ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தமிழீழ விடுதலைப் போராட்ட கால ஊடகவியலாளர் எஸ் சிவநாயகம் காலமானார்.

Sivanayagam_S_Journalistஊடக வியலாளர் எஸ் சிவநாயகம் தனது 80வது வயதில் நேற்று (நவம்பர் 29) கொழும்பில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் ஊடகவியலாளராகச் செயற்பட்ட இவர் 1982ல்  யாழ்ப்பாணத்தில் வெளியாகிய சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு அதனுடன் வாழ்ந்தவர். அதன் பின்னர் சென்னையில் தமிழர் தகவல் நடுவத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதிக்காலப் பகுதியில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டவர்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்த எஸ் சிவநாயகம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 1993ல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய இவர் லண்டனிலும் நீண்டகாலம் வாழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சென்ற இவர் இறுதி யுத்தத்தின் போதும் அங்கேயே வாழ்ந்தவர்.

the_Pen_and_the_Gunஇவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது அனுபவத் தொகுப்பான ‘தி பென் அன் தி கன்’ என்ற நூலை வெளியிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்பாக ‘ஸ்ரீலங்கா: விற்னஸ் ரு ஹிஸ்ரி’ என்ற நூலையும் எழுதி இருந்தார்.

இவருடைய இறுதி நிகழ்வு டிசம்பர் 02 கொழும்பில் நடைபெற உள்ளது.

வன்னியில் இடம்பெற்ற அவலமும் புலி ஆதரவு அமைப்புகளின் மகிந்த எதிர்ப்புப் போராட்டமும் : த ஜெயபாலன்

MR_Protest_Heathrowதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளாக இயங்கிய அமைப்புகள் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து எதிர்ப்பு அணிவகுப்பொன்றை ஹீத்ரோ விமான நிலையத்தில் நடத்தினர். நடந்து முடிந்த யுத்தத்தில் ஜனாதிபதி ராஜபக்சவைக் குற்றவாளி என்று சொல்லி அவரது வருகையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி ராஜபக்சவை பொலிஸார் வழமையான முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வழியால் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்குநேர் சந்திக்கவில்லை.

ஆனால் இந்த ஆர்பாட்டம் காரணமாக சிறிலங்கா எயர்லைனில் வந்த பயணிகள் அனைவரும் இரவு 12:00 மணிவரை விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்க வைக்கப்பட்டனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் அமைச்சர் ஜீல் பீரிஸ் ற்கு எதிராகவும் ஒரு கண்டன நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. கண்டன நிகழ்வுக்கு முன்னதாகவே ஜீஎல் பீரிஸ் தனது உரையை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டுச் சென்றிருந்தார்.

MR_Protest_Heathrowநடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான முறையில் மனித உரிமைகளை மீறியிருந்தனர். யுத்தத்தின் முன்பகுதியில் 2009 பெப்ரவரி வரை 1200 பேர்வரையே கொல்லப்பட்டு இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தப் பகுதியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக்கி யுத்தத்தை முடுக்கிவிட்ட போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பொது மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை தொடர்ந்தும் ஆதரித்தே வந்தனர்.

2008ல் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது லண்டனில் இடம்பெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். அப்போதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி ஒக்ஸ்போர் மாணவர்களின் நிகழ்வில் உரையாற்ற இருப்பது இரண்டாவது தடவையாகும். அதையொட்டியும் புலி ஆதரவு அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க ஒக்ஸ்போர்ட் நோக்கி செல்ல உள்ளனர்.

தற்போதைய விஜயத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. தாங்கள் யுத்தக் குற்றத்திற்கு எதிராக வழக்கு தாங்கல் செய்ய உள்ளதாலேயே இலங்கை அரசு அந்த விஜயத்தை கைவிட வேண்டி ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் அறிவித்தன. ஆனால் இப்போது ஜனாதிபதி லண்டனிலேயே தங்கி உள்ளார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் போலிக் கடவுச்சீட்டில் ஆயுதத்துடன் வந்து பிரித்தானியாவில் பிடிபட்ட போதும் அவருக்கு எதிராக எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் யாரும் பதிவு செய்யவில்லை. சர்வதேச உரிமை அரைமப்புகள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் குற்றங்களை விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகச் சுமத்திய போதும் அவர்களால் முரளிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நடந்து முடிந்த இறுதி யுத்தத்தை மேற்கு நாடுகள் சிசிரிவி இல் பார்ப்பது போன்று செய்மதிகளினூடாகப் பார்த்து ஆதாரங்களையும் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் மனித உரிமைகளை அவர்கள் அரசியல் பலப் பரீட்சைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.

மேலும் யுத்தத்தின் இறுதிப் பகுதிகளில் இந்த யுத்த வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். பொது மக்கள் மீது செல் தாக்குதல்களையும் புலிகள் நடத்தி உள்ளனர்.

MR_Protest_Heathrowதற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். அங்கு வகைதொகையின்றி மனித அவலம் நடந்தால் சர்வதேச சமூகம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று பிரச்சாரம் செய்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி மிகமோசமான மனித அவலத்துக்கு காரணமாக இருந்தனர்.

யுத்தக் குற்றவாளி இலங்கை அரசு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச அமைப்புகளும் தான். அதனால் எதிரியாகக் கருதிய இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் அதேவேளை தம்மைக்காக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச கட்டமைப்புகளும் தாங்கள் அம்மக்களுக்கு இழைத்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் கேட்பதே முறையானது.

இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.

Wikramabahu Karunaratnaலண்டன் வந்துள்ள இலங்கையின் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உடனான சந்திப்பு நவம்பர் 28 2010ல் வோல்தம்ஸ்ரோவில் இடம்பெற உள்ளது. இச்சந்திப்பை தேசம், ASATiC என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மே 18 2009ற்குப் பின்னான அரசியல் நிலைமைகள் இடதுசாரி முன்னணி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த போதும் தொடர்ச்சியாக தமிழ் தேசியத் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வந்தமை இடதுசாரி முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணியை ஆதரிக்குமாறு மே 18 இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகள் கேட்டுக்கொண்டிருந்தன. (இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!) இது தொடர்பாக இடதுசாரி முன்னணியுடன் இணைந்துகொண்ட எம் கெ சிவாஜிலிங்கம் உடனான சந்திப்பினையும் தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. (ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்)

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து இருந்தனர். தங்கள் அரசியல் முடிவுகள் மண்கவ்விய நிலையில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிஎப் இடதுசாரி முன்னணித் தலைவருடனான வெளிப்படையான சந்திப்பை Nov 25 2010 ஏற்பாடு செய்திருந்தது. (கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு)

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை வன்னிக்கு அழைத்து மாவீரர் நாளில் உரையாற்ற வைப்பதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே அரசியல் ரிதியான புரிந்தணர்வுக்கு அது வழியேற்படுத்தும் என்பதையும் தேசம் சஞ்சிகைகயில் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை பொறுத்திருந்து ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட அரசியல் ஞானம் பெறாமல் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு புறப்பட்டு உள்ளது தமிழ் தேசியம்.

