை நோக்கியும் பகிரங்கக் கடிதங்கள் எழுதப்பட்டு இருந்ததை விதந்துரைத்தார். ஊடகவியலாளர் விமர்சகர் கோபி ரத்தினம் தமிழ் தேசிய அரசியலில் பாமரனின் நிலைப்பாட்டை விதந்துரைத்தார். அவருடைய எள்ளல் அங்கத எழுத்துமுறை சொல்லவரும் விடயத்தினை மலினப்படுத்தி விடும் என்பதால் தான் அதனை விரும்புவதில்லை என்றும் ஆனால் பாமரனின் எழுத்துக்களில் தனக்கிருந்த ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

விமர்சகர் வேலு நூல் ஆய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு லண்டன் தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் மேடைக்கு வெளியே வெளிப்பட்டது.

ஆய்வாளர்களைத் தொடர்ந்துநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஊடகவியலாளர் குணா கவியழகன் பாமரன் ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்று பாராட்டினார். தமிழகத்தில் கருத்தியல்களை உருவாக்கும் அதிகாரமையங்களை கேள்விக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் சாம் பிரதீபன் பாமரனைக் கொண்டாட நான் வரவில்லை என்றாலும் அவருடைய எழுத்துக்களை மதிப்பதாக குறிப்பிட்டார். ஆனால் வைரமுத்துவின் கட்டெறுப்பு எங்கு ஊருகின்றது என்பதைப் பார்ப்பவர்கள் மகளீரின் தொப்புளுக்கு அப்பால் வைரமுத்து எழுதியவற்றை பார்க்க வேண்டும் என்றார்.

பாமரனுடைய எழுத்துக்களை இன்றே சந்திக்கிறேன் என்று கூறிய தேசம் ஜெயபாலன் இதுவரை கதைத்தவர்களின் அடிப்படையில் பாமரன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை என்றும் கெ பாலச்சந்தரும் மணிரத்தினமும் படைத்தவை இன்ரலெக்சுவல் கோஸ்டியை நோக்கியே இருந்தது. இவர்கள் எந்த அதிகாரத்தினதும் மையப்புள்ளிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் வாலி, வைரமுத்து கூட அதிகார மையத்தின் மையப் புள்ளிகள் அல்ல. காதலர்ககள் துணைவர்கள் எறும்புவிட்டதற்கும் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஜெயபாலன் கேள்வி எழுப்பினார். கே பாலச்சந்திரிலும் மணிரத்தினத்தைக் காட்டிலும் அதே காலகட்டத்தில் சிறந்த படங்களைத் தந்தவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டுமே ஒழிய இன்றைய சூழலோடு அதனை ஒப்புநோக்க முடியாது என்றும் குமுதம் சஞ்சிகை ஒன்றும் பெண்ணடிமைத் தனத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான புரட்சிகரமான சஞ்சிகையுமல்ல என்பதையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்தவர் என்பதற்காக தமிழ் தேசியத்திற்காக நின்றவர் என்பதற்காக அவருடைய மறுபக்கத்தை நோக்காமல் தவிர்க்க முடியாது என்றும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.

திரைப்பட விமர்சகர் தயா அவர்களும் கே பாலச்சந்தர் மணிரத்தினம் தொடர்பில் வைத்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். அந்தந்த காலகட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை அந்தந்த காலகட்டத்துடனேயே ஒப்பு நோக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு படைப்பை வைத்து கலைஞர்களை முத்திரை குத்திவிட முடியாது என்பதையும் தயா சுட்டிக்காட்டினார். மேலும் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்க பாமரன் கையில் எடுத்த ஓணம் பண்டிகை கூட ஒரு மளுப்பல் அரசியலே என்பதையும் தாயா தெளிவுபடுத்தினார். கருணாநிதியையும் திமுகா வையும் விமர்சிப்பதில் இருந்த தயக்கமே அதற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான அருட்குமாரின் விமர்சனம் பாமரனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்ததாக அமைந்தது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் தமிழர்களைக் கைவிட்ட திமுக அரசு சார்ந்து பாமரன் இயங்குவதை அவர் தனது உரையில் கடுமையாகச் சாடி இருந்தார்.

ஊடகவிளலாளர் சுகி ரத்தினம் பாமரன் 300 வரையான நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்றை இரண்டை வாசித்துவிட்டு தன்னால் முழுமையான விமர்சனத்தை வைக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனாலும் ‘பாமரன்’ என்ற புனைப்பெயர் ஒரு அரசியல் சார்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். குணா கவியழகன் குறிப்பிட்டது போல் பாமரன் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் அல்ல அவர் ஒரு சமூக செயற்பாட்டளரே என்றார் சுகி. பாமரனின் இரு நண்பர்களும் அங்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் பாமரன் எப்போதும் சமூக நீதிக்காக குரல் எழுப்பிய ஒருவர் என்பதை அழுத்தி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்! : சந்தரெசி சுதுசிங்ஹ

என் செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது!

இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்து மறைந்த போதும் இலைமறை காயாக சில உறவுகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது. 1981 மே 31 இரவு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினால் தெற்கில் இன்றும் பலர் மனவேதனையிலும் வெப்பிகாரத்திலும் இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் இணைந்து நூலகவியலாளர் என் செல்வராஜாவின் வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் தெற்கில் ஒரு சிறு நூலகம் அமைக்க முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர். நூலகவியலாளர் என் செல்வராஜா பற்றி சந்தரெசி சுதுசிங்ஹ The Colombo Post என்ற இணையத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் தேசம்நெற் இல் பிரசுரிக்கப்படுகின்றது.
._._._._._.

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்!

இந்தியா மீதுள்ள எனது பற்றை தகர்த்து என்னை தன் வசப்படுத்தி இந்திய நட்பை காட்டிலும் யாழ்ப்பாண உறவு பாலத்தை கட்ட வேண்டும் என்று மனதுக்குள் ஒலிக்கிறது. அந்த உறவை நினைக்கையில் விட்டுக்கொடுக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. எனது உண்மையான உணர்வை மறைத்து மனதை அடக்கி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு அவர் மீது காதல் தோன்றுகிறது? எவ்விடத்திலும் துணிச்சலுடன் அதை எடுத்துக்கூற தயங்கமாட்டேன். உறவு என்பது காதலை தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட நேசத்திற்குரிய மனிதரைப் பற்றிய பாசக் கதைதான்.

