கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி: ஒடுக்குமுறையை உடைத்து முளைத்த வீரியமான மானிடன் அதிபர் பெருமாள் கணேசன்!

கடந்த ஏழு தசாப்தங்களாக திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இன்று மிகமோசமான மனிதக் கொடூரத்தின் சாட்சியங்களாக மாறியுள்ளனர். ஹிட்லரின் இனப்படுகொலைக்கு பலியாகி துரத்திவிடப்பட்ட யூதர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களுக்கும் வாக்களிக்கப்பட்டதாக சொல்லப்படும் பாலஸ்தீனத்தில்; அடைக்கலம் கொடுக்கப்பட்டது. இன்று அடைக்கலம் புகுந்தவர்கள் அங்குள்ள அந்த மண்ணை விட்டு நீங்காத பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையைப் புரிகின்றது இஸ்ரேலிய இராணுவம். காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அதிநவீன ஆயதங்களை மட்டும் இஸ்ரேலிய கொடுங்கோல் அரசு பயன்படுத்தவில்லை, அவர்களுக்கு கிடைக்கும் தண்ணியை நிறுத்தினர். உணவை நிறுத்தினர். பாண் ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகங்களை குறி வைத்துத் தாக்கினர். வாழ்விடங்களை தரைமட்டமாக்கினர், வீதிகளைக் கிளறி நாசம் செய்தனர். கழிவுகளை பரவவிட்டு தொற்றுநோய்கள் பரவச் செய்தனர். யாரும் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிடாதபடி மருத்துவமனைகளை அழித்தனர். காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய வெள்ளையின மேலாதிக்கவாதிகள் உலகெங்கும் சென்று இன அழிப்புச் செய்து அந்த நாடுகளைச் சுரண்டிக் கொள்ளையடித்து தங்கள் செல்வத்தை வளர்த்தனர். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்றழைக்கப்பட்ட பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டனர். கதை முடியவில்லை தொடர்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கின்றனர். பாலஸ்தீன நிலத்தை அபகரிக்கின்றனர். இதற்கும் மணிவிழாக் கொண்டாடும் நாயகன் பெருமாள் கணேசனுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?

காலனியாதிக்கவாதிகளின் கொள்ளைக்கும் அதிகாரத்திமிருக்கும் பலியான பல நூறு ஆயிரம் சமூகங்களில் ஒன்றான மலையக சமூகத்திலிருந்த வீரியமுடைய விதையில் முளைத்த மானிடன் தான் பெருமாள் கணேசன். இப்போது மலையகத்தின் 200 ஆண்டுகள்ளை எண்ணிப் பார்க்கின்றோம். ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் 200 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தார்கள் என்பதைக் காட்டுவது தான் காஸா மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர். காலனித்துவ காலத்தில் தமிழகத்தில் கொடிய பட்டினியால் மக்கள் இலட்சக் கணக்கில் இறந்தபோது, தானியங்களை இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றியவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள். பஞ்சத்தை பயன்படுத்தி அம்மக்களை தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பணியாற்ற இலங்கைக்கு கொண்டு வந்தனர். அந்த மலையக மக்கள் அன்றுபட்ட அவலம் காஸாவில் இன்று அதே ஏகாதிபத்தியம் செய்கின்ற கொடுமைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அன்றும் சரி, இன்றும் சரி அவர்கள் ஏனைய மக்களை மனிதர்களாகவே கணிக்கவில்லை. மனித விலங்குகளாகவே கணிக்கின்றனர். அவ்வாறே இஸ்ரேலிய தலைவர்கள் மனித விலங்குகள் என்று கூறுகின்றனர்.

இந்த மலையக மக்கள் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பொய்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இன்று இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த போதும் இலங்கை மக்கள், தமிழ் மக்களும் கூட அவர்களை கண்ணியமாக அன்றும் நடத்தவில்லை. இன்றும் நடத்தவில்லை. நாளை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் ஏற்படவில்லை. மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் நீட்சியாக ஜேவிபி உட்பட பேரினவாதக் கட்சிகள் பார்த்தன. அம்மக்களை தங்கள் எதிரிகளாக பார்த்து இன்றும் தோட்ட அடிமைகளாக நடத்துகின்றனர். தமிழ் மக்களும் அந்த மக்களை கள்ளத் தோணிகள், வடக்கத்தையான் என்றெல்லாம் முத்திரைகுத்தி தங்கள் அடிமைகளாகவே தொடர்ந்தும் வைத்திருந்தனர். பின்நாட்களில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் யாழ் மேட்டுக்குடிகள், கிளிநொச்சியில் பெற்றுக்கொண்ட காணிகளுக்கு தோட்டங்களுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படாத மலையக மக்கள் தோட்டக்காரர்களாகினர்.

இவர்களில் சில லட்சம் பேர் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதும் அங்கும் அவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வறுமை தலைவிரித்தாடும் உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் ராமர் கோயில்கட்டி மக்களுக்கு ‘நாமம் போடும்’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பாடசாலைகளையோ தொழிலகங்களையோ அமைக்கத் தயாரில்லை. ராமர் கோயிலைக்கட்டி மக்களை முட்டாள்களாக வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் தலைவர்களாக இருக்கலாம் என்ற சமன்பாட்டை உணர்ந்த பழுத்த அரசியல்வாதி அவர். யாழ் மேட்டுக்குடியின் நீட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு தற்போது தலைவரான எஸ் சிறிதரனும் மோடியின் சமன்பாட்டையே நம்புகின்றார்.

இவற்றுக்கு மறாக தனது சமூகத்தின் மத்தியில் மூட நம்பிக்கைகளைக் களைந்து அம்மக்களை அறியாமை எனும் அடிமைத்தளைகளில் இருந்து நீக்குவதை தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் அதிபர் பெருமாள் கணேசன். பெயர்பெற்ற பாடசாலைகளுக்கு போட்டி போட்டுச் செல்லாது, பின் தங்கிய பிரதேசங்களில், பாடசாலைக்கு ஆசிரியராகி, அதிபராகி அதனை மேன்நிலைக்கு கொண்டுவரப் பாடுபடுகின்ற அதிபர் பெருமாள் கணேசன் போன்ற மிகச் சிலர் இருப்பதால் கிளிநொச்சி மண் இன்றும் தன் கல்விநிலையில் முன்னேறத் துடிக்கின்றது. கல்வி நிலையில் பின் தங்கியுள்ள கிளிநொச்சியில் தமிழ் ஆசிரியர்களுக்கே போதாமை உள்ள போது ஆங்கிலக் கல்வியில் புலமைபெற்று அம்மண்ணில் ஆங்கில மொழியறிவையும் வளர்த்து வருகின்றார்.