வோல்தம்ஸ்ரோவில் இடம்பெறும் சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடு எதிர்காலத்தில் தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறான ஒரு உறவை இடதுசாரி முன்னணி வளர்த்துக்கொள்ளும் என்பன போன்ற விடயங்களுக்கு இச்சந்திப்பில் விளக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை இங்கு பதிவிடும் பட்சத்தில் அவற்றை விக்கிரமபாகு கருணாரட்னவின் முன் வைக்கமுடியும்.

நிகழ்வு விபரம்:

இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உடனான கலந்துரையாடல்

November 28, 2010 @ 19:30

 Lord Broke Hall, Shernhall St, Walthamstow, London, E17 3EY

 Joint Invitation: ThesamNet & ASATiC

 T Jeyabalan (07800 596 786), T Sothilingam (07846 322 369)

யாழ் பல்கலையின் உப வேந்தராவதற்கு ரட்னஜீவன் ஹூல், வசந்தி அரசரட்ணம், என் சண்முகலிங்கம் தெரிவு.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வசந்தி அரசரட்ணம் என் சண்முகலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளையும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் 9 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பேராசிரியர் என் சண்முகலிங்கனும் 9 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களான பேராசிரியர் சத்தியசீலன் 8 வாக்குகளையும் பேராசிரியர் ஞானகுமாரன் 5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவுரையாளர் அல்வாப்பிள்ளை தனேந்திரன் ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார். தெரிவு செய்யப்பட்ட மூவரில் யார் உபவேந்தர் என்பது ஒரு வாரத்தில் தெரியவரும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

IDP_Camp_Injuredநினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

IDP_Camp_Injured_Manபிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும். தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

Speech from Vanni 27/11/2010
:http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Douglas_Devananda”யாழ் பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக் கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும். அவர்கள் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும்.”

Senate_Members_Meet_DD_29Oct10டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் (ஒக்ரோபர் 29, 2010 இல் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடிய போது தெரிவிக்கப்பட்ட கருத்து.)

யாழ் பல்கலைக்கழகம் அதன் கல்வியியல் தரத்திலும் நிர்வாகத்திலும் மிகக் கீழ்நிலையை அடைந்துள்ளது மட்டுமல்ல ஒரு கல்விக் கட்டமைப்புக்கு இருக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளையே இழுந்துள்ளமை முன்னைய கட்டுரைகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தாக்கத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களே பிரதிபலித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் உபவேந்தர்களாக பொறுப்பேற்றவர்கள் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்படாமை பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களும் அதற்கான பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றுவதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை தெரிவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு எட்டியுள்ளது. நவம்பர் 09 2010ல் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுநாள். அடுத்த பல்கலைக்கழகக் கவுன்சில் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் – வேட்பாளர்களைத் தெரிவதற்கான தேர்தல் நாள் குறிக்கப்படும். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.

உபவேந்தரிடம் யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்பார்பு:

யாழ் பல்கலைக்கழகம் தனது உபவேந்தருக்கான விண்ணப்பத்தை கோரும் அறிவிப்பில் உபவேந்தராக வருபவரிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை தெளிவாகவே வரையறுத்து உள்ளது. ”யாழ் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது. -The vision of the University of Jaffna is to be a leading centre of excellence in teaching, learning, research and scholarship. அதனுடைய முதற்கடமை தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும். – Its priorities are serving the country to improve the quality of Higher Education and promote research relevant for the development of the country in general and the Northern Region in particular.”என யாழ் பல்கலைக்கழகத்தின் பார்வையும் இலக்கும் தெளிவாகவே வரையறுக்கப்பட்டு உள்ளது.

”பல்கலைக்கழகத்தினுடைய முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சீரான நிர்வாகம் என்பவை உபவேந்தருடைய பொறுப்பு. – The Vice Chancellor shall be responsible for maintaining transparency, accountability and good governance in the management of the affairs of the University. உபவேந்தர் கல்வியியல் தலைமைத்துவத்தை வழங்குவதுடன் நிர்வாகக் கொள்கைகளை உருவாக்குவது, அறிமுகப்படுத்துவது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புடையவர். – The Vice Chancellor should provide academic leadership and is responsible for formulating, introducing and carrying out a streamlined management policy.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

”உபவேந்தர் பல்கலைக்கழகத்தினுடைய இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவராக இருக்க வேண்டும். – The Vice Chancellor shall be a person with a vision to carry forward the vision and goals of the University through his/her intellectual as well as managerial brilliance. அத்துடன் தேசத்தினுடைய தேவைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே உயர்கல்விக் கொள்கைகளை வகுக்கவும் பலப்படுத்தவும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி போன்ற பல்கலைக்கழகத்தின் கல்வியியல் செயற்பாடுகளை கால வரையறை மதிப்பீடுகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டும். – In addition, the Vice-Chancellor is called upon to identify needs of the nation in terms of national policies of higher education and should be able to strengthen the time tested values for the advancement of the University through academic activities including research & development.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வியியல் முகாமைத்துவப் பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைக் கல்விச் சமூகம் குறிப்பாக தமிழ் கல்விச் சமூகம் எப்போதும் எதிர்பார்க்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் நிலை:

ஆனால் துரதிஸ்ட்டவசமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் உப வேந்தர் பதவிக்கு வந்தவர்கள் பல்கலைக்கழகத்தின் இலக்கான ‘தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும்’ என்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையான ‘கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது’ என்பதனையோ பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

கல்வியியல் தகமை, நிர்வாகம், நிதிக் கையாள்கை என யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு அம்சங்கள் மிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. இதற்குக் காரணம் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமல்ல. தொண்ணூறுக்களின் நடுப்பகுதியின் பின் யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமே இடம்பெற்றது. தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ தான் யாழ் பல்கலைக்கழகத்தினை கீழ்நிலைக்கு இட்டுச்சென்றது என்பதனை முன்னைய கட்டுரையில் பார்த்துள்ளோம்.