இக்கதையின் நாயகனை பற்றி கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் என்னிடம் கூறினார். இடைவிடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறுவதும் அப்பதில்கள் உயிரோட்டம் கொண்டிருப்பதும் அவரது தனித்துமே. அப்படி ஒரு விடைக்காக அறிமுகப்படுத்திய மனிதர் தான் பல்லாயிரம் கேள்வி கனைகளுக்கு பதிலாக
இருப்பவர் தான் நடராஜா செல்வராஜா அவர்கள்.

செல்வராஜா என்பவர் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நூலக வரலாற்றில் மிளிரும் தாரகை. அறிவு, மனிதநேயம் நிறைந்த படைப்பே இத்தாரகை. அவ்வப்போது எனக்கு தேவையான தகவல்களை இந்த பதில் கூறும் மனிதரிடம் பெற்றுக்கொண்டேன். இவர் இலங்கை திருநாட்டுக்கு மட்டுமல்லாது முழு ஆசிய பிராந்தியத்திற்குமே பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறார். பிரித்தானிய வழங்கும் IPRA (பொதுமக்கள் தொடர்புக்கான விருது) என்ற விருதை பெற்ற முதலாவது இலங்கையாராகவும் ஆசிய இனமாகவும் இவர் கொண்டாடப்படுவதே இதற்கு காரணம். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நூல்களின் பட்டியலை தயாரித்தவரும் மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கு முற்போக்கான பதிலும் இவரே.

நடராஜா செல்வராஜா:

அண்மை காலத்தில் இவர் வடக்கிலும் தெற்கிலும் நூலகங்களின் தொடர்பினை ஏற்படுத்தி கொடுத்த இவர் தன் தலையாய கடமையாக அதனைச் செய்தார். ‘வெள்ளவத்தையில் இந்த நூலகத்திற்குச் செல்லுங்கள், இதோ அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம், யாழ்ப்பாணத்தில் இதோ இந்த இடத்தில் தகவல்களை பெறலாம்’ என்று தங்கையை போல என்னை வழிநடத்திய இவர் யாழ்ப்பாண காதலின் இன்னுமொரு மைல்கல்லாக நிற்கின்றார்.

அண்மையில் நான் ‘புத்தகமும் நானும்’ என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் மஹிந்த தசநாயக்க பற்றி ஒரு குறிப்பை எழுதினேன். அதை பார்த்துவிட்டு அண்ணன் செல்வராஜா என்னையும் மஹிந்த அண்ணாவையும் அழைத்து சுவாரசியமான ஒரு கதையைச் சொன்னார்.

‘நான் உங்களுக்கு புத்தகங்களை தருகிறேன். ஆனால் அவற்றை வடக்கிலோ மலையகத்திலோ இருக்கும் தமிழ பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு அல்ல. இங்குள்ள சிங்கள பிள்ளைகளுக்குத் தான் நான் அவற்றை கொடுக்கின்றேன் என்றார்’. அந்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆணித்தனமாக அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் கேள்வி ஏக்கங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுத்தார்.

‘இதுதான் விஷயம். நான் “Book Abroad” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரும் எண்ணிக்கையான நூல்களை அனுப்புகிறேன். கொல்களன் கணக்கில் அனுப்புகிறேன். நாங்கள் வடக்கில் பிள்ளைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்கின்றோம். அதேபோல மலையகச் சிறுவர்களுக்கும் அனுப்புகிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம் அதுதான், வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து கொடையாளர்களிடமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் இப்படி புத்தகங்கள் கிடைத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கு அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இப்படி புத்தகங்களை வழங்குவதில்லை என்ற விடயம். அதனால் தான் சொல்கிறேன், இப்புத்தகங்களை பின்தங்கிய கிராம புறங்களைச் சேர்ந்த சிங்கள பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று. நான் அனுப்புகின்ற புத்தகங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றை நான் தருகிறேன். அதேபோல ஆங்கில புத்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள புத்தகங்களை வாங்க நான் பணம் தருகின்றேன்’. இப்படி கூறிய அவரை கௌரவிக்கும் முகமாக நாங்கள் பின்தங்கிய கிராமங்களை தேடிச் சென்று புத்தகங்களை பெற்றுக்கொடுக்க பணியாற்றுவோம்.

நாங்கள் எப்போதும் நூலக வசதிகளே இல்லாத பாடசாலையைத் தேடிப் பிடித்து நூலகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை ‘நடராஜா செல்வராஜா’ அந்நூலகத்திற்கு சூட்ட முடியுமென்றால் அதுவே இச்சமூகத்திற்கு சிறந்த ஒரு செய்தியாக அமையக்கூடும். வடக்கில் நூலகங்களுக்கு தீ வைத்த இருண்ட நினைவுகள் இருக்கும் தருவாயில், வடக்கிலிருந்து தெற்கிலுள்ள சிங்கள பிள்ளைகளுக்காக இதுபோன்ற கருணை காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், அவர்களுக்கும் எமக்கும் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதையும், எம்மிடையே பிரிவினை, மோதல் இருப்பதாக கூறிவரும் பலருக்கு அது தவறான புரிதல் என்பதை உணர்த்தும். தற்போது நாம் அதற்காக உழைக்கின்றோம்.

நன்றாக சிங்களத்தில் உரையாற்றும் இவருக்கு தென்னிலங்ககையில் பலர் இருக்கின்றார்கள். நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் மகா வித்தியாலயம்) கல்வி பயின்ற இவர் இலங்கை நூலக விஞ்ஞான சங்கத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ‘தங்கை, நம் இரு சமூககங்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது சிங்கள, தமிழ் என்று அரசியல் வாதிகளுக்குத் தான் பிரச்சினை உள்ளது’ அப்படித்தான் அவர் சுருக்கமாக கூறுவார். எனது யாழ்ப்பாண மக்கள் நமக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் இடையில் குரோதம் இருப்பதாக என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை.