அதிபர் பெருமாள் கணேசனுக்கும் எனக்குமான உறவு அகலமான, ஆழமான, நீண்ட உறவல்ல. நாங்கள் அடிக்கடி உறவாடியவர்களும் உரையாடுபவர்களும் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஓரிரு முறை உரையாடி இருப்போம். ஆனாலும் அந்த உறவு மிக ஆரோக்கியமானதாக இருக்கக் காரணம் இருவரிடமும் இருந்த சமூகத்தின் மீதான நேசம். அதனால் அதிபர் பெருமாள் கணேசன் பற்றிய எனது விம்பம் அவர்சார்ந்த அவரைச் சூழ உள்ளவர்களால் கட்டப்பட்டது. இதற்கெல்லாம் மணிமகுடம் சுட்டியது போல் அமைந்தது அவருடைய அகச்சீற்றம். அவருடைய போராட்ட குணாம்சம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்நிறுத்துகின்ற அடையாளம். அதனை அவர் எதிர்கொள்கின்ற பாணி. “நான் தோட்டக்காட்டான்!”. அதில் அவர் தன்னுடைய அடையாளத்தையே தன்னுடைய பலமாக மாற்றுகின்ற துணிச்சலைக் காண முடிகின்றது. இது வெறும் துணிச்சல் அல்ல. தன்நம்பிக்கையின் அடையாளம். இந்தத் துணிச்சல், ஒடுக்கும் மேட்டுக்குடிகளுக்கு சவாலாக உள்ளது. ஒரு சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்றால் அவர்களின் அடையாளத்தை கீழ்நிலைப்படுத்த வேண்டும். அவர்கள் யார் என்பதை வெளியே சொல்ல அவர்களே தயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதனையே காலம் காலமாக மேட்டுக்குடிகள் செய்தன. அவர்களை அந்த அடையாளத்தைப் பயன்படுத்தியே ஒடுக்கினர். பாதிக்கப்பட்டவர்கள் நிலவுக்குப் பயந்து பரதேசம் சென்றது போல் தங்களுக்கு வேறு அடையாளங்களை போர்த்திக்கொள்ள முயன்றனர். ஒடுக்குபவன் விடவில்லை. அவர்களின் அடையாளத்தை தோண்டி எடுத்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறான். அதிபர் பெருமாள் கணேசன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அதிபர் பெருமாள் கணேசனை யாராலும் ஒடுக்க முடியவில்லை, பாசத்தாலும் நட்பாலும் அல்லாமல்.

இலங்கையின் தமிழர் தாயகங்களில் யாழ்மாவட்டத்துக்கு இருக்கின்ற கல்விப் பாரம்பரியம் ஏனைய மாவட்டங்களுக்கு இல்லை. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் சிலநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டது. காலனியாதிக்க காலம் முதலாக அங்கு ஒரு கல்விப் பாரம்பரியம் உருவானது. அது மேட்டுக்குடிகளுக்கான கல்வியாகவே அமைந்தது. அதன் தாக்கத்தை இன்றும் தமிர்களிடையே பரவலாகக் காணலாம். கல்வி என்பது காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க வெள்ளாளர்களுக்கானதாக இருந்து பின் ஆறுமுகநாவலரின் சைவ மறுமலர்ச்சியைத் தொடர்ந்து யாழ் வெள்ளாள ஆண்களுக்கானதாக மாறியது. பின்னாளில் அது யாழ் சைவ வேளாளர்களுக்கானதாக மாற்றமடைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மையில் வெளியான தமிழ் வாழ்த்துக் கூட கல்வியை யாழ் மாவட்டத்துக்கானதாகவே சித்தரிக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்காக அதிபர் பெருமாள் கணேசன் போன்ற கல்வி ஆளுமைகள் பல்வேறு சமூகங்களில் இருந்து உருவான போதும் இன்றும் கல்வி அனைவருக்குமானதாக உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை.

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் என்பது இந்த நாகரீக உலகத்தின் மிக உன்னதமான வளர்ச்சித்திட்டம். உலகின் செல்வந்தர்களில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமானவர்களைத் தன்நாட்டில் கொண்டுள்ள உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் கல்வி ஜனநாயகமயப்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் சென்று திரும்பும் ஒவ்வொரு மாணவனும் 2 கோடி ரூபாய் கடனுடனேயே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்றனர். ஆனால் சின்னஞ் சிறிய இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு சதம் கடன் இல்லாமல் வெளியே வருகின்றனர். இந்தப் பட்டதாரிகளை அமெரிக்காவும் கனடாவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் உடனேயே உள்வாங்குகின்றனர். இப்பட்டதாரிகளுடைய கல்வித்தரம் அம்மேற்கு நாடுகளின் கல்வித் தரத்துக்கு ஒப்பானதாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களை மருத்துவ தாதிகளை நம்பியே பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இலங்கையில் இலவசக் கல்வி இருந்த போதும் கல்விக் கட்டமைப்புகள் காலனித்துவத்தின் நீட்சியாகவே இன்றும் இருக்கின்றது. இக்கல்வித் திட்டம் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மலையக மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தாய்மொழிக்கல்வி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம வாய்ப்பை அளித்தாலும் மொழிக்கு அப்பாலான பொருளாதார, பிரதேச, சாதிய தடைகள் இன்றும் பரவலாக உள்ளது. இத்தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சமூகம் அரசியல், பொருளாதார, இன, மத, சாதிய, பிரதேச அடிமைக்கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு கல்வி இன்றியமையாதது. ஆனால் ஆண்டாண்டு காலமாக நூற்றாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக உட்பட்ட ஒடுக்கப்படும் சாதிகளும் மலையக மக்களும் அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே கனவுகள் மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று நம்ப வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது தன்னம்பிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது.