மேலும் ”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என ஓடிற்றர் ஜெனரல் எஸ் சுவர்னஜோதி தனது 2009ம் ஆண்டு ஓடிற் அறிக்கையில் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

செப்ரம்பர் 09 2010ல் Firedrich Ebert Stifung என்ற ஜேர்மன் அமைப்பின் அணுசரணையில் இயங்கும் பருத்தித்துறை அபிவிருத்தி நிதியம், யாழ்ப்பாணத்தின் விவசாய மீன்பிடிப் பொருளாதாரத்தை அறிவியல் பொருளாதாரம் ஆக மாற்றுவது பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள கலிவியியலாளர்களும் மாணவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றுகையில் ”அறிவு என்பது மற்றைய எல்லாத்துறைகளைக் காட்டிலும் செல்வத்தை உருவாக்கக் கூடியது” என்றார் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான HSBC வங்கியின் மதிப்பீடு – அபாய முகாமையாளார் நிரஞ்சன் நடராஜா. யாழ்ப்பாணத்தில் வடக்கில் இயற்கை வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மூளைவளம் நிறையவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பல்கலைக்கழகங்கள் சந்தைக்கு ஏற்ப கல்வியை வழங்கி பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமே ஒழிய, பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகளை சந்தை உள்வாங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் என்பது பொருளாதாரச் சந்தையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஒரு கல்வி நிறுவனமல்ல. பொருளாதாரச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வது அதன் முக்கிய பாத்திரங்களில் ஒன்று. இல்லாவிட்டால் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற புள்ளிவிபரம் மட்டுமே மிஞ்சும்.

அதேசமயம் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் சமூக இயக்கத்தில் – நாட்டின் இயக்கத்தில் பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்கின்றன. இன்று அறிவியல் என்பது சமூகத்தின் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற விடயமாக உள்ளது. இந்த அறிவியலின் மையமாக பல்கலைக்கழகங்களே உள்ளன. அதனால் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம் முன்னரைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதுடன் அதன் தேவை பரந்ததாகவும் உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமூகம் எவ்வாறு இருந்தது என்ற வரலாற்றை ஆராய்வதுடன், அடுத்த சில 10 ஆண்டுகளில் சமூகம் எவ்வாறு மாற்றமடையும் விஞ்ஞர்னம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு அம்சங்களும் எவ்வாறான நகர்வை எடுக்கும், எவ்வாறான நகர்வை எடுக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்களே ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் அரசியலாளர்கள் முடிவுகளை மேற்கொள்கின்றனர்.  இவற்றுக்கான தகமையை யாழ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளதா என்பதற்கு கீழுள்ள மதிப்பீடு சாட்சியாகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5000 மாணவர்கள் பட்டப்படிப்பையும் 600 மாணவர்கள் பட்டமேற்படிப்பையும் மேற்கொள்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களை தொழில் நிறுவனங்கள் கூடுதலாக விரும்புவதாக இலங்கையில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் பல்கலைக்கழகம் போன்ற பாராம்பரிய பல்கலைக்களகங்களின் கல்வியியல் பலவீனங்கள், தலைமைத்துவம் அற்ற தன்மை, நிர்வாகச் சீர்கேடுகள் என்பன தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையைத் துரிதப்படுத்தும் நிலையும் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் 2010 தர வரிசைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10வது இடத்தில் உள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் முதலாவது இடத்தில் உள்ளது. உலகத்தர வரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் 1903ம் இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 9309ம் இடத்தில் உள்ளது. (தகவல்: யூலை 2010: Rankings Web by the Cybermetrics Lab CSIC)

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு:

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சியின் வேகத்தை மறுபக்கம் திருப்புவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடைய ஒருவர் உபவேந்தராக வருவது முக்கியமானது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு கீழ் வருவோர் தங்களை முன்நிறுத்தி உள்ளதாகத் தெரியவருகின்றது. இப்பட்டியல் இன்னமும் பல்கலைக்கழகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Vice-Chancellor
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India) – Dean, Faculty of Arts
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Dean, Faculty of Graduate Studies
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – Department of Bio Chemistry
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
தனேந்திரன் – Unuion Member with 2 A/L s

யாழ் பல்கலைக்கழகத்தைச் சாராத விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் ரட்ன ஜீவன்ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
ராஜரட்னம் – (இங்கிலாந்தில் இருந்து சென்றுள்ள பொறியியல் பட்டதாரி. மேலதிக விபரம் தெரியவில்லை.)

இவர்களில் இருந்து மூவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவரை ஜனாதிபதி உப வேந்தராக நியமிப்பார். பல்கலைக்கழகத்தில் இம்மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்படாதவர் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட மாட்டார். பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் தெரிவுக்காக நடத்தப்படும் வாக்கெடுப்பில் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இப்பல்கலைக்கழகக் கவுன்சிலில் 12 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் (12 + 1) 13 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து, சமூகப் பொறுப்புடையவர்கள் University Grand Commission ஆல் நியமிக்கப்படுவர். இந்தப் 13 பேரினதும் நியமனத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு உண்டு.

ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் மூன்று வெவ்வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். ஒருவருக்கு மட்டும் வாக்களித்து மற்றையவர்களுக்கு வாக்களிக்காமல் விடுவதன் மூலம் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

கடந்த காலங்களில் வேட்பாளருக்கும் வாக்களிக்கத் தகுதி இருந்தது. இம்முறை போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை எனத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் என் சண்முகலிங்கம் – (Vice Chancellor),
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – (Dean/Graduate Studies),
பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine),
பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce),
கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture),
பேராசிரியர் என் ஞானகுமரன் – (Dean/Arts),
பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science),
பேராசிரியர் செல்வி வி அரசரட்ணம் – (Rep of Senate),
பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate),
கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus),
திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus),
திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.),
அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.),
திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.),
திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.),
திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.),
திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.),
இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.),
திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.),
திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCS க்கு பொறுப்பானவர்.),
திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.)
திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்),
சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்),
டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

கல்வியியல் ஆளுமையினதும் முகாமைத்துவத் திறமையினதும் அடிப்படையில் உபவேந்தர் தெரிவு இடம்பெற வேண்டும்:

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம்  அங்கு நீண்டகாலம் பணியாற்றிய துறைத் தலைவர்கள் என் ஞானகுமரன், எஸ் சத்தியசீலன் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்கு போட்டியிடுகின்றனர். இப் பல்கலைக்கழகத்தை அமைச்சர் குறிப்பிட்டது போல் மிகச் சிறந்த முறையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் அவர்கள் முன்னேற்றுவதற்கு மாறாக பல்கலைக்கழகத்தினைச் சீரழிப்பதற்கே பல்வேறு வழிகளிலும் பங்கேற்று இருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுகின்ற பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களுடைய பீடங்களின் நிலையும் மோசமானதாகவே உள்ளது.