‘தங்கை தாங்கள் என் மூத்த மகளை விட ஒரு வயது இளையவர்.. உங்களை போன்றவர்கள் இந்த நிலத்திற்கு பெறுமதிமிக்கவர்கள்’. அவர்களது அன்பில் நாம் எம்மை காணுகிறோம். செல்வராஜா என்ற மனிதர் இந்நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மறந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்க கூடிய ஒரு புத்தகம் போன்றவர். நாங்கள் அப்புத்தகத்தை வாசிக்கின்றோம். இப்புத்தகம் நாட்டின் தமிழ் சிங்கள அனைவராலும் அன்போடு நேசிக்கும் புத்தகமாக அமையுமென நம்புகின்றோம்.

நான் யாழ்ப்பாண நேசகி,
சந்தரெசி சுதுசிங்ஹ
மாத்தறையிலிருந்து
sandaraseepriyathma@gmail.com

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

Front_Cover_UoJ_A_View‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள யாழ் பல்கலைக்கழகம் பற்றி நான் (த ஜெயபாலன்) எழுதிய முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது. தேசம்நெற் இல் யாழப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான அணிந்துரையாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்கள் சில நூலின் இறுதியில் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

._._._._._.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மே 18, 2009 வரையான தமிழீழ விடுதலைப் போராட்டம், அம்மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையையே ஏற்படுத்தியது. மேலும் முப்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பல பத்து ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களைப் பின்நோக்கித் தள்ளியுள்ளது.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இவற்றின் விளைவாகவும் தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் தமிழ்ப் பிரதேசங்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்தமை எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற  மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.

கல்விக் கட்டமைப்புகள் ஆயுதம் தாங்கியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்விச் சமூகத்தின் உள்ளுணர்வு சிதைக்கப்பட்டு ஆயுதங்களின் கீழ் கல்வி தனது அவசியத்தினை இழந்தது. ஆனால் இன்றோ தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொளவதற்கென இருந்த கல்வி வளத்தையும் சிதைத்துவிட்டு ஆயுதங்கள் மௌனமாகிவிட்டன.  இவை மௌனமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இந்த ஆயுதங்களால் ஆளப்பட்ட தமிழ் மக்களும் மௌனமாக்கப்பட்டு விட்டனர்.

இலங்கையிலும் சரி, பிரித்தானியாவிலும் சரி, உலகின் எப்பாகத்திலானாலும் சரி ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினுள் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டமானது பலவகைப்பட்டதானாலும் ஒரு சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைகின்ற போது அச்சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்கின்ற பலத்தினைப் பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக தற்போது கல்வி அமைந்துள்ளது. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் இராணுவ பலத்தைக் கட்டி அமைக்க செலவிடப்பட்ட வளங்களை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை நோக்கித் திருப்பியிருந்தால் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நிலை இவ்வளவு கீழ் நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழ் சமூகம் இன்று அறிவியல் வறுமையாலும் உள்ளுணர்வின் வரட்சியாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

இதனை மாற்றி அமைப்பதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் நிலையை எய்துவதற்கும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அச்சமூகம் தனது கல்விநிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அது பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தும்.

Front_Cover_UoJ_A_Viewதமிழ் மக்கள் தங்கள் கல்விநிலையை உயர்த்திக்கொள்ளக் கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவது என்பது கல்லும் சீமெந்துக் கலவையும் கொண்ட கட்டடங்களையல்ல. அகநிலை கட்டமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டும்.

இதனை தமிழ் சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்டம் சீரழித்த கல்விக் கட்டமைப்புகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் எல்லா அம்சங்களிலுமே கீழ்நிலையிலேயே உள்ளது. அதற்கு புறக் காரணிகளிலும் பார்க்க அகக்காரணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதனை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம்.

பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு மாணவன் அல்லது மாணவி பல்கலைக்கழகம் செல்வது என்பது பெரும்பாலும் அம்மாணவனுடையதோ அல்லது மாணவியினுடையதோ தெரிவாகவுள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் அதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை.  பல்கலைக்கழகம் செல்வது என்பது மாணவ,  மாணவியரின் கனவு.  மிகக் கடுமையான போட்டியினூடாக மிகக் குறைந்த விகிதமான மாணவ, மாணவிகளே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  அதற்கு இம்மாணவ,  மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிக உயர்ந்ததாக உள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றோர் எதிர்கொண்ட பிரச்சினைகளே இந்நூலை உருவாக்கக் காரணமானது. இலங்கைத் தமிழ்ச் சமூகமானது அதன் வரலாற்றில் மிக இக்கட்டான காலகட்டம் ஒன்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இச்சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது  தற்போதைய அதன் கீழான நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.

அதற்கான ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு  நவம்பர் 2010ல் இடம்பெற இருக்கின்றது.  புதிய உப வேந்தரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கத்தவர்கள் இத்தெரிவை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை அவரது தகைமையின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்க் கல்விச் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

த ஜெயபாலன்
ஆசிரியர், தேசம்நெற்.
நவம்பர் 09, 2010.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

இலங்கைத் தமிழ் ஆவணங்கள்: ஆவணப்படுத்துதல் – வரலாறு – அதன் முக்கியத்துவம்: இராசையா மகேஸ்வரன்

இராசையா மகேஸ்வரன், B.A(Hons), Master of Library & Information Science சிரேஷ்ட துணைநூலகர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.

