27

27

தயவு செய்து கேவலப்படுத்தாதீர்கள்! சூதாட்டத்தை நிறுத்துங்கள்!! மக்களை ஏமாற்றும் இழி செயலை நிறுத்துங்கள்!!! – மாவீரர் தினத்தை முன்னிட்டு : ஆதவன்

Maaveerar_Thuyilum_Illam_2010தயவு செய்து கேவலப்படுத்தாதீர்கள்!  சூதாட்டத்தை நிறுத்துங்கள்!! மக்களை ஏமாற்றும் இழி செயலை நிறுத்துங்கள்!!! : மாவீரர் தின உரை நாடகத்தை முன்னிட்டு : ஆதவன் 
  
முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு –மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா! 
 
சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 
 
எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை. 
 
ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம். 
 
இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இ;ல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. 
 
இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான். விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொருத்தவரையில் மாவீரர் தின உரையாற்றும் தகுதி அதன் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதுவே புலிகளின் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது. சிலரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடானது, புலிகளின் மரபையும், அந்த மரபைக் காத்து உயிர்நீத்த ஆயிரக் கணக்கான போராளிகளின், உடன் இருந்த மக்களின் தியாகங்களை நகைச்சுவைக்குரியதாக மாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை. தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் பகிரங்கப்படுத்திய கே.பியை துரோகி என்றவர்கள் எந்த அடிப்படையில் ; இந்தச் செயலை அனுமதிக்கின்றனர்? அவ்வாறு ; உரையை ஏற்பதாயின் முதலில் கே.பியின் கூற்றை அங்கரித்துவிட்டல்லவா அதனை ஆமோதிக்க வேண்டும். சிலர் சொல்லுவது போன்றே தலைவர் இருக்கிறார், அவர் தக்க தருணத்தில் வருவார் என்றால் எவ்வாறு .,?????? தலைவர் பிரபாகரனின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்? இப்படியான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றவர்கள் யார்? 
 
ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம். 
 
புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன.

அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை ‘மேதகு’ அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னர் தலைவர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. மேதகு சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.

உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.  
 
எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர். 
 
நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின்  கவிதை வரிகள் இவை – ‘எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை’ – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை. 
 
இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள் –  பட்டினியில் மயங்கும் முதியோருக்கு  ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான  பகடைக்  காய்களாக்க முயற்சிக்காதீர்கள். 
 
வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி  துரோகி பட்டம் சூட்டி  அடாவடித்தனம்  செய்யும் நீங்கள்  எங்களது அரசியல்  உரிமையில் மட்டும்  அக்கறை காட்டுவதனை எப்படி  நம்புவது?  ஆடு நனைகிறது என்று ஓநாய்  அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது? 

Related Link:

http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaவட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

._._._._._.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010

MR&SM_Kirishnanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.

“தென்னிலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதில் என்ன தவறு?” -ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேள்வி.

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதை தவறு என எவ்வாறு கூறமுடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் கட்சிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்த போது சற்று உணாச்சிவசப்பட்ட நிலையில் ஜனாதிபதி இக்கேள்வியைக் கேட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தாரான ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் தமிழ் மக்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேறி வாழ முடியாது? அதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பின் அவசியம் கருதி வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறு குற்றங்களுக்காக சிறைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அக்கைதிகளின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரான எம்.கே சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில் ஜனாதிபதியுடனா சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதால் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை யாழ் புங்கன்குளம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவநாதன் தயானந்தன் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தது. இவ்வேளையில் கோழிக்கூடு ஒன்றை வேறு இடத்தில் மாற்றி வைக்க முயன்ற மாணவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றுமொரு சிறுவன் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மழையினால் இடம்பெயரும் மக்கள் பொது இடங்களில் தங்க அனுமதி மறுப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சிப் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இவ்வாறு இடம்பெயரும் பொதுமக்கள் பொது இடங்களில் தங்குவதற்கு படையினர் தடைவிதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தறப்பாள் கூடாரங்களில் தங்கி வரும் நிலையில, அக்கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவற்றிலிருந்து இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் அருகிலுள்ள பாடசாலைகள். கோவில்களுக்குச் செல்ல முற்பட்டபோது படையினர் அவ்வாறு அவர்கள் அங்கு தங்க அனுமதி மறுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நண்பர்கள் உறவினர்கள் விடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.

‘நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம்’ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_Devanandaவடமாகாண விவசாயிகளுக்காக இந்தியா வழங்கும் உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (நவம்பர் 27 2010) ஆற்றிய உரை.

அனைவருக்கும் வணக்கம்!….

எமது தேசமெங்கும் இரத்த ஆறு கொட்டிப்பாய்ந்த கொடிய வரலாறு ஒழிந்து முடிந்து, சமாதான நதி பெருக்கெடுத்து பாயும் காலம் இது!…

நாம் விரும்பும் சமாதானம் என்பது சகல மக்களும் அனுபவித்தே தீர வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அந்த வகையில் அரசியலுரிமை சுதந்திரத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில்….

இதே சம காலத்தில் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்ற உண்மையை மக்களாகிய உங்களுக்கு உறுதியாக மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்றைய நாளை நாம் கருத வேண்டும்.

இது சாதாரண நாள் அல்ல. நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம் என்பதற்கு கட்டியம் கூறும் அர்த்தமுள்ள நாள் இன்றைய நாள்.

ஆகவேதான் இன்றைய இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கெளரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண  து}துவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான து}துவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள்.

அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர்.

அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் து}துவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள்.

உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அவரை ஈழத் தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.

எமது மக்களில் பலர் இறந்து போன தங்களது உறவுகளை நினைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எனக்கு புரிகின்றது.
 
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று, சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது.

தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில், எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம்.
 
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
 
கடந்த காலங்களில் உங்களுக்கு அழிவுகளை பெற்று தந்த தவறான வழிமுறைகளை நீங்கள் உணர்ந்து, தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொண்டு செயற்பட முன்வருவீர்களேயானால் நாம் கடந்த இருபது வருடங்களில் சந்தித்திருந்த அழிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் நாம் கட்டி எழுப்பி விடலாம்.

இது போன்ற நிகழ்வுகளும் திட்டங்களும் இங்கு நடந்து கொண்டிருப்பதும்,  நீங்கள் பயனாளிகளாக வந்து உங்களுக்கான உதவிகளை பெற்று கொண்டிருப்பதும், மிகவும் மகிழ்ச்சிகரமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விடயங்களாகும். நாம் கடைப்பிடித்து வருகின்ற இணக்க அரசியல் செயற்பாட்டின் மூலம் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவன் நடுக்கடலில் வீழ்ந்து விட்டான் என்பதற்காக அவன் கடலை திட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையோடு கரையேற  முயற்சிக்க வேண்டும். கையில் கிடைக்கின்ற ஏதாவது ஒன்றை முதலில் கெட்டியாக பிடித்துக்கொண்டு கரையேற முயற்சிக்க வேண்டும். அது போலவே எமது பிரச்சினைகளையும் நாம் அணுக வேண்டும்.

யாருடன் பேசி நாம் எமது மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் இணைந்துதான் எதையும் சாதிக்க முடியும்.

நாம் கட்டம் கட்டமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றோம். அது நிச்சயம் நடக்கும். நாங்கள் அதை நடாத்திக் காட்டுவோம்.

எமது மக்களுடைய மீள் குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மீண்டும் மக்கள் குடியிருப்பாக மாற்றியமைத்தல்  போன்ற எல்லா பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக நிறைவேறி வருவதை நீங்கள் கண்டு வருகின்றீர்கள்.

இவைகள் எல்லாம் நாங்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்திருப்பதாலும், அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதாலும்  நடந்து கொண்டிருக்கும் காரியங்களே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.

இது போலவே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எமக்கு இன்னமும் அதிகமான அரசியல் பலம்  கிடைத்திருந்தால் நாம் இன்னமும் விரைவாக அவைகளை நிறைவேற்றியிருப்போம்.

நேற்றைய தினம் எமக்குள் பொது உடன்பாடு கண்டு செயற்பட்டு வரும் பல்வேறு கட்சிகளும் இணைந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பானது மிகவும் திருப்திகரமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்ற கரமானதாகவும் அமைந்திருந்தது.

ஆகவே எமது மக்களின் விடிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது முரண்பாடுகளை மறந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த நிகழ்வின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.

இதே நேரத்தில் இந்த நாட்டில் நிலவியிருந்த சகல வன்முறைகளும் இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எமது சமூகம் ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக முழுமையாக மாறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.

நேற்றிரவு 2.00 மணியளவில் நான் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி கொடிகாமம் பகுதி ஊடாக வந்துகொண்டிருந்த போது யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து எனக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருந்தது.

தமது அலுவலகத்தின் அருகில் யாரோ சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் வந்து நிற்பதாகவும் தம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்குமாறும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நான் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்திருந்ததோடு அந்த நள்ளிரவு வேளையில் நானே நேரடியாக தினக்குரல் அலுவலகம் நோக்கி சென்று தினக்குரல் ஊழியர்களுடன் பேசி நிலைமைகளை அவதானித்து உரிய நடவடிக்கையினையும் எடுத்திருந்தேன்.

இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களில் எந்த தரப்பினரும் ஈடுபடுவதை தவிர்த்து இன்று உருவாகியிருக்கும் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எமது விருப்பங்களை வெளிப்படையாகவே ஏற்று கருத்துச் சொல்லி வருகின்றார். அது மட்டுமன்றி  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அபிவிருத்தி, அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.

நடக்கும் என்று நம்பிக்கையோடு செயற்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று கூறி நாம் விலகி இருப்போமேயானால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.

எமக்கு பக்க பலமாக, தமிழ் மக்களுக்கு உறுதுணையாக, எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் விடயத்தில் எமது அரசாங்கத்திற்கும், எமக்கும் துணையாக எமது நட்பு நாடாகிய இந்தியா இருக்கின்றது.

அதற்கு அடையாளமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அதே போல் நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு உறவுப்பாலமாக செயலாற்றுவதோடு இன்று இந்த மண்ணையும் மக்களையும் நோக்கி வர விரும்பியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம். கிருஸ்ணா அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இன்று கைகுலுக்கி நேச சக்திகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் பெரிதும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆகவே இலங்கை இந்திய நட்புறவு வளர வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

இதே வேளையில் எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை புரிந்து வருகின்ற இந்திய அரசுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் முடிக்கின்றேன்.

யாழ் பல்கலையின் உப வேந்தராவதற்கு ரட்னஜீவன் ஹூல், வசந்தி அரசரட்ணம், என் சண்முகலிங்கம் தெரிவு.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வசந்தி அரசரட்ணம் என் சண்முகலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளையும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் 9 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பேராசிரியர் என் சண்முகலிங்கனும் 9 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களான பேராசிரியர் சத்தியசீலன் 8 வாக்குகளையும் பேராசிரியர் ஞானகுமாரன் 5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவுரையாளர் அல்வாப்பிள்ளை தனேந்திரன் ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார். தெரிவு செய்யப்பட்ட மூவரில் யார் உபவேந்தர் என்பது ஒரு வாரத்தில் தெரியவரும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு

Tamil_Arangam_Met_MR_26Oct10வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil_Arangam_Met_MR_26Oct10தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

Tamil_Arangam_Met_MR_26Oct10இச்சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மன்னார், முல்லை, யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும்மழை

Flooding_Jaffnaயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்பத்தாறு மணித்தியாலத்துக்குள் கடும் மழை பெய்யுமென யாழ். திருநெல்வேலி வானிலை ஆய்வுமையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது தாழமுக்கம் இல்லாதபோதும் இது பருவப் பெயர்ச்சிக்கான மழை வீழ்ச்சியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று காலை முதல் குடாநாட்டிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் தொடச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.

Flooding_Jaffnaகுடாநாட்டில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. யாழ்ப்பாணம் மொம்மைவெளி, சூரியவெளி பண்ணை, காக்கைதீவு, இருபாலை மக்கள் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெள்ளகாரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவணிக்க தகவல்களை திரட்டி வருகின்றது.

மன்னாரில் தொடரும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. மன்னார் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களில் நீர் நிறைந்து பெருக்கெடுத்திருக்கின்றது.