காலனித்துவத்தின் நீட்சியாக உள்ள இலங்கைக் கல்விக் கட்டமைப்பு இங்குள்ள அதிகாரக் கட்டமைப்புக்கு சேவகம் செய்கின்ற வகையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே பிரித்தானிய கல்விக் கட்டமைப்பாகவும் உள்ளது. அதன்படி கல்வியில் மேன்நிலை அடையக்கூடியவர்களை மட்டும் வளர்த்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளும் இம்முறை ஏனையவர்களைப் பற்றிக் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறான சிந்தனைமுறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டு உயர் கல்வி வரை அது அனைவருக்குமான வகையில் ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால் சமூக ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஒடுக்குமுறையும் இன்னும் ஆண்டாண்டு காலத்திற்குத் தொடரும்.

துரதிஸ்டவசமாக கல்வியில் மேன்நிலை அடைபவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினராகவே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அந்தக் கல்விக் கட்டமைப்பில் வெற்றிபெறுவதற்கான தடைகள் பாரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலை, குடும்பத்தினுடைய கல்வி நிலை, அவர்களுடைய குடும்பத்தில், அவர்கள் வாழ்கின்ற சமூகத்தில் கல்வி பற்றிய பார்வை, அவர்களுடைய சூழலில் கல்விக்கான வாய்ப்பு வசதிகள், கல்விக்கான நவீன சாதனங்களுக்கான வாய்ப்பு என மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேற முடியாமல் பாரிய தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தடைகளைத் தாண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் முன்னேறுகின்ற போது கல்வி மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளின் மேல்மட்டங்களில் உள்ளவர்கள் அவர்களுக்கு தடைகளைப் போட்டு அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். மலையக, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பாடசாலைகளுக்கு அதிபர்களாக வருவது, கல்வி அதிகாரிகளாக வருவது, பல்கலைக்கழக துறைசார் தலைவர்களாக வருவது, துணை வேந்தர்களாக வருவது, மாகாணசபை உறுப்பினர்களாக வருவது, பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது. அன்று ‘சூரனின் சுயசரிதை’ நூலில் குறிப்பிட்டவாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டிய ஆரம்பப் பாடசாலையை தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எரித்து நாசமாக்கிய வரலாறு இன்று இடம்பெறவில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தை தடுப்பதற்கு இக்கட்டமைப்புகளும் கட்டமைப்புகளில் உள்ளவர்களும் துணைபோகின்றனர்.

கல்வி என்பது சான்றிதழ்களாக மட்டும் குறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் வினைத்திறனற்றவர்களாக உள்ளனர். நடைமுறையில் உள்ள தொழில்நுட்பக் கல்வியும் பிரதேசத் தேவைகளைச் சார்ந்ததாகவோ உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவோ இல்லை. கைக்கடக்கமான அப்பிளைக் கொண்டு ஐரோப்பாவில் நூற்றுக்கு மேற்பட்ட துணைப்பொருட்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வளவோ பெரிய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

கல்வி என்பது அனுபவம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறை. இன்றில்லாத, நாளை உருவாகப் போகின்ற பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலை இன்றைய கல்வி வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இன்றுள்ள பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத கல்வியைத்தான் தற்போதுள்ள கல்வி;க் கட்டமைப்புக்கள் இன்று வழங்குகின்றன. அதனால் தான் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இன்றைய கல்விக் கட்டமைப்பில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்நிலையை, வாழ்க்கைச் சூழலை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாதவர்கள் தான் இன்றைய கல்வி மற்றும் அதிகாரக்கட்டமைப்புகளில் உள்ளனர். ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பெரும்பாலும் உள்ளனர். இந்த அந்நியத்தன்மை, இந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும்.

இதனையே பதியுதீன் மொகமட் கல்வி அமைச்சராக இருக்கும் போது மாற்றி அமைத்தார். முஸ்லீம் பிரதேசங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் முஸ்லீம்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் ஆசிரியர் தெரிவுக்கான தகமை எல்லையை சற்று தளர்த்தினார். முஸ்லீம் பாடசாலைகளில் அவர்களின் வாழ்நிலை, வாழ்க்கைச் சூழல், கலாச்சாரத்தை உணர்ந்துகொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆகினர். அச்சமூகத்தின் மத்தியில் ஒரு கல்விப் பாரம்பரியம் உருவாக ஆரம்பித்தது. இந்நிலை வெவ்வேறு சமூகங்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் அச்சமூகத்திலிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வியும் வாய்ப்புகளும் மேலும் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிந்தால் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் நீக்க முடியும். ஆனால் தற்போதைய கல்விமுறை என்பது ஆரம்பம் முதலே மிக ஏற்றத் தாழ்வானதாக உள்ளது. முன்பள்ளிகளை எடுத்துக்கொண்டால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரை வேறுபடுகின்றது. இதில் யார் எந்த முன்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்கள்? எந்த முன்பள்ளியில் கற்கும் பிள்ளையின் கல்வியின் எதிர்காலம் நிச்சயமானதாக இருக்கும். இந்நிலை தற்போது தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையோடு உயர்கல்வியிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியோடு பாடசாலைகள் இரண்டாம் தரமானவையாக்கப்பட்டு பெரும்பாலான பாடசாலைகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது நாம் அனுபவ வாயிலாகக் கண்டுகொண்டது. தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியும் இதனையே காட்டுகின்றது. அதே போல் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி அரச பல்கலைக்கழகங்களின் தரவீழ்ச்சியை இன்னும் ஊக்குவிக்கும். அரச பாடசாலைகளை, அரச பல்கலைக்கழகங்களை தரமுயர்த்தாமல் கல்வியை தனியார் கைகளில் ஒப்படைப்பது நீண்டகாலத்தில் கல்வியில் தற்போதுள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மலையக மக்களுக்கு, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்குவதற்கான முயற்சியாகவே இது அமையும்.