அறிமுகம்:
உலகில் சகல நாடுகளிலும் ஆவணக்காப்பகங்கள் உண்டு. ஆவணக்காப்பகங்கள் என்பது குறிப்பேடுகளை, வெளியீடுகளை தொகுத்து வைத்து பாதுகாக்கும் இடமாகும். இன்றைய ஆவணங் களை வருங்காலத்தவர்களுக்கு பாதுகாத்து வழங்குவது இதன் பணிகளுள் முக்கியமானதாகும். இலங்கையில் ஆவணப்பாதுகாப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர்காலந்தொட்டு இலங்கையின் பௌத்தமடாலயங்களிலும், கோயில்களிலும், நூல்கள் பாதுகாக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. மகாவிகாரைகள், அபயகிரி விகாரை ஆகியன ஆவணப்பாதுகாப்பு நிலையங்களாக விளங்கியிருந்தன. இலங்கையில் 3ம் நூற்றாண்டு முதல் ஆவணப்பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்திலேயே 16ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்துதல், நூலகம் என்பன முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்டவை குறித்துவைத்த ஆவணம்“பின்பொத்” (Pinpoth) என அழைக்கப்பட்டது. இதனை வைத்துக்காத்தவர் “பொத் வருன்” (Poth Varun) நூல்காப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டை இராச்சியகாலத்தில் (1415 -1597) மன்னரால் வழங்கப்பட்ட வாய்மூல தண்டனைகளைக் குறித்துவைத்த “முகவெட்டி” (Mukavetti) என்ற ஆவணம் பயன்படுத்தப்பட்டதாவும், கண்டி இராச்சியகாலத்தில் ஆவணங்களை ‘மகாமோட்டி’ (Mahamoutti) பாதுகாத்ததாக வரலாறுகளில் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னர்கள் கொடையாக வழங்கிய காணிகளுக்கான ஓலைச்சீட்டு (olai Sittu’ , ‘Cul Put’) என அழைக்கப்பட்டதுடன் இவ்வாவணங்களை எழுதுபவரும், பாதுகாப்பவரும் ‘எழுதுனர்’ (liannah) எனவும் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் காணப்படுகின்றது. அநுராதபுரகாலத்தில் (300-1017) மன்னரது இராச்சிய நிதிக்கணக்குகள் ‘பண்டக பொத்தகம்’ (Pandaka–Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரிஅறவிட்டவை ‘வரி பொத்தகம்’ (Vari-Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றினை கூறும் மகா வம்சம், சூலவம்சம் என்பன தீபவம்சம் (Dipawamsa, Attakatha) எனும் 4ம்-6ம் நூற்றாண்டு ஆவண ஏடுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயரே (1515-1656) ஆவணப்படுத்துதலை 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளனர். ஓல்லாந்தர் (1640 – 1796) போர்த்துக்கேயரிடமிருந்து கொழும்பை 1656இல் கைப்பற்றியபோது ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை கையளிக்கமறுத்து போத்துக்கேயர்கள் அழித்துள்ளனர். ஓல்லாந்தர் 1660-1662 காலப்பகுதியில் ஆவணப்படுத்துனர் (Record Keeper – Mr.Pieter de Bitter) நியமிக்கப்பட்டுள்ளார். இக்காலத்தில் பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என ஆவணப் படுத்துதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர் (1796-1947) இலங்கையை கைப்பற்றிய போது 1798 இல் ஒல்லாந்தரினால் (டச்சுக்காரர்) ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 1815இல் கண்டிஇராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டபோது கண்டி ஆவணங்கள், அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மாவட்டக்காரியாலயங்களில் ஆவணக்காப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 1870களில் நூலகங்களும், 1877ல் நூதனசாலையும் நூலகமும் (Museum and Library) ஆரம்பிக்கப்பட்ட பின் உள்ளுர் வெளியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் சட்டம் 1885ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை 19ம் நூற்றாண்டிலே நூல்கள் ஆவணப்படுத்தலை ஆரம்பித்துள்ளது. 1902ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு கொழும்புக் கச்சேரியில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு ஆவணப்படுத்தலில் ஒரு திருப்புமுனையாக ஆவணப்படுத்தல் மீண்டும் மாவட்டமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் நூதனசாலைகள் (Museums) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1942-1943 காலப்பகுதியில் 2ம் உலகயுத்தகாலத்தில், ஜப்பான் கொழுப்பில் குண்டுபோட்டதால், ஆவணக்காப்பகம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (1876-1947) காலனித்துவநாடுகளின் வெளியீடுகள் காலனித்துவ பதிப்புரிமைச்சட்டத்தின் கீழ் (Colonial copy right Act) சேர்க்கப்பட்டு பிரித்தானிய நூதனசாலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

1796 இலிருந்து 1948 வரையிலான காலப்பகுதி வெளியீடுகள், ஆவணங்கள் பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1947 இலங்கை சுதந்திரம் பெற்றபின், சிலகாலம் கல்வியமைச்சின் கீழ் ஆவணக்காப்பகம் காணப்பட்டுள்ளது. 1951இல் அச்சக பதிப்புச்சட்டம் (“Printing press ordinance” 1951–20ம் சட்டம்) கொண்டுவரப்பட்டுள்ளது. 1952 இல் இலங்கை தேசிய நூல்விபரப் பட்டியலுக்கான உபஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட பின், கல்வி அமைச்சிலிருந்து ஆவணக்காப்பகம் உள்ளுராட்சி மற்றும் கலாசாரஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 1962இல் முதலாவது தேசிய நூற்பட்டியல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தே வெளியிடப் பட்டதுடன், இதன் வெளியீட்டுக்கு பிரித்தானிய தேசியநூல் விபரப்பட்டியலின் பிரதமஆசிரியர் திரு.எ.ஜெ.வேல்ஜ்ஜின் சேவையும் பெறப்பட்டுள்ளது. 1963 தொடக்கம் வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டு 1975இல் ஆவணக்காப்பகம் பதியகட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டிலிருந்து தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத்திலிருந்து தேசியநூலகசபை பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

இத்தேசிய நூற்பட்டியல் சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. 1962 தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் இத்திணைக் களம் தேசிய ஆவணக்காப்பகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 1974ஆம் ஆணடு 48ஆம் இலக்கச்சட்டத்திலும், 1981ம் ஆண்டு 30ஆவது இலக்கச்சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1885ஆம் ஆண்டின் அச்சகம் வெளியீட்டு பதிவுச்சட்டத்திற்கு அமைவாக, அச்சகங்களும் வெளியீட் டாளர்களும் சகல நூல்களினதும் பிரதிகள் ஐந்தினை வழங்கவேண்டும். இதில் ஒரு பிரதி 1973க்குப் பின், தேசியநூலகசபைக்கு வழங்கப்பட வேண்டும். இன்னுமோர் பிரதி 1952இலிருந்து போராதனை பல்கலைக் கழகநூலகத்திலும், ஒரு பிரதி சுவடிகள் திணைக்களத்திலும் சட்டச்சேர்க்கையாக (Legal depository) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