இக்கட்டான காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கற்பித்தோம் என்ற தகுதி மட்டும் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றப் போதுமானதல்ல. இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்கள் அதிகாரத் துஸ்பிரயோகமும் பாலியல் துஸ்பிரயோகமும் நிதி, நிர்வாகத் துஸ்பிரயோகமுமே செய்துள்ளனர். வடமாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு இவர்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

கடந்த காலங்களில் இருந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி இறுக்கமான தடுப்பை போட்டு, அப்பல்கலைக்கழகத்திலேயே படித்து, அங்கேயே பட்டம் பெற்று, அங்கேயே வேலையையும் பெற்று விடுகின்றனர். அதற்குள் வெளியே இருந்து யாரையும் அனுமதிக்க விடாப்பிடியாக மறுத்தே வருகின்றனர். வெளியார் நுழைந்தால் தங்கள் பலவீனங்கள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளேயே சமரசம்செய்து உள்ளேயே நியமனங்களையும் மேற்கொள்கின்றனர். அதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வியியல் தகமையும் அனுபவமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இவ்வாறான பலவீனங்களால், இப்பதவிக்காக இவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தயவை மட்டுமே நம்பி தங்கள் விசுவாசத்தை அமைச்சருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அமைச்சர் தனக்கு விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையில், தனக்குக் கட்டுப்படக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தவறான தெரிவுக்கு செல்வது தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்யப்படும் மிகப்பெரும் அநீதியாக அமையும்.

மேலும் பல்கலைக்கழகக் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களுக்கும் தமிழ்க் கல்விச் சமூகம் பற்றிய முக்கிய பொறுப்பு உள்ளது. இந்த உப வேந்தர் தெரிவுக்கு வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள கவுன்சில் உறுப்பினர்களில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களாகவும் 13 பேர் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர். சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத்தின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பெண்ணிலைவாதி என பன்முகத்தன்மையினதாக இந்தப் பல்கலைக்கழகக் கவுன்சில் உள்ளது. இவ்வாறான மதிப்புக்குரிய மிக உயர்ந்த பொறுப்புடையவர்களினால் தெரிவு செய்யப்படும் பல்கலைக்கழக உபவேந்தர் அந்த மதிப்பையும் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்.

 அறியப்பட்ட பேய்களும் அறியக் கூடிய தேவதைகளும்:

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்துள்ள சமூகத்திற்கு எஞ்சியுள்ள ஒரே நம்பிக்கை கல்வி. தமிழ் மக்களுக்கு அந்தக் கல்வியை வழங்குகின்ற உயர்ந்த ஸ்தாபனமான யாழ்பாணப் பல்கலைக்கழகம் கல்விச் சமூகத்திற்கு முன்னுதாரணமாக, தலைமை ஸ்தாபனமாக விளங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள ஒருவரையே மீண்டும் உப வேந்தர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் “Known devil is better than unknown angel” போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவகையில் இந்த கவுன்சில் உறுப்பினர்களே யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு நிற்பவர்களை ‘அறியப்பட்ட பேய்கள்’ என ஏற்றுக்கொள்கின்றனர். இன்று இணைய வலையில் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மறுமூலையில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இணையமும் தொலைபேசியும் சரியான தொடர்புகளும் போதுமானது. அதனால் நீங்கள் அறிய விரும்பினால், ‘அறியாத தேவதைகள்’ என்பதற்கு இடமில்லை. அகவே ‘அறியப்பட்ட பேய்கள்’ என நீங்கள் அடையாளம் கண்டவர்களை – தமிழ் மக்கள் அடையாளம் கண்டவர்களை முற்றாக நிராகரியுங்கள்.

‘அறியப்பட்ட பேய்கள்’ ஆக அடையாளம் காணப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்படுவது பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பீட்டை வெகுவாகப் பாதிக்கும். சமயத் தலைவர்களும் பெண்ணிலை வாதியும், பாடசாலை அதிபர்களும், கல்வியியல் மேதைகளும், உயர் பதிவியில் உள்ளவர்களும் இணைந்து இதுவரை பல்கலைக்கழகத்தைச் சீரழித்தவர்களை, பாலியல் துஸ்பிரயோகங்களுக்காக அறியப்பட்டவர்களை, உரிய கல்வித் தகமை அற்றவர்களை, நிர்வாகத்திறன் அற்றவர்களை உப வேந்தராக வர அனுமதிப்பது ஒரு போதும் நியாயப்படுத்தப்பட முடியாது. இது தமிழ் கல்விச் சமூகத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதி. அதற்கு யாழ் பல்கலைக்கழகக் கவுன்சில் காரணமாக இருக்கக் கூடாது.

உப வேந்தருக்காக போட்டியிடுபவர்கள் கவுன்சில் உறுப்பினர்களின் நீண்ட கால நண்பர்களாக இருக்கலாம். நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களின் தெரிவு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெரிவு. அதனால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அங்கு இடம்கொடாமல் தெரிவு செய்யப்படுபவர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பையும் கௌரவத்தையும் நிலைநிறுத்துபவராக இருக்க வேண்டும்.

அமைச்சர் தேவானந்தாவின் பொறுப்பு:

Douglas_Devanandaதமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்காமையாலேயே யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான விவாதம் பொதுத்தளத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு பற்றிய விவாதம் இதுவரை இவ்வாறான ஒரு பொதுத் தளத்திற்கு வரவில்லை. இம்முறையே இது பரந்த பொதுத்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஒரு மூடிய சமூகமாக யாழ் பல்கலைக்கழகம் இருக்க முடியாது என்பதையே இது காட்டி நிற்கின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டது போல், ”யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்” என்று அவர் விரும்பினால் அதனைச் சாதிக்கக் கூடிய, பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரந்த கல்வியியல் தகமையும் இலங்கையிலும் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய அனுபவமும் ஆளுமையும் உடைய ஒருவரே அப்பொறுப்பான பதவிக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

கல்வியை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராட ஆரம்பித்த அமைச்சரின் கைகளில் தற்போது அம்மக்களின் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கின்ற முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தகுதியானவர் யார் என்பதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு மிக நன்றாகவே தெரியும். இந்தத் தெரிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ‘கல்வித் தகமையினதும் நிர்வாகத் திறனினதும் அடிப்படையில்’ மிகப்பொறுப்புடன் எடுப்பார் என்று தமிழ் மக்களின் கல்வியின்பால் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

Mareeni_ManuelpillaiDr_LittleAidஇலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். செப்ரம்பர் 17 இல் இடம்பெற்ற ஆண்டுக் கூட்டத்தில் லிற்றில் எய்ட் உறுப்பினர்கள் இவரை ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.

