யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் செய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் புத்தளம் அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் உள்ளனர். புத்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பித்தால் குறித்த பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதி தேர்தல் செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுமணசிறி கூறினார்.