1951 அச்சக வெளியீட்டாளர்கள் சட்டத்தின் பின், 1973இல், 45வது சட்டமாக தேசியசுவடிகள் சட்டம் (The National Archives Low no 48, 1973) கொண்டுவரப்பட்டது. 1973இல், 51வது சரத்துக் கேற்ப இலங்கை தேசிய நூலகசேவைகள் சபை(The Sri Lanka National Library service Board), ஸ்தாபிக்கப்பட்ட பின், இலங்கையில் வெளியிடப்படும் சகல வெளியீடுகளும் சட்டப்படி இச்சபை மூலம் ஆவணப்படுத்தப்பட்டுவருகின்றன. 1976 இல் இலங்கை தேசியநூலகசேவைகள் (The Sri Lanka National Library service), உருவாக்கப்பட்டதுடன் 1990 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய நூலகம் (The Sri Lanka National Library), ஆரம்பிக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் (ISBN) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் சர்வதேசதராதர நூல்எண் (ISBN) பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலங்கை தேசிய நூற்பட்டியலில் (National Bibliography) பதியப்படுகின்றது. இலங்கையைச்சேருந்தவர்கள் சர்வதேசதராதரநூல் எண்களை (ISBN) வேறு நாடுகளில் பெற்றுக் கொண்டால் இலங்கையரது நூலாயினும் இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படுவதில்லை.

இலங்கை உள்நாட்டு யுத்தம் நடைபெற்றகாலத்தில் ‘தமிழ் ஈழம்’ பிரதேசத்தின் வெளியீடுகள், ஆவணங்கள் தமிழ்ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2009இல் நடைபெற்ற யுத்தத்தினால் அழிந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இதேபோல் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கனகரத்தினம் என்னும் தனிநபரால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆய்வின் பிரச்சினைகள்:
இலங்கையில் தமிழ்ஆவணங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுவதில்லை. தமிழ் நூல்கள் பல இந்தியாவிலும் பிறநாடுகளிலும் அச்சிட்டு வெளியிடப்படுவதும், இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் பெறப்படாமையும் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் அக்கறையின்மையும் போதிய தமிழ் உத்தியோகத்தர்களின்மையும், பாராமுகத்தன்மையும் தேசிய நூற்பட்டியலில் தமிழ்நூல்கள் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படாதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள், எதிர்காலசந்ததியினர் இவை பற்றி அறியமுடியாதுள்ளன.

ஆய்வு முறை:
வரலாற்று துணையுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆதாரங்களுடன் இத்துறைசார்ந்த இரண்டாம் நிலை சான்றுகளுடன், களநிலையில் நேரடி அவதானிப்புகளுடனும், விளக்கநிலை வாயிலாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘நூல் தேட்டம்’ என்ற நூல்பட்டியல் ஆவணம் முதலாம் தொகுதி முதல் ஐந்தாம் தொகுதி வரை அவதானிக்கப்பட்டது. வெளியீட்டாளர்களின் விலைப்பட்டியல்கள், நூலகங்களில் வைப்பிலுள்ள நூல்கள், வகுப்பாக்கப்பட்டியல்கள் ஆகியன அவதானிக்கப்பட்டது. இவற்றுள் அநேகமான நூல்கள் நூல்தேட்டத்தில் பதியப்பட்டுள்ளதால், நூல்தேட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் துண்டுப்பிரசுரங்கள், பாடசாலை பாடநூல்கள், பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள், வினாவிடைகள் வர்த்தமானி வெளியீடுகள், அரசதிணைக்கள அறிக்கைகள் ஆகியன தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம்:
இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதல் பூரணமாக நடைபெறவில்லை என வெளிக் காட்டல், இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிதலும், இவற்றினை களையும் வழிமுறைகளை கண்டறிதலும் தீர்வு காண்பதுமே இவ்வாய்வினது நோக்கமாகும்.

ஆய்வின் போது கண்டறிந்தவையும் அவதானிப்புகளும்:
‘சுவடிகள் ஆற்றுப்படை’ என்ற நான்கு தொகுதிகளாக எஸ்.ஏச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். சா.ஜோ.செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட நூலியல் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளார். க.குணராசா (செங்கை ஆழியான்) இலங்கை நாவல்கள் பற்றியும், கனக செந்திநாதன், தில்லையூர் செல்வராஜன் மற்றும் பேராசிரியர் பூலோகசிங்கம் ஆரம்பகால வெளியீடுகள் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர். இதே போல் புகலிட மண்ணிலே நூல்களின் பதிவுகளை ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் ‘நூல்தேட்டம்’ என்ற நூல்தொகுதியாக இலண்டனில் உள்ள நூலகர் என்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார். ஆயிரம் நூல்களுக்கு ஒரு தொகுதி; என்ற வகையில் ஆறு (6) நூல் தேட்டங்கள் வெளியிட்டுள்ளதுடன் இலங்கைத்தமிழர்களது, மலேசிய, சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒரு தேட்டமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தொடந்தும் இலங்கைத் தமிழ்நூல்களை பதிந்து வெளிகொணர்தலில் ஈடுபட்டுள்ளார்.

ஆய்வுக்காக உதாரணமாக, 2005ஆம் ஆண்டினை நோக்குவோமாயின், “நூல்த்தேட்டம்” என்ற நூலின் பதியப்பட்டுள்ள தமிழ் நூல்களினை எடுத்துக்கொண்டால், தொகுதி; ஒன்று – ஆறு வரை மட்டும் 2005ஆம் ஆண்டில் 361 இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பதியப்பட்டு காணப்படுகின்றன. இந்நூல்களில் இலங்கையில் 197 நூல்களும், சென்னையில் 99 நூல்களும், இங்கிலாந்தில் 24 நூல்களும், கனடாவில் 13 நூல்களும், ஜேர்மனியில் 08 நூல்களும், பாரிஸில் 07 நூல்களும், அவுஸ்ரேலியாவில் 05 நூல்களும், நோர்வேயில் 03 நூல்களும், டென்மார்க்கில் ஒரு நூலும் வெளியிடப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இது 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் பதிவின் இறுதி முடிவல்ல. பின்தொடரும் ஏனைய தொகுதிகளிலும் 2005ஆம் ஆணடு வெளியீடுகள் பதிப்படவுள்ளன. ஆனால் இலங்கைத் தேசியநூல்பட்டியலில் (National Bibliogrphy) 91 இலங்கைத்தமிழ் நூல்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. இதில் இரண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட நூல்கள் மத்திரமே பதியப்பட்டுள்ளன. 270 இலங்கைத்தமிழ்நூல்கள் பதியப்படாது காணப்படுகின்றது. எனவே இலங்கை தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் 72 இலங்கை நூலாசிரியர்களின் நூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இலங்கை தேசிய நூல்பட்டியலில் ஒரே ஒரு நூல் மாத்திரமே பதியப்பட்டுள்ளது. இது இலங்கை தேசியநூற் பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அத்துடன் இலங்கை நூலங்களில் வைப்பிலுள்ள பல நூல்களுக்கும், இலங்கை தேசிய நூல்பட்டியலில் பதிவுகளைக் காணமுடியவில்லை. இதுவும் தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு ஒரு சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.

மேலும், புகலிட மண்ணிலே இலங்கைத்தமிழர் நூல்களை ஒன்று திரட்டியும், இலங்கையிலே ஒன்று திரட்டியும் ஈழத்தமிழர் தேசியநூல்களின் ஆவணப்படுத்தலினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பணியை மேற்கொள்ளும் அமைப்புகளாவன:

 ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும்.(European Tamil Documentation and Research centre-ETDRC.)
 உலகத்தமிழ் நூலகம் ஸ்காப்ரோ, ஒன்றாரியோ, கனடா.
 வல்வை ஆவணக் காப்பகம், கனடா
 முல்லை அமுதன் ஆவணக்காப்பகம்
 தமிழ்தகவல் மையம் – ஆவணக்காப்பகம் – (Tamil Information centre-TDC Library)
 மலையகஆவணக்காப்பகம் -புசல்லாவ,- (இந்திய வம்சாவளி இலங்கையரது ஆவணங்கள்)
 பிரித்தானிய நூலகம் (British Library)
 இலண்டன் பல்கலைக்கழக நூலகம்- (SOAS–School of Oriental and African Studies Library, University of London)

தமிழ் நூல்களின், வெளியீடுகளின் ஆவணப்படுத்துதலில் காணப்படும் பிரச்சினைகள்
1. இலங்கையில் ஆவணப்படுத்துதலில் தொடர்ச்சியின்மை:

2. இலங்கை தவிர்ந்த பிறநாடுகளில் தமிழ் நூல்கள் வெளியிடுதல்:
2.1.1 நூல்களை வெளியிடுவோர், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் செலவு குறைவு மற்றும் சந்தைவாய்ப்பு போன்ற பொருளாதார காரணங்களினால் பல இலங்கைத் தமிழ் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனர். இவ்வாறு சென்னையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பதிவுகள் எதுவும் இலங்கையில் இல்லை. இவற்றுக்கு சர்வதேச தராதர எண் பெறப்படுவதும் இல்லை. எனவே, இவை இந்தியாவிலும் பதிவுசெய்யப்படுவதும் இல்லை.

2.1.2 1983-85 ஆண்டுக்காலப்பகுதியில் அரசியல்காரணங்களுக்காக பல நூல்கள் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு இலங்கை தவிர்ந்த பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களாகும். இவ்வெளியீடுகளின் பதிவுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.

2.1.3 தமிழகத்தில் சென்னையில் வெளியிடுவதற்கான காரணங்களில் பிரதானமானது, சென்னையில் வெளியீட்டாளர்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களை தமிழகஅரசு கொள்வனவு செய்வதே. எனவே எழுத்தாளர்கள் இந்தியாவில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளியீடு செய்யும் போது தமிழகஅரசுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டாம் பதிப்புகூட ‘இரண்டாம் பதிப்பு’ என குறிப்பிடப்படாது வெளியிடப்படுகின்றன.

2.1.4 ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களின் முதல் பதிப்பினை இலங்கையில் வெளியிட்டு வரையறுககப்பட்ட விநியோகம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மீள்பதிப்புச் செய்து இந்திய வாசகர்களுக்காக வெளியிடுகின்றனர். மாநிலமொழி அல்லாத நூல்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதும், தமிழ்மொழி என்பதால் இலங்கை நூல்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.

2.1.5 இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர எண்(ISBN) பெறப்படாமைக்கு வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் “தீர்வை அல்லது வரி“ யிலிருந்து விலக்குப் பெற்று தப்புவதற்காக என கருதலாம்.

2.2 புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள்

2.2.1 1786இல் மலேசியாவின் பினாங்கு தீவினை கைப்பற்றிய பின் ஆங்கிலேயரால் வரவழைக்கப்பட்டு பின் அங்கு குடியேறிய இலங்கைத்தமிழர்களும், 1950களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தம் குடியேறிய இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படவில்லை. மலேசியா வாழ் யாழ்ப்பாணத்தமிழர்கள் ‘இலங்கைத்தமிழர்’ என்ற வரையறைக்குள்ளும் அடக்கப்படவில்லை.

2.2.2 உள்நாட்டு–தமிழ்ஈழ யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, டென்மார்க், சுவிற்சலாந்து, கனடா, கென்யா, அவுஸ்திடேலியா, ஐக்கியஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படாது ஆவணப்படுத்தப்படாது காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தநாடுகளில் புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள் அந்த அந்த நாடுகளில் தேசியநூற் பட்டியலில் இடம்பெறுவதும் இல்லை. ஆவணப்படுத்தப்பட்டு இருப்பில்∕சட்டவைப்பில் வைக்கப்படுவதுமில்லை.

3.இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படாமை:
3.1 இலங்கையில் வெளியிடப்படும் நூல்களில் சர்வதேசதராதர எண் பெறப்படாதவை தேசிய நூற்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல் அச்சகம், வெளியீட்டாளர் சட்டப்படி கையளிக்கப்படாத தமிழ் நூல்களைத் ‘தேடிப்பெறல்’ இடம்பெறுவதுமில்லை.

3.2 இலங்கையில் கலாசார அமைச்சின் மூலம் சாகித்திய விருது வழங்கப்பட்ட நூல்கள் சிலவற்றின் பதிவுகளும் தேசிய நூற்பட்டியலில் காணப்படவில்லை. முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மடடும் சாகித்திய விருது வழங்கப்பட்டது. தற்போது பல சிறந்த எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியிடுவது செலவு அதிகம் என்ற காரணத்தினால் இந்தியாவில் அச்சிடுகின்றனர். அவற்றுக்கு விருதும் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆவணப்படுத்தப்படவில்லை. தேசியநூற்பட்டியலிலும் இல்லை. அதனால் சட்டவைப்பிலும் இல்லை.

4 உள்நாட்டு யுத்தமும் அதன் தாக்கமும்:
4.1 இலங்கையின் யுத்தசூழல்காரணமாக புலம்பெயர்ந்தோர் தம் நூல்களை இலங்கையில் வெளியிடுவதற்கு பயங்கொள்ளுகின்றனர். ஈழமக்கள் விடுதலை தொடர்பான தகவல்கள் இருப்பின் இலங்கையில் வெளியீட்டாளர்கள் பல விசாரணகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் பல நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. தற்போது இந்தியாவிலும் வெளியிடுவது சிக்கலாகியுள்ளதால் ஐரோப்பாவில் வெளியீட்டு முயற்சிகள் சிறப்புப்பெற்றுள்ளன. ஆனால் இவை இலங்கையில் தேசிய நூற்பட்டியலில் சேர்ப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை.

4.2 ‘ஈழம்’ என்ற வார்த்தைப்பிரயோகமும் இலங்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை மற்றொரு காரணமாகும். வடகிழக்கு தமிழ் எழுத்தாளர்கள் தமது விடுதலை பிரச்சினைகள் தொடர்பான இலக்கிய நூல்களை இலங்கையில் வெளியிடாமல் வெளி நாடுகளிலேயே வெளியிட்டனர். இந்தப் பதிப்புத்தளமாக இந்தியாவே அமைந்தது.

4.3 யுத்தசூழலில் இலங்கை வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் ஈழத்தமிழரின் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் எழுத்தாளர்களை அணுகவும் இல்லை. இச்சந்தர்ப்பத்தினை இந்திய வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் பயன்படுத்திக்கொண்டார்கள்.

5. எழுத்தாளர், வெளியீட்டாளரின் புறக்கணிப்பும் திணைக்களத்தின் புறக்கணிப்பும்:
5.1தமிழ் பிரதேசஅச்சகங்களும், வெளியீட்டாளர்களும், பதிப்பகத்தார்களும் அச்சகச் சட்டமூலத்தின்படி சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்காமை
5.2 தமிழ்நூல்கள் சுவடிகள் காப்பகததக்கு அனுப்ப வேண்டும் என்ற அக்கறையின்மை,
5.3 தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு தமிழ் நூல்கள் கிடைக்காமை,
5.4 இலங்கைச்சுவடிகள் திணைக்களத்திலும், தேசியநூலகத்திலும் தமிழில் வேலைசெய்யக் கூடிய தேவையான தமிழ்ஆட்பலமின்மை நூற்பட்டியல் தயாரிப்பில் பின் தங்கியநிலை ஏற்பட ஒரு காரணமாகின்றது. இதனால் எதிர்கால சந்ததியினரின் ஆய்வுகளுக்குத் தேவையான பதிவுகள் குறைவடைந்துள்ளமை மாத்திரமல்லாது ஆவணப்படுத்துதல் இல்லாது போயுள்ளமை பெரும்குறைபாடு.

தீர்வும் முடிவுரையும்:
இலங்கையில் நூற்பதிவு இலக்கத்துடன் வெளியீட்டாளர் வெளியிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கை தமிழ்நூல்கள் வெளியிடுவோரை “நூல் பதிவு” இலக்கம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும். நூல் வெளியீட்டாளரும் நூல் பதிவு இலக்கம் பெற ஆர்வம் காட்டவேண்டும். நூல் பதிவு இலக்கம் பெறாமல் வெளியிடுவோரிடம் நூல் வெளியிடுவதை தமிழ் எழுத்தாளர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வெளியீடுகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தேசியநூல் பட்டியலில் பதிவு செய்ய வழிகோல வேண்டும். இதற்காக அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.
.
தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாராமுகப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையிலும், பிறநாடுகளிலும் சட்டப்படி நூல்பதிவுஎண் பெறாத நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுவது மூலம் நூற்பதிவினை ஊக்குவிக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனமாக எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஆவணகாப் பகத்தினை அமைத்து தமிழ்நூல் ஆவணப்படுத்தலினை மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.

புகலிடநாடொன்றில் முழுமையான ஆவண காப்பகம் ஒன்றினை நிறுவுதல் வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்துக்கு எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் நூல்களை வழங்க வேண்டும்
சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியன தமிழ் நூல்களை தேடிப்பெற வேண்டும். மற்றும் சர்வதேசதராதர எண் பெறாத நூல்களையும் தேசிய நூல்பட்டியலில் சேர்த்து பதியப்படவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்களின் நூல்களையும் தேடிப்பெறல் வேண்டும். சுயதணிக்கைக்குட்படாது இலங்கையை சேர்ந்த, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நூல்களை சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியனவற்றுக்கு வழங்க வேணடும்.

தமிழ் சாகித்திய பரிசு மற்றும் விருதுகள் வழங்கும் போது நூல் பதிவு இலக்கம் பெற்ற நூல்களை மட்டும் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கவேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
• கனக.செந்திநாதன், ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ கொழும்பு, அரசு வெளியீடு, (1964)
• செல்வராஜ், என்., “மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் -தொகுதி – 1”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள்;, 2007.
• செல்வராஜ்,என்., “நூல்தேட்டம் – தொகுதி – 1-5”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள், 2002-2008.
• செல்வராஜ், என்., “வேரோடி விழுதெறிந்து”, கொழும்பு, ஞானம் பதிப்பகம், 2009.
• நடராசா, எப், எக்ஸ், சி.,‘ஈழத்துதமிழ் நூல் வரலாறு’ கொழும்பு, அரசு வெளியீடு, 1970.
• பூலேகசிங்கம், பொ., “தமிழ் இலக்கியத்தில் ஈதை;தமிழர் பெருமுயற்சிகள்”, கொழும்பு, குமரன் இல்லம்’, 1970.
• மகாலட்சுமி, தி.,நிர்மலா, சூ., பூமிநாதன், த., ‘சுவடிச்சுடர்’,சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2002.
• ஜெமீல்,எஸ்,எச்,எம், “சுவடிஆறறுப்படை” கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப்பணியகம், 1994
• Maheswaran, R.,(2007), “Bibilometric Study of Tamil Publications in Sri Lanka in 2005” , Colombo, University Librarian association of Sri Lanka.
• National Library of Sri Lanka: Colombo; Sri Lanka National Library Service Board, 1995.

Wimalaratne, K, D, G,. “An Introduction to the National Archives in Sri Lanka,

”Colombo, Social Science Research Centre, National Science Council of Sri Lanka, 1978.

”நூலகத்தில் முறைகேடாக நடந்தவர்கள் மீது ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை?” பொலிஸ் அதிகாரியிடம் நல்லிணக்க ஆணைக்குழு கேள்வி.

Jaffna_Libraryசில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பொதுநூலகத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டவர்களுக்கெதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி வரும் நல்லிணக்க ஆணக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9மணியளவில் யாழ்.பொது நூலகத்திற்குச் விஜயம் செய்தனர். அப்போது பொதுநூலக நூலகரிடம் அண்மையில் தென்னிலங்கையிலிருந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாழ்.நூலகத்தில் நடந்துகொண்ட முறை குறித்து ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்துள்ளார். நடந்த விடயங்களையும் நூலக ஒழங்கு விதிகள் குறித்தும் நூலகர் விளக்கியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் அதிகாரியை அழைத்து இந்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸ் அதிகாரி மௌனம் சாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நூலக ஒழுங்கு விதிகள் மீறப்பட்ட ஒரு நிகழ்வை சிங்கள – தமிழ் உரிமை சிக்கலாக சித்தரிப்பது சின்னத்தனம்! : யாழ் ஆய்வறிவாளர் அணியம்

Welcome_to_Jaffnaகடந்த சனி மாலை (October 25, 2010) தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் – தமிழ் இனவாத  அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும்  சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.

யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மை பாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து –எழுதி – அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும்,  துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.

இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.

உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில்,  சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் – திண்ணையிலும் – யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப் பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப் பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.

இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட  சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்பட வேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.

மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

30 ஒக்டோபர் 2010 
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
 P O Box 165, Jaffna
._._._._._.

October 29, 2010

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகையும் யாழ் நகர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் : விஸ்வா

Jaffna_Libraryபோரிற்குப் பின் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகை யாழ் மாவட்டத்தில் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.  யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சிலர் யாழ் நூலகத்தில் நடந்துகொண்ட முறை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் – சிங்கள இனங்களிடையே உள்ள நம்பிக்கையின்மையை மேலும் மோசமாக்குவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இன உறவுகளை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்கின்றது.

யாழ். பொது நூலகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிக்கல்களை ஏற்படுத்திய தென்னிலங்கையில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லாமல் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையும் தெரிந்ததே. ஒக்ரோபர் 23ல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 29 2010) வெள்ளிக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது. கடந்த 23ஆம் திகதி யாழ். நூலகத்தைப் பார்வையிட வந்த தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடவடிக்கைகளால் நூலகப் பணியாளர்கள் மற்றும், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருடலான மனஉணர்வுகள் குறித்தும் மற்றும், தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் அ பரஞ்சோதி ஒக்ரோபர் 27, 2010 பிரேரணை ஒன்றை முன்மொழிந்தும் இருந்தார். அன்று குறிப்பிட்ட சுற்றலாப் பயணிகள் நடந்து கொண்ட விதம் குறித்து தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி அ பரஞ்சோதி வருமாறு கூறுகின்றார், ”பொது நூலக கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு ஒக்ரோபர் 22 முதல் ஒக்ரோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இது நடைபெற்ற மூன்று நாட்களும் மாலை 5.30 மணியின் பின்னரே நூலகத்திற்குள் பார்வையாளருக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தெற்கு சுற்றுலாப் பயணிகள் சுமார் 300 பேர் வரையிலானோர் நூலக வாசலில் குவிந்தனர். உள்ளே விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர். வாயில் காவலாளி தடுத்த வேளையில் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது நிலமை எல்லை மீறவே, மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அவ்வடத்திற்கு வந்து சமரசம் செய்வதில் ஈடுபட்டனர். உடனே குறித்த சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தினருக்கு அறிவித்தனர். அவர்களால் கதவு திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே விடப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களை எடுத்து சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர். இக்குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வாசகர்கள் பலர் அச்சத்தினால் நூலகத்தை விட்டு பின் கதவினூடாக வெளியேறிவிட்டனர். நடைபெற்றுள்ள சம்பவம் நாகரீகமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவு அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.

நூலகம் என்பது அமைதி வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அ பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளினால் யாழ். குடாநாட்டு நிர்வாக ஒழுங்குகளில் பல சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் தங்குவதற்கு கிடைத்த இடங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியமும் அவர்களிடம் தங்குமிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகளின் குடும்பங்கள், அவர்களின் நண்பர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு நாவற்குழி அரச களஞ்சியம் பயனபடுத்தப்படுவதாக களஞ்சிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் நூற்றுக் கணக்கில் இவர்கள் சுற்றுலா வருவதால் இவர்களுக்கான தங்குமிடங்களாக பாடசாலைகளும் அரசாங்க கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் இவர்கள் பாடசாலைகளில் தங்கிவிட்டுச் செல்லும் போது, காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் தோன்றி வருகின்றது.

தென்பகதி சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் தங்கிவருவதால் எற்பட்டுள்ள இச்சிக்கல்களை தவிர்க்கும் முகமாக இவர்கள் யாழப்பாணத்தில் தங்கும் பொது இடங்கள் குறித்த விபரங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டு வருகின்றன. பிரதேசச் செயலர்கள், கிராம அலுவலர்கள், மூலமாக இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் குறித்த அறிக்கை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தென்பகுதியிலிருந்து வரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகளை மேற்கொள்ள முடியதாத நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கக்கூடிய பொது இடங்களை அடையாளம் கண்டு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ நூல் வெளியீடும் ஆவணப்பட திரையிடலும்

Yamuna Rajendiranஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )

‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.

ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. ஒக்ரோபர் மாதம் 10 -ம் திகதி (10 – 10 – 2010) ஞாயிறு  டென்மார்க் விஜென் (Vejen) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, வி. ஜீவகுமாரன் எழுதிய ‘யாவும் கற்பனை அல்ல”, வேதா இலங்காதிலகம் எழுதிய ‘உணர்வுப் பூக்கள்” த. துரைசிங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://kalaiy.blogspot.com/