இதனைத் தடுப்தற்கு அதிபர் பெருமாள் கணேசன் போன்ற தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் பலர் பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களில், பாடசாலைகளில் தங்கள் சேவையை ஆற்ற வேண்டும். பொறுப்பான பதவிகளில் அதிபர் பெருமாள் கணேசன் போன்ற பொறுப்பான மனிதர்கள் அமர்வது மட்டுமே வளமான, ஏற்றத் தாழ்வற்ற சமூக உருவாக்கத்திற்கான முன்நிபந்தனையாக இருக்க முடியும். அதிபர் பெருமாள் கணேசனின் இந்த மணிவிழா அவருடைய கடந்த கால கல்விப்போராட்டத்தை நினைவு கூரவும் அவருடைய அடுத்த இலக்கை செயற்திட்டத்தை திட்டமிடவும் உதவும். அண்மைய எதிர்காலத்தில் இவர் ஓய்பெற முடியாது. இவருக்கான பொறுப்புகள் அதிகம்.

எம்மோடு சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கல்விப் போராளியைப் பற்றிய ஒரு பதிவை வரைய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!

நட்புடன் த ஜெயபாலன்.

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படத் துணியாத போதும் வெளிப்படையாக தங்கள் கட்சியை இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவின் முகவர்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அந்த அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக்கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கட்சியின் செயலாளர் பா சத்தியலிங்கம் இலங்கைக்கு வெளியே தாங்கள் கிளைகள் எதனையும் ஆரம்பிப்பதற்கு அனுமதிவழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்வின் – லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான திபாகரன் மற்றும் நிலா அணி தங்கள் ரோ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ரோவின் தமிழ்நாட்டுப் பிரிவான க்யூ பிராஞ்சின் கட்டுப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை தடுத்து வைக்கும் சித்திரவதை முகாம்களை; அவை சித்திரவதை முகாம்கள் அல்ல என்றும் அங்கு இலங்கைத் தமிழர்கள் யாரும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஐபிசி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்வின் – லங்காசிறி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.

லண்டன் தமிழரசுக்கட்சியை ‘றோ புலிகள் – திவாகரன் – நிலா’ கொம்பனி பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது!

ஒருவர் தான் ஒரு முட்டாள் என்று உணர்வதற்குக்கூட ஒரு அடிப்படை அறிவு அவசியம். அந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள் தங்களைத் தாங்களே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிவுஜீவிகளாக நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகையவர்கள் அண்மைக்காலமாக புலம்பெயர் அரசியல் சூழலில் பெரும் தொந்தரவாக மாறியுள்ளனர். ‘புலிகளின் இளவரசி துவாரகா வந்துவிட்டார்’ என்றும் அவருக்குப் பின்னால் தாயார் மதிவதனியும் தந்தை பிரபாகரனும் வருகிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ஒரு கூட்டம் அப்துல்லா என்பவர் தலைமையில் புறப்பட்டுள்ளது. அதே அமைப்பிலிருந்து இன்னுமொரு கூட்டம், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தமிழீழம் எடுத்துத்தரும் என்று திபாகரன் – நிலா தலைமையில் சன்னதம் ஆடுகின்றது. புலிகளின் இந்தத் தரப்புகளை மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. ஆனால் அத்தரப்புகள் தங்களைத் தாங்களே வெகுவாக நம்பி சிற்றின்பம் காண்கின்றனர்.

இந்த முட்டாள்தனங்களை தொந்தரவாக எண்ணிக் கடந்துசெல்ல முடியாதபடி, இவர்கள் தாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேறு கதையளந்து வருகின்றனர். இப்புலிகளின் இரு தரப்புகளையும் இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பே பின்னணியில் இருந்து இயக்குகின்றது எனத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ராஜபக்ச சகோதரர்கள் நடத்தினார்கள் என்பதிலும் பார்க்க இந்திய உளவுத்துறையான றோவே இந்த யுத்தத்தை நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் புலனாய்வுத்துறையினருக்குப் பயிற்சி அளித்ததே இந்திய புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்த அவர், கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரித்ததிலும் றோவினுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலை தேசம்நெற் ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் தப்புவதற்க்கு நிறைய வாய்ப்புகள் இருந்ததாக றோ அமைப்பைச் சார்ந்த இராணுவத் தளபதி மதன்குமார் ஆணித்தரமாக கருத்து வெளியிட்டு வருகின்றார். துவாரகாவின் வருகைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுமுனையில் திபாகரன் – நிலா கொம்பனி லண்டணிலிருந்து டெல்லிக்கு காவடி எடுத்ததை தேசம்நெற் பலதடவை அம்பலப்படுத்தியதுடன், இவர்கள் தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பெப்ரவரி 25இல் வெளியிட்ட கட்டுரையில் வெளிப்படுத்தியும் இருந்தது. றோ தமிழீழம் எடுத்துத் தரப்போகின்றது என்று நம்பும் இக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களை கேவலப்படுத்தும் வகையிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் பாணியிலும் அமைந்துள்ளது. அடிப்படைவாத பிஜேபி – ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இன, மத உணர்வுகைளத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த போதும் மத அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு எதிரான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இதேபாணியில் பா உ சுமந்திரனையும் கிறிஸ்தவர் என்பதற்காக தாக்குவதையும் பரவலாகக் காண முடிகின்றது.

இந்தியாவுக்கு சீனா எதிரி, அதனால் சீனாவை தமிழர்களின் எதிரி என்று காட்டி இந்தியாவுக்கு காக்கா பிடித்து தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் மதியுரைஞராக இருந்த மு திருநாவுக்கரசுவின் அதிரடித் திட்டம். வன்னி யுத்த காலத்தில் தமிழகத்தைச் சென்றடைந்த மு திருநாவுக்கரசு றோ வின் அரவணைப்பில் இருந்து வருகின்றார். அவர் வளர்த்தெடுத்த வாரிசுகள் தான் ‘திபாகரன் – நிலா’ கொம்பனி. இவர்கள் றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செய்யும் இக்குழு, ‘இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்தது மிகப்பெரும் அரசியல் தவறு’ என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது இக்குழுவே தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையையும் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாதம் 10ம் திகதி தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருந்த போதே தேசம்நெற் இவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தி இருந்ததுடன் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிறிவாஸ் சின்னத்துரையிடம் இது பற்றிக் கேள்வியும் எழுப்பி இருந்தது. நேற்று மார்ச் 13இல் லண்டன் வெஸ்ற்மினிஸ்ரரில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்த சின்னத்துரை சிறிவாசிடம் மார்ச் 10இல் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது: “நான் கூட்டத்தை கூட்டியது தமிழரசுக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே. தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக்கான அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக அல்ல. ஆனால் கூட்டத்தை திசை திருப்பி புதிய அலுவர்களுக்கான தெரிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

றோ புலிகள் தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதை தேசம்நெற் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் 10ம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே பெப்ரவரி 17 அன்று தமிழரசுக் கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd என்று ஒரு தனியார் நிறுவனமாக திபாகரன் – நிலா குழு பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்களாக கீத் என அறியப்பட்ட சொக்கநாதன் கேதீஸ்வரன், திபாகரன் என்று அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், நிலா என அறியப்பட்ட பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாலநந்தினி பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோர் திபாகரனின் உறவினர்கள், நண்பர்கள். கமலேஸ்வரன் லண்டன் வந்த சமயத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களை உள்வாங்க மேற்கொண்ட நடவடிக்கையை ‘திபாகரன் – நிலா’ குழு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. நோர்த் ஹரோவில் ஜனவரி 28இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த றோ புலிகளின் குளறுபடியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகத் திருப்புகின்ற முயற்சி நடைபெறுகின்றது. ஆனால் தேசம்நெற் அறிந்தவரை ‘திபாகரன் – நிலா’ குழு சுமந்திரனுக்கு முற்றாக எதிரானவர்கள். திபாகரன் – நிலா – திருநாவுக்கரசு என்ற இந்த றோ புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களுக்காக எஸ் சிறிதரன் இலங்கை அரசியல் யாப்பு என்ற திருநாவுக்கரசுவின் நூலையும் இலங்கையில் வெளியிட்டு இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் லண்டன் வந்திருந்த போது திபாகரனும் மயூரனும் எஸ் சிறிதரனை கிழக்கு லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோவில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கிளையை இப்படிக் குளறுபடியாகக் கைப்பற்றும் திபாகரன் – நிலா குழுவின் எண்ணத்திற்கு உடன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்பதவி மீது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு நிதியாதரவு வழங்கும் ஒரு தொழிலதிபரும் கண் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் தற்சமயம் லண்டனிலேயே கல்வி கற்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொம்பனிச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd டை பதிவு செய்த போதும் இதற்கும் தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படப்போவதில்லை. தமிழரசுக் கட்சியும் இந்த அமைப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை. இது ‘திபாகரன் – நிலா’ குழுவின் இன்னுமொரு ஆர்வக்கோளாறு குளறுபடி மட்டுமே. புதிய உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சந்தாவைச் செலுத்தினால் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் அலுவர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன், உப தலைவர் தியாகராஜா திபாகரன், செயலாளர் பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த உறுப்புரிமையைத் தக்க வைக்க முடியாது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி மாநாடு கூட்டி தெரிவு செய்த தலைவரே தலைவராக முடியாமல் திண்டாடுகிறார். இதற்குள் ‘திபாகரன் – நிலா’ கொம்பனியின் நப்பாசைக்குக் குறைவில்லை.

 

ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகள் முடித்த யாழ் சட்டத்தரணி! உறுதி முடிக்கும் சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் மண்டியிட்டனர்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோர் அடங்கிய குழு இரு வாரங்களுக்கு முன்பாக 13 பெப்ரவரி 2024 அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்துப் பேசிய விடயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அண்மைக்காலமாக உறுதி மோசடிகள் தொடர்பான வழக்குகள் தொடர்பில் யாழ் சட்டத்தரணிகளை பொலிஸார் கைது செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்குமாறு கேட்பதற்காகவே மேற்குறிப்பிட்ட யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியைச் சந்தித்து அவரிடம் மண்டியிட்டுள்ளனர். அதாவது கள்ள உறுதி முடித்த வழக்குகள் தொடர்பில் பொலிஸார் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று ஜனாதிபதியிடம் அவர்கள் கோரியுள்ளனர். பொலிஸார் கள்ள உறுதி முடித்த வழக்குகளில் தங்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், பொலிஸார் கொண்டுவரும் குற்றவியல் வழக்குகள் (கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற குற்றவியல் வழக்குகள்) நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்போது தாம் கடுமையாக பொலிசாரினை குறுக்கு விசாரணை செய்வோம் என அச்சட்டத்தரணிகள் ஜனாதிபதி ரணிலை மறைமுகமாக மிரட்டியதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

இது பற்றி மேலும் தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு சட்டத்திரணிகள் ஏற்கனவே பொலிசாரினால் உறுதி மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு, தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று சட்டத்தரணிகளை இவ்வாறான விசாரணைகளுக்காக பொலிசார் கைது செய்யத் தயாராகிய நிலையில், அவர்களுக்கான முன் பிணை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அவர்களினது கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், “கள்ள உறுதி முடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிசாருக்கு அறிவுறுத்துவது சட்டத்திற்கு முரணானது” என்றும் “அவ்வாறான அறிவுறுத்தல்களை தன்னால் வழங்க முடியாது” எனவும் பக்குவமாக தன்னைச் சந்திக்க வந்த யாழ் சட்டத்தரணிகள்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அறியவருகின்றது.

ஆனால் அதற்கு மாற்றாக ஜனாதிபதி ரணில் சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரின் ஆலோசனையை பெறுமாறும், உறுதி முடிக்கும் அந்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக பெப்ரவரி 13 மாலையே சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ள யாரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். அதனால் செலஸ்ரியனைத் தவிர ஏனைய நான்கு சட்டத்தரணிகளும்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன் ஆகியோர் சட்டமா அதிபரை சந்தித்துள்ளனர்.