உதவித் திட்டங்கள் 
மே 18 2009 ல் பிரித்தாகனிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் இதுவரை 20க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. தமிழ் அமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவர்கள் இந்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தனர்.

லண்டன் அகிலன் பவுண்டேசன், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், தேசம், தீவக மேம்பாட்டு சமூகம் ஆகிய தமிழ் அமைப்புகள் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மனித நேயத் திட்டங்களை முன்னெடுக்கின்றன.

Medicine Without Border, Global Medical Aid, Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவிகளை மேற்கொள்கின்றன. Medicine Without Border, Global Medical Aid ஆகியவற்றின் உதவியுடன் லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் பவுண்ட் பெறுமதியான மருத்துவ உதவிகளைப் (பெரும்பாலும் மருந்துப் பொருட்கள்) பெற்று பெரும்பாலும் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவ மனைகளுக்கு விநியோகித்தது. அரசுசாரா நிறுவம் ஒன்று இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களை இலங்கையில் பெற்று விநியோகித்தது இதுவே முதற் தடவையாகும்.

எதிர்காலம்
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் ஆரம்ப காலங்களில் முகாம்களில் இருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை மேற்கொண்டது. மரக்கறி வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகளை வழங்கியது.

மேற்கொண்டு இடைக்கால நீண்டகாலத் திட்டங்களையே லிற்றில் எய்ட் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, ஆங்கலக் கல்விக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் திட்டமிட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புக் அப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 20 வரையான கணணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவையும் இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்படும். லிற்றில் எய்ட்க்கு முதலாவது காசோலையை  வழங்கிய எம் சூரியசேகரம் லண்டனில் இருந்து யாழ் சென்று மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கு வழக்கு
புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புகளில் லிற்றில் எய்ட் அமைப்பு தனது கணக்கு கோவைகளை திறந்ததாகவும் வெளிப்படையாகவும் வைத்தள்ளது.

www.littleaid.org.uk என்ற இணையத்தளத்தில் கணக்கு வழக்குகளைப் பார்வையிட முடியும். இது ஏனைய அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ரஸ்டிகள் – உறுப்பினர்கள்
லிற்றில் எய்ட் இன் தலைவி: டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை, செயளாயினி: சர்மிளா பெர்னான்டோ. பொறுப்பான இரு பதிவிகளையும் பெண்களே வகிக்கின்றனர். தனாதிகாரி: சிறில் அல்பிரட், திட்ட இணைப்பாளர்கள்: சண் ராசையா, நிஸ்தார் மொகமட், ஜெயபாலன் தம்பிராஜா, ரரின் கொன்ஸ்ரன்ரைன். இவர்கள் இலங்கையின் பல்கலாச்சாரத்தன்மையை பிரதிபலிக்கும் வைகயில் அமையப் பெற்றுள்ளனர்.

‘ரஸ்டிஸ் வீக்’ இணையச் சஞ்சிகை லிற்றில் எய்ட் தலைவி மரினி மனுவேற்பிள்ளையை ஒரு வாரத்திற்கான ரஸ்டியாக தெரிந்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:

தற்போது இலங்கை சென்றுள்ள ரிற்றில் எயட் திட்ட இணைப்பாளர்களில் ஒருவரான ரி கொன்ஸ்ரன்ரைன் அங்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். அவை பற்றிய விபரம் பின்னர் பதிவிடப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

தரக் குறைவான மருத்துவ மையங்கள் மீது NHS நடவடிக்கை !

NHS_Logoநோயாளர் களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கத் தவறும் மருத்துவ மையங்கள் மீது பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு என்எச்எஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தரமான சுகாதார சேவையை வழங்கத் தவறுபவர்களில் ஆங்காங்கே தமிழ் மருத்துவ மையங்களும் தமிழ் மருத்துவர்களும் சிக்கி உள்ளனர். இவர்களில் சிலரின் மீதான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது.

வடக்கு லண்டன் கலோடோனியன் றோட்டில் பல்வைத்திய நிலையத்தை நடாத்தி வந்த கைலாசம் பஞ்சநாதன் மீது விதிக்கப்பட்ட இடைக்காலக் கட்டுப்பாடுகளை Islington Primary Care Trust தற்போது நீக்கி உள்ளது.

2008 ஒக்ரோபரில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு செய்முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாக கைலாசம் பஞ்சநாதன் மீது குற்;றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு General Dental Councilக்கு முறைப்பாடுகள் சென்றன. 2009 நவம்பரில் கைலாசம் பஞ்சநாதனின் பல்வைத்தியநிலையம் சோதணைக்கு உள்ளானது. தொற்றுநோய்  கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்கு கவனிக்கப்பட வேண்டிய 9 விடயங்களிலும் கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் தவறி இருந்ததை அச்கோதனை தெரியப்படுத்தியது. ஏப்ரல் 2009ல் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் பதிவு பற்றிய ஓடிற்றில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால் தனது தவறை உடனடியாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட கைலாசம் பஞ்சநாதன் தான் தொழில் செய்வதை இடைநிறுத்த முன்வந்ததுடன் தொழில்தர ஆலோசனையைப் பெற்று வைத்திய நிலையத்தின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணைக் குழு தெரிவித்து உள்ளது.

2009 யூனில் சுயாதீன அமைப்பினு+டாக கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் மீளவும் சோதணைக்கு உட்படுத்தபக்பட்டது. தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு இருக்க வேண்டிய 9 விடயங்களும் இம்முறை தரமுடையதாக இருந்தது.

கைலாசம் பஞ்சநாதன் தொடர்ந்தம் தரத்தை உயத்தி வருவதில் திருப்தி அடைந்த விசாரணைக் குழு அவர் பாதிக்கப்பட்ட விடயங்களில் தரத்தினை உயர்த்தி உள்ளதை ஆதாரபூர்வமாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரால் தரமான சேவைகளை வழங்க முடியும் என்பதை அக்குழு ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து அவர் தொழிலை மேற்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன்

Gobi_RatnamSutha_NadarajahCheran‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான மாநாடு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 23ல் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை International Association of Tamil Journalists – சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பின் முதலாவது மாநாடு 2008 ஏப்ரல் 26ல் இடம்பெற்றது.

இந்த ஊடக அமைப்பில் உள்ள பிரதான ஊடகங்கள் ஐபிசி, ஒரு பேப்பர், ஜிரிவி (2008ல் ரிரிஎன்), தமிழ் கார்டியன் போன்ற லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே. ஏனைய நாடுகளில் உள்ள புலிஆதரவு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் வி பிரபாகரன் மீதும் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட ஆனந்தி சூரியப்பிரகாசத்தைத் தலைவியாகக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது. பிபிசி தமிழோசையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருடைய சர்வதேச ஊடகவியல் முகத்தின் பின்னால் இருந்து இவ்வமைப்பை இயக்குபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே.

2008ல் நடந்த மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் ‘ஆணிவேர்’ படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திலகராஜா தம்பதிகள். திலகராஜா தற்போது வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹொட்டல்களை உருவாக்கி வருகின்றார். அந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கியவர் ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணம். தமிழ் கார்டியன் சுதா நடராஜா, விநோதினி கணபதிப்பிள்ளை ஆகிய இருவரும் 2008 மாநாட்டில், முக்கியமாக உரையாற்றியவர்கள், 2010 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளர்களாக உள்ளனர். அதே போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தியல் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சேரன் 2008 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டவர், 2010 இலும் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்கிறார். ரிரிஎன் தொலைக்காட்சிக்கு பிரதியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் ஜீரிவி யும் இம்மாநாட்டில் முக்கிய பங்கெடுக்கின்றது. ஜிரிவி இன் நிகழ்ச்சி வழங்குநர் தினேஸ் மாநாட்டின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.

 ஊடகங்களின் புலிமயமாக்கல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பெரும்பாலான பொது அமைப்புகளை புலிமயமாக்கலுக்கு உட்படுத்தி வந்தன. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஊடகங்களும் இந்தப் புலிமயமாக்கலில் இருந்து தப்பவில்லை. இந்தப் புலிமயமாக்களில் புலி ஆதரவு ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலிமயமாக்கலின் உச்சமாக 2007 பிற்பகுதியில் தமிழ் ஊடகங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வானொலியான ஐபிசி வானொலியின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற ரமணன் என்பவரே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். தமிழ் சர்வதேச செய்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு ஐபிசி கலையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை குகன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பிற்கான அழைப்பு தெரிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் சிலருக்கே கொடுக்கப்பட்டது.

அவ்வழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அப்போது தீபம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக இருந்த கண்ணன் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது புலிமயமாக்கலின் உச்சமான நிகழ்வு. இந்த ஊடக அமைப்பில் புலிகள் மீது மென்போக்குக் கொண்ட அல்லது புலிகளை விமர்சிக்கவோ அல்லது புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வந்த தீபம் தொலைக்காட்சி, சன்றைஸ் வானொலி போன்ற ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர்களுமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதான புலி ஊடக அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வமைப்பின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் மட்டுமே இந்த அமைப்பிற்கு ஒரு ஊடகவியல் சாயத்தை வழங்கிக் கொண்டு உள்ளார்.

 ஊடகவியலின் அடிப்படை:

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களின் காவலர்களாக செயற்பட வேண்டும். ஊடகத்தின் முதலும் முக்கியமானதுமான கடமை உண்மையை வெளிக்கொணர்தல். நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகவியலின் பங்கு மகத்தானது. இவ்வாறான ஊடகவியலின் அடிப்படை அம்சங்கள் எதனையுமே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கொண்டிருக்கவில்லை.

இந்த ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் விம்பங்களைக் கட்டி அவர்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறான விமர்சனங்களை வைப்போர் மீது தனிமனித தாக்குதலை நடாத்தியது. ஆகவே International Association of Tamil Journalists என்பதிலும் பார்க்க International Association of Tiger Journalists என்பதே இவ்வமைப்பிற்கு பொருத்தமான பெயராக இருக்க முடியும்.

”இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்கெடும்”
                        (குறள் 448)

‘தவறுகளை இடித்து உரைக்கின்றவர்கள் இல்லாது இருந்தால், எப்படிப்பட்ட சிறப்பான மன்னனாக இருந்தாலும் அம்மன்னனுக்கு கேடு செய்பவர்களே இல்லாவிட்டாலும் அம்மன்னன் கெட்டு அழிந்து போவான்’ என்கிறது இக்குறள்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகி உள்ளது தமிழ்த் தேசிய மன்னன் வே பிரபாகரனும் International Association of Tiger Journalists ம். மே 18 வரை இந்த ஊடகங்கள் எழுதிய எவ்வித ஆதாரமோ அடிப்படையோ அற்ற செய்திகளும் ஆய்வுகளும் புகழ் மாலைகளும் வே பிரபாகரனினது தலைமையினதோ தமிழீழ விடுதலைப் புலிகளினதோ எவ்வித தவறான அணுகுமுறையையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் சுற்றி விம்பங்களைக் கட்டமைத்தன. விளைவு…..
‘இடிப்பாரை இல்லாத ‘வே’யன்னா மன்னன்
கெடுப்பாருங் செய் கெட்டான்’

உண்மைகளை இருட்டடிப்புச் செய்தனர்:

International Association of Tiger Journalists அமைப்பில் உள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பேராசிரியர் சேரன் போன்ற மதியுரைஞர்களும் வன்னி மக்களைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைக் காப்பாற்ற முற்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வன்னி மக்கள் ஆயிரம் ஆயிரமாகச் செத்து மடிந்த போதும் இந்த ஊடகங்கள் மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. மாறாக அந்த மண் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று கதையளந்து அம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்க நிர்ப்பந்தித்தன. இந்த ஊடகங்களின் சில ஊடகவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பியோடிய மக்களை எவ்வித கூச்சமும் இன்றி துரோகம் இழைப்பதாக விபரித்தனர்.

மாநாட்டில் பங்குபற்றுவோர்:

இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள். மேலும் நோர்வேயில் இருந்து சேந்தன் என்ற இளைய தலைமுறை இளைஞரும், டென்மார்க்கில் இருந்து மற்றுமொரு இளைஞரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கையில் இருந்து வீரகேசரி ஆசிரியர் தேவராஜா கலந்துகொள்கிறார்.

இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் சார்பில் ரமேஸ் கலந்துகொள்கின்றார். தமிழகத்தில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிய இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர். தனது கருத்துக்களை அனேகமாக வெளிப்படையாகவே தெரிவிக்கக்கூடியவர். பக்கம்சாராது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். இவருடைய உரை அங்குள்ள பலருக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். இவருடன் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2008ல் டெக்கன் ஹரல்ட் சார்பில் பகவான் சிங் கும் சுந்தரராஜன் முராய் உம் கலந்துகொண்டனர். 2010 மாநாட்டுக்கு ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் இலங்கைப் பிரிவில் இருந்து அம்ரித் லால் என்ற வட இந்தியர் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்றவர்…..

புலிஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் சகோதரர் அருள்எழிலன்

தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இனியொரு இணையத்தின் முக்கிய ஊடகவியலாளருமான அருள்எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடக மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவர் இலங்கையில் இயங்கும் டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதன் செப்ரம்பர் 3ல் தமிழகத்தில் வைத்து கடத்தல் – கைது விவகாரத்தில் தொடர்புபட்டவர். (டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்)

இந்த மாநாட்டுக்கு இந்திய ஊடகவியலாளர் அம்ரித் லால் உடன் தமிழகத்தைச் சேர்ந்த, ‘தேசியத் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஊடகவியலாளரைத் தேடினர். ஜுனியர் விகடன் ஊடகவியலாளர் ஒருவரையே அழைக்க ஆரம்பத்தில் முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி படத்தின் இயக்குநரையும் அழைக்க முயற்சிக்கப்பட்டது. இருவருக்கும் வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்பதால், இறுதியாக ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றிய, மதியுரைஞர் காலம்சென்ற அன்ரன் பாலசிங்கத்திடம் பேட்டி காண லண்டன் வந்த அருள் சகோதரர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைக்க முடிவாகியது. அருள் எழிலன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

புலிகளின் சம்பளப் பட்டியலில் சில தமிழக ஊடகவியலாளர்கள்:

இன்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் ஊடகவியலாளரும் புலம்பெயர் புலி முகவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். அல்லது அதனூடாக லாபம் அடைகின்றனர். ஈழத் தமிழரின் அவலம் பற்றி எழுதுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி எழுதுவதும் தமிழக வியாபார ஊடகங்களின் எழுத்தாளர்களின் ஒரு வியாபாரத் தந்திரமாக மாறியுள்ளது.

நக்கீரன், நக்கீரன் கோபால் போன்ற இந்த வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் வாடகை உணர்வுகள் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கே வித்திட்டு உள்ளது.

Pirbaharan_Still_Alive_NotPirabaharan_Still_Aliveமே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் எல்லாம் வெளிவந்த போது நக்கீரன் சஞ்சிகை தலைவர் உயிருடன் இருப்பதாக படம் காட்டியது. (உண்மையான படமும் நக்கீரன் கிராபிக்ஸ் செய்த படமும் அருகில் இணைக்கப்பட்டு உள்ளது.) இன்னுமொரு சஞ்சிகை அவர் எப்படித் தப்பிச் சென்றார் என்று தொடர் எழுதியது.

இவ்வாறான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பணம் லண்டனில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பியவருடன் கூட இருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை கெ பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே (யூன் 14 2009ல்) தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

 பணத்திற்காக செய்திகளை உருவாக்கும் சில தமிழக ஊடகங்கள்:

டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதனைத் தவிரவும் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், கப்பம் வாங்கல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஈஎன்டிஎல்டிப் அமைப்பு நக்கீரன் பத்திரிகை எவ்வாறு ஒரு கடத்தல் நாடகத்தை பின்னுகிறது என எழுதியுள்ளது.

‘‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்’ என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள்” என ஈஎன்டிஎல்எப் அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தமிழக எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான ஆதவன் தீட்சண்யா செப்ரம்பர் 20ல் வருமாறு தேசம்நெற் இல் பதிவிட்டுள்ளார். ”மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் (அருள் சகோதரர்கள்) எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்து வைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்” என்கிறார்.

 குகநாதன் கைது கடத்தல் வீடியோ பதிவு எங்கே:

குகநாதனை தாங்கள் கடத்தவில்லை என்றும் பொலிசாரே கைது செய்தனர் என்றும் கூறும் அருள் சகோதரர்கள் குகநாதன் தங்களுக்கு தர இருந்த சம்பளப் பாக்கியையே நீதிமன்றத்திற்கு வெளியே ஆனால் சட்டப்படி வாங்கிக் கொண்டு குகநாதனை விடுவித்ததாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ் அரங்கம் இணையத்தில் செப்ரம்பர் 03ல் டி அருள் செழியன், ”குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும். இரயாகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னைச் சட்டப்படி கடத்தியதாக தேசம்நெற்க்கு தெரிவித்த குகநாதன் அருள்செழியன் மேலே குறிப்பிட்ட வீடியோவை எவ்வித எடிற்றிங்கும் செய்யாமல் வெளியே விடும்படி சவால் விட்டார். (குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்) ஆனால் ”அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” என்ற அருள் சகோதர் இதுவரை அதனை வெளியிடவில்லை.

(மாறாக அருள் சகோதரர்களின் கடத்தல் – கைது விவகாரத்தை சட்டப்படியானது என்று வாதிடும் இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் குகநாதனின் மனைவியை இரவு நித்திரையால் எழுப்பி பதிவு செய்த ஒலிப்பதிவை இனியொருவில் பதிவிட்டார். இதுதொடர்பான கட்டுரை தேசம்நெற் இல் வெளியானதும், அதற்கு எவ்வித மனவருத்தத்தையும் வெளியிடாத இனியொரு இணையத்தளம் திருமதி குகநாதனின் ஒலிப்பதிவை சத்தமின்றி நீக்கியது. தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதும் அதனை திருத்திக் கொண்டது வரவேற்கத்தக்கதே.)

தமிழகச் சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் மக்கள் பற்றிய பாராமுகம்:

இலங்கையில் வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் கடந்த ஆண்டு முதல் பட்டுவரும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை அவற்றை விபரிக்க இங்கு வார்த்தைகள் இல்லை. இதனிலும் மோசமான வாழ்வை ஈழத்தமிழர்கள் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களின் துயர் மிகு வாழ்வு தொடர்பாக அங்கு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதுடன் அவர்களை விடுவிக்கும் படியும் குரல்கொடுத்து வருகின்றார். இதே கருத்தை தேசம்நெற் வாசகர் ஒருவரும் வெளிப்படுத்தி இருப்பதை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். (‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.)

ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி குரல் எழுப்பும் தமிழக ஊடகங்களும் அருள் சகோதரர்கள் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளனர். ”இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் (ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால் தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக் கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?” என்று இவர்கள் அந்த சிறப்பு முகாம் அகதிகள் பற்றி கணக்கெடுப்பதே இல்லை என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

அருள் எழிலனுக்கு புரட்சிகரச் சாயம்:

தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க, ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகஇக வின் அரசியலை முன்னெடுத்து வந்த இரயாகரனை ‘அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம்!!’ என்று ஒக்ரோபர் 05ல் மகஇக அறிக்கை விட்டுள்ளது. மார்க்சிய லெனினிய (எம் எல்) கருத்துக்களை முன்னெடுத்து வருகின்ற தமிழரங்கம், இனியொரு, மகஇக என்பனவற்றின் இணைப்பு இரசாயனம் மாறிவிட்டது. தற்போது எம் எல் (ரயா அணி), எம் எல் (நாவலன் அணி), எம் எல் (மகஇக அணி) இடையே அருள் சகோதரர்கள் என்ற ஊக்கியால் எம் எல் நாவலன் அணியும் எம் எல் மகஇக அணியும் புதிய இணைப்பை உருவாக்கி உள்ளன. இப்பிணைப்பில் ‘மே 18’ காரணி முக்கியமானது என்கிறது தமிழரங்கம்.

அருள் எழிலனுக்கு ‘புரட்சிகர பத்திரிகையாளர்’ என்ற சான்றிதழுக்கு எழுதிய கட்டுரை தொடர்பாக ஒக்ரோபர் 4ல் சீலன் என்பவர் ”புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் (மகஇக வின்) ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அதே தளத்தில் வெளியான கட்டுரையில் வருமாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ”மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல் பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியின் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும் அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல் விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.”

மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களின் (ரிரிஎன்) சம்பளப் பட்டியலில் இருக்கும் வரை விமர்சனமற்ற வழிபாட்டை மேற்கொண்டு வந்துவிட்டு இப்போது மார்க்சிய புலிகளின் சம்பளப் பட்டியலுக்கு மாறியதால் சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருகிறார் என மகஇக கதை புனைகிறது. புலி ஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் எழிலன் தன்னுடைய என்ன கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டார் என்பது ஓரளவுக்காவது தெரியவரும்.

ஆ மார்க்ஸ் புலிஆதரவு ரிரிஎன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதே ஒரு சமயத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அ மார்க்ஸ் களங்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட்டது. புலிகளின் ஊடகவியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட மார்க்சிய சாயம் பூசப்பட்ட தனது கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வரும் அருள் எழிலன் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் என்ற எண்ணம் தேன்நிலவில் உள்ள இந்த புதிய அணிசேர்க்கைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.

2010 மாநாடு பற்றி இறுதியாக…..

இந்த புலி ஆதரவு ஊடகவியலாளர் மாநாடு மீண்டும் தவறான வழியிலேயே பயணத்தை தொடர முற்படுவதையே காட்டுகின்றது. ரிரிஎன் தொலைக்காட்சி புலி ஆதரவு ஊடகக் குழுமத்தால் ஆரம்பிக்கப்படவில்லை. எஸ் எஸ் குகநாதனால் உருவாக்கப்பட்ட ரிஆர்ரி தொலைக்காட்சி புலிகளின் கைக்கு மாற்றப்பட்டு ரிரிஎன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அவை வரலாறாகிய பழங்கதை. ஆனால் தற்போது டான் தமிழ் ஒளியை நடாத்திவரும் எஸ் எஸ் குகநாதனைக் கடத்தி – கைது செய்து 15 லட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்று பின் விடுவித்த அருள் சகோதரர்களில் ஒருவரை இம்மாநாட்டின் பேச்சாளராக அழைத்ததன் மூலம் இம்மாநாடு எதனைச் சொல்ல வருகின்றது?

இம்மாநாடு புலி ஊடகங்கள் தங்கள் இருப்பை அறிவிக்கவும் தாம் இன்றும் பலமாக உள்ளோம் என்பதையும் நிறுவுவதற்காக எடுக்கும் முயற்சியே.

ஏப்ரல் 26 2008 மாநாட்டில் ஊடகவியல் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் புலி ஆதரவு ஊடகங்களின் போக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த மாநாட்டின் பின்னரேயே மிகப்பெரும் அழிவை நோக்கி வன்னி மக்களை இப்புலி ஊடகங்கள் அழைத்துச் சென்றன.

ஆகவே வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த ஊடகங்களின் 2010 மாநாடு ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ (“Media and the Tamil question in a globalizing world”) என்ற தலைப்பிலும் பார்க்க ‘புலிமயமாகியுள்ள ஊடகங்களும் தமிழர் பிரச்சினையும்’ என்ற தலைப்பில் கடந்த காலத்தில் தங்களது ஊடகவியல் போக்குப் பற்றியும் அது பேரழிவுக்குத் துணை போனது பற்றியும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இம்மாநாடு ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

ஏரிஎன் இல் நகைச்சீட்டு: பணம் இன்னமும் வழங்கப்படவில்லை!

ATN_Jewelersகட்டப்பட்ட நகைச்சீட்டு முடிவடைந்து பல மாதங்களாகிய நிலையிலும் சீட்டுப் பிடித்தவர்கள் தங்கள் பணத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றனர். பலருக்கு சில ஆயிரம் பவுண்கள் வரை இன்னமும் கொடுக்கப்படாமல் உள்ளதாகத் லண்டன் குரலுக்குத் தெரியவருகிறது. சிலருக்கு தவணையிடப்பட்டு வழங்கிய காசோலைகளும் அவர்களது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி உள்ளது. பாதிக்கப்பட்ட சிலருக்கு சில நூறு பவுண்கள் வழங்கப்பட்டும் உள்ளது.

2008 ஓகஸ்ட்டில் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்த சீட்டுக்களின் கொடுப்பனவுகளும் அதற்கு முன்னான கொடுப்பனவுகளும் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே நகைச்சீட்டைப் பிடித்த ஏரிஎன் ஜீவலர்ஸ் மூடப்பட்டு ஏரிஎன் சொப் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதுவும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இச்செய்தி லண்டன் குரல் இதழ் 34ல் வெளியாகியது. ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!! இதனையடுத்து இத்தகவல் வழங்கியதாக தாங்கள் சந்தேகப்பட்ட சிலரை ஏரிஎன் ஜீவலர்ஸ் மிரட்டியதுடன் லண்டன் குரல் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக அநாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இம்மிரட்டல்கள் தொடர்பாக சிங்போட் பொலிஸ் நிலையத்தில் குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.