சட்டமா அதிபரைச் சந்திக்கச் சென்ற நான்கு சட்டத்தரணிகளுக்கும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சந்திப்பிற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களினது கோரிக்கையினை கேட்டு அறிந்து கொண்ட சட்டமா அதிபர், பொலிஸ் உயர் அதிகாரியிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கோரிய போது, பொலிஸ் அதிகாரியினால் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது: “சட்டத்தரணி கௌதமன் ஒரே நாளில் ஒரே காணிக்கு 03 உறுதிகள் எழுதியுள்ளார், இதற்கு நாங்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?” என்று அப்பொலிஸ் உயர் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போன்று பல சட்டத்தரணிகளால் பதிவு செய்யப்பட்ட மோசடி உறுதிகள் தொடர்பான விபரங்களையும் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட சட்டமா அதிபர் “பொலிசாரின் நடவடிக்கைகளை தன்னால் தடுக்க முடியாது” என்ற கருத்தைக் கூறியதுடன் அவ்வாறு சட்டத்தரணிகளை கைது செய்வதாயின் அதற்கு முன் தன்னையும் கலந்தாலோசிகும் வண்ணம் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக அறியவருகின்றது.

அரசியல் சட்டம்பிகள் வளைத்துப்போட்ட காணிகள்:

“கள்ள உறுதி முடிப்பதில் எங்கட சட்டம்பிகளை ஒருத்தரும் மிஞ்சேலாது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி கௌதமனின் ஊரவரான ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “இன்றைக்கு இந்த இளம்தலைமுறை சட்டத்தரணிகளுக்கு இந்தக் கள்ள உறுதி எழுதுவதை சொல்லிக் கொடுத்ததே இவர்களின் அப்பன்களான சட்டத்தரணிகள் தான். இன்றைக்கு அரசியல் செய்கிறவையும் இவர்களின் பரம்பரையும் கள்ள உறுதியில் சொத்துச் சம்பாதித்தவர்கள் தான்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“வடக்கு கிழக்கில் காணிகளைக் கணணிப்படுத்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்டுபிடித்து தடுத்ததற்கு முக்கிய காரணம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு சொத்துக்கள், காணிகள் இருக்கின்றது என்ற உண்மை ஒரு ‘பட்டனை’ அழுத்தியதும் தெரியவந்துவிடும். அதனாலேயே அவர்கள் இதனைத் தடுத்தனர்” என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு சந்திரகுமார். அன்று காணிகளைக் கணணிப்படுத்தியிருந்தால் தற்போது நிலமற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு காணி கிடைத்திருக்கும். காணியும் முகவரியும் உள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற தமிழ் குடும்பங்கள் மிகுந்த பயன்பெற்றிருக்கும்” என மு சந்திரகுமார் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணியான இரா சம்பந்தன் குடும்பத்துக்கும் கணக்கற்ற சொத்துக்கள் இருந்தது. திருகோணமலை லிங்கநகர் குடியிருப்பும் இரா சம்பந்தனின் சொத்துக்களுக்குள் அடக்கம். 1987இல் அக்காணிகளில் பலாத்காரமாகக் குடியிருந்த சிங்களவர்களை துரத்திவிட்டு அங்கு தமிழர்களைக் குடியேற்றியவர்களில் மு சந்திரகுமாரும் ஒருவர். 2009 இறுதி யுத்தத்திற்குப்பின் அக்காணியில் குடியேறியவர்களிடம் இரா சம்பந்தன் லட்சக் கணக்கில் பணம் கேட்டிருந்தார். இதுபற்றி லண்டன் வந்த இரா சம்பந்தரிடம் தேசம்நெற் வினவிய போது அவர் அக்காணிகள் தன்னுடையதல்ல என்றார். “அக்காணிகள் உங்களுடைய மனைவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள உங்களுடைய சகோதரர்களின் பெயர்களிலும் தானே உள்ளது” என்பதை தேசம்நெற் அன்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சட்டத்தரணி ஆனந்தசங்கரிக்கும் இன்றும் நிறைய சொத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதிகமாக கிளிநொச்சி மண்ணே தெரியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் அப்பன், பாட்டன் வளைத்துப்போட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளது. இப்படி பெரும்பாலான சட்டத்தரணிகளுக்கு சொத்துக்களுக்கு எவ்வித குறையும் இருப்பதில்லை. அவர்களுடைய பரம்பரைக்கும் சொத்துக்களுக்கும் நிலத்துக்கும் குறைவில்லை.

ஞானா முனசிங்கவின் காணி – வெளிநாட்டவரின் திருவிளையாடல்கள்:

யாழ்ப்பாணத்துக்கு என்றொரு பண்பாடும் கலாச்சாரமும் இருக்கின்றது என்று அழுத்திச் சொல்பவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய சமூக சீரழிவுகளை எண்ணி சற்றுத் தலைகுனிவது இயல்பாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பலரினதும் செயற்பாடுகளும், புலம்பெயர் நாடுகளிலிருந்து பாயும் பணமும் முக்கிய காரணமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் பணம் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை இரண்டாம் தரத்துக்கு பின்தள்ளிவிட்டது. ‘காசே தான் கடவுளடா…’ என்று சமூக விழுமியங்களை அப்படியே அது புரட்டிப் போட்டுள்ளது. புலம்பெயர் ஹொட்டேலியர்கள் தாயக மண்ணின் சமூகச் சீரழிவுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கள்ள உறுதி எழுதுவதில் வல்லவர்கள் தான். அது இயலாவிட்டால் வேலிப் பிரச்சினையையும் காணிப் பிரச்சினையையும் கூலிப்படைகளை வைத்துக் கையாள்கின்றனர்.

யாழ் நல்லூரடியில் காம விடுதி என்று எல்லோராலும் அறியப்பட்ட லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குடுமி ஜெயா என்று அறியப்பட்ட ஜெயந்திரனும் ஒரு சட்டத்தரணியின் வாரிசுதான். பாரிஸ் லாகூர்னேயில் உள்ள சிவன் கோயிலின் முதலாளி இவர். இந்த ஹொட்டேலை விஸ்தரிப்பதற்கான காணியை சட்டத்துக்குப் புறம்பாக ஆனால் சட்டபூர்வமாகக் களவாடியே ஹொட்டலை விஸ்தரித்துள்ளார். இலங்கையின் நன்கு அறியப்பட்ட இடதுசாரி அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான மங்கள முனெசிங்கேயின் மனைவி ஞானா முனெசிங்கேக்குச் சேரவேண்டிய காணியையே குடுமி ஜெயா ஆட்டையைப் போட்டார். மங்கள முனெசிங்கே நவ சம சமாஜக் கட்சியில் பாராளுமன்றம் சென்றவர். 1993 இல் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உருவாக்கப்பட்ட ‘மங்கள முனெசிங்கே ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றவர். பின்னாட்களில் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர். இவருடைய மனைவி ஞானா யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்தவர்.

தனது ஹொட்டலை விஸ்தரிப்பதற்காக அயலில் உள்ள காணியில் கண் வைத்த குடுமி ஜெயா காணிச் சொந்தக்கரரரைத் தேடி வலைவிரித்தார். அப்போது அக்காணியின் உடமையாளரான ஞானாவுடைய சகோதரி மீனா ரட்ணம் இந்தியாவின் புத்தபக்தியில் உள்ள சாயி பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பதை அறிந்து நேரடியாகவே அங்கு சென்றார். அவரோட ஒட்டுறவாகப் பழகி அவருடைய சகோதரிக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்திலிருந்த கையெழுத்தைப் போடப் பழகி அக்காணிக்கான எழுத்துமூலமான உரிமத்தை, கனடாவில் உள்ள குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவனின் பெயரில் பெற்றுக்கொண்டுள்ளார். அதனை திருட்டுத்தனமாக அக்காணியை விற்பதற்கான ஒப்புதலாக மாற்றி அக்காணியை தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மாற்றி எழுதியுள்ளார். அதன் பின் காணியை தனது வட்டத்திற்குள் உள்ள மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றி எழுதி, இறுதியில் தன்னுடைய பெயருக்கு மாற்றி பெற்றுக்கொண்டார்.

ஒரு பெயர்பெற்ற சிங்கள அரசியல்வாதியின், ராஜதந்திரியின் மனைவிக்கு சேரவேண்டிய காணியை ஒரு சதமும் செலுத்தாமல் ஆட்டையைப் போட்ட குடுமி ஜெயா, ஞானா முனெசிங்கேக்கு நாமத்தைப் போட்டார்.

இதுபற்றி மங்கள முனசிங்கேயின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில், “இதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவன் கனடாவிலிருந்து இலங்கைக்கோ இந்தியாவுக்கோ வரவில்லை. இருவருடைய கையெழுத்துக்களையும் குடுமி ஜெயாவே வைத்து இந்தக் காணி மோசடியைச் செய்தார்” என்கிறார்.

இவ்வாறான செயல்களை கண்டிப்பதற்கு மாறாக இதனை ஒரு கெட்டித்தனம், புத்திசாலித்தனம் என்று எண்ணும் மனோபாவம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துள்ளது. என்ன செய்தாவது பணம் புரட்டினால் அது கெட்டிக்காரத்தனம் என்று பணம் உள்ளவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் குவிகிறது. ஹொட்டலியர்களுக்குப் பின்னும் வெளிநாட்டு பணமுதலைகளுக்குப் பின்னும் ஒரு கூட்டம் எப்போது இருக்கும். குடுமி ஜெயா போன்றவர்கள் இவ்வாறான மோசடிகளை தனித்துச் செய்ய முடிவதில்லை. இவ்வாறானவர்களுக்கு சட்டத்தரணிகளும் துணை போகின்றனர். ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகளை முடித்ததாக யாழ் சட்டத்தரணி கௌதமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருடைய தந்தை வீரகத்தியே அதன் பின்னணியில் இருந்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கும் குடுமி ஜெயாவின் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

‘சட்டத்தரணி தொழில் ஒரு சுரண்டல் தொழில்’ – சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்

இவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடைய சிலரும் இல்லாமல் இல்லை. பிரித்தானியாவில் நீண்டகாலம் சட்டத்தரணியாக இருந்த ரங்கன் தேவராஜன் தற்போது யாழில் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார். இவர் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களுடைய காணிகளை சட்டப்படி பெற்றுக்கொடுப்பதில் கட்டணம் வாங்காமல் பணியாற்றி வருகின்றார். இவர் பொதுவில் சட்டத்தரணிகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது “சட்டத்தரணிகள் தொழில் என்பது மோசமான ஒரு தொழிலாக்கப்பட்டுவிட்டதுஇ மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு தொழிலாக இது மாறி இருக்கின்றது” என்று இவர் லண்டனில் இருக்கின்ற போது தன்னுடைய நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவார். இவர் தன்னுடைய சேவை மனப்பான்மையால் பிழைக்கத் தெரியாதவர்’ என்று பெயரெடுத்தவர். லண்டனிலும் கட்டணம் வாங்காமலேயே குரலற்றவர்களின் குரலாக வாதாடியவர்.

அன்று தமிழ் ஹவுசிங்கின் Thamil Community Housing Association பொறுப்பதிகாரியாக இருந்த, தற்போதைய ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் மாறன் என்பவரை வேலையால் கலைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் ரங்கன் தேவராஜன் தொழில் நீதிமன்ற விசாரணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடைத்து மாறனுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தார். கணிசமான தொகை இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கை ரங்கன் தேவராஜன் நண்பருக்கான உதவியாகவே வாதாடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பற்றி புறம்தூற்றி அவர் 20,000 பவுண்டுகள் தனக்குத் தரவேண்டும் என லண்டனில் தவறணையில் சட்ட நிறுவனம் நடத்தும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவர் சண்டே லீடர் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இறுதியில் ரரின் கொன்ஸ்ரன்ரைன் நீதிமன்றில் மண்கவ்வியதுடன் அபராதமும் செலுத்தப் பணிக்கப்பட்டார். இது பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

“நான் இருபதினாயிரம் பவுண்டஸ் தரவேணுமெண்டு கொன்ஸ்ரன்ரைன் திரும்பத் திரும்பக் கதையளந்து திரியக் காரணம். கொன்ஸ்ரன்ரைன் வழக்குப்போட்டு வாங்கிக்கட்டியதால் தான். இந்த வழக்கைவிட கொன்ஸ்ரன்ரைனின் நெருங்கிய உறவினரான யோகரத்தினம் என்ற பெயருடைய இன்னொரு பிரகிருதிக்கு எதிராக நீதிமன்றில் நான் போட்ட வழக்கொன்றிலும்; அன்னார் மூக்கை நுழைத்து ஒரு இரண்டாயிரம் பவுண்டஸ் வரை இழந்ததும்இ என்னை வைத்துப் பணம் பண்ண வெளிக்கிட்டு பல்லுடைபட்டதும், கொன்ஸ்ரன்ரைனின் ஆத்திரத்திற்கான இதர காரணங்கள்” என்றார். (ரரின் கொன்ஸ்ரன்ரைன் பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் முகநூலில் மேற்கொண்ட பதிவு அருகில்.)

(Cartoon: Morten Morland (The Times, 2010)

கொஞ்சம் சொத்துக்களை வளைத்துப் போட்டு பணமும், சட்டப்படி நாலு வசனத்தில் கடிதமும் எழுதத் தெரிந்ததும், மற்றவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் பறிப்பதற்கு என்றே ஒரு சட்டம்பிக் கூட்டம் உள்ளது. சும்மா இருந்து பணம் பண்ணும் வித்தையை கோயில் ஆசாமிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், ஹொட்டேலியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆசாமிகள் கோட்டும் சுட்டும் போட்டுத் தான் திரிகிறார்கள்.

தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்!

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது. எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.

கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

யார் இந்த ‘றோ’ புலிகள்:

முன்னாள் ரிஆர்ஓ பொறுப்பாளர் ரெஜி, அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும், இல்லை விநாயகதத்pன் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அவர்கள் புலனாய்வுக்காக விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநாயகம் – சங்கீதன் அணியினரும் இணைந்து பிரித்தானியாவில் வரலாற்று மையம் என்ற ஒரு அமைப்பை 2009 இறுதி யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கி இருந்தனர். இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் போறம் என்ற பிரிஎப் க்கு எதிராக போட்டியாக மாவீரர் தினத்தை நடத்தியும் இருந்தனர். வெளிநாடுகளில் புலிகளை ஒருங்கிணைத்து செயற்பட ஒரு திட்டத்தை இவர்கள் தயாரிக்க முயன்ற போதும் அது தொலைபேசி உரையாடல்கள் ஸ்கைப் மீற்றிங்குகளுடன் முடிந்து போய்விட்டது.

அதற்குப் பின் அண்மைக்காலமாக வரலாற்று மையத்தை பின்புலமாகக் கொண்ட ‘நிலா – திவாகரன்’ அணி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தமிழீழம் பெற்றுத் தரும் என்று டெல்லியிலும் தமிழகத்திலும் மாநாடுகளை நடத்தி அதுபற்றிய சந்திப்பு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி 28இல் நோத் ஹரோவில் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பிலும் அவர்களுடைய ‘அரச அறிவியல்’ தெளிவின்படி ‘றோ’ தமிழீழம் பெற்றுத்தரும் என்று அடித்துச் சொன்னார்கள். மோடியின் கோசலத்தின் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்களிலும், அவர்கள் வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு மாநாட்டு அறிக்கையிலும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் லண்டனில் மார்ச் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழை ‘நிலா – திவாகரன்’ அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட முதலாவது ஒன்றுகூடல் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட போஸின் தொடர்பிலக்கமும் இருந்தது.

அது தொடர்பில் தேசம்நெற் நேற்று பெப்ரவரி 25இல் போஸ் உடன் தொடர்பு கொண்டு, “இலங்கையில் தமிழரசுக் கட்சி மீது வழக்குகள் தொடரப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரனின் தலைமைப் பதவியே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் எவ்வாறு தமிழரசுக் கட்சி லண்டனில் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்ய முடியும் ?” என்று கேட்ட போது, “அதே கேள்வி தான் தன்னிடமும் உள்ளது” எனத் தெரிவித்த போஸ் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தான் நாங்கள் இயங்கினோமே அல்லாமல் தமிழரசுக் கட்சிக்கு என்று இங்கு எந்தக் கட்டமைப்பும் இல்லை” என்றும் “அவ்வாறு தமிழரசுக் கட்சியின் பெயரில் அழைப்பு விடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உங்களுடைய பெயர் எவ்வாறு அழைப்பிதழில் உள்ளது எனக் கேட்டதற்கு நிலாவும் சிறிவாஸ் என்பவரும் தன்னோடு போனில் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடியதாகவும் “அவ்வாறான ஒரு சந்திப்பு செய்யத்தான் வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமில்லை. வழக்குகள் முடிந்து தாயகத்தில் கட்சி செயற்பட ஆரம்பிக்கும் போதே அதனை மேற்கொள்ள முடியும்” என்று தான் தெரிவித்ததாக போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய உடன்பாடில்லாமலேயே அவர்கள் தன்னுடைய தொடர்பிலக்கத்தை வெளியிட்டதற்கு நிலாவோடு தொடர்பு கொண்டு கண்டித்ததாகவும் தன்னுடைய பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி 25இல் வெளியிட்ட புதிய அழைப்பிதழில் போஸின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் இருந்த மற்றைய இருவர்: சிறிவாஸ் மற்றும் கேதீஸ். சிறிவாஸ் தமிழரசுக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்ட ஆவரங்கால் சின்னத்துரையின் மகன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்கமறுத்த முரண்பாட்டினால் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உதயசூரியன் சின்னத்தையும் வழங்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்த ஆவரங்கால் சின்னத்துரையை தாயகத்துக்கு அழைத்து தமிழரசுக்கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நோக்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.

சின்னத்துரை சிறிவாஸ் தமிழீழு விடுதலைப் புலிகளின் நல்ல விசுவாசியாகவும் அவர்களின் அரசியல் செயற்பாடுகிளிலும் முன்னின்றவர். தற்போது தமிழரசுக் கட்சி என்ற பெயரில் அழைப்பிதல் வெளியிட்டுள்ளார். அக்கூட்டத்தில் தேசம்நெற் ஊடகவியலாளராகக் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டபோது “சமஸ்டிக் கொள்கையை ஏற்று கட்சியின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களானால் மட்டுமே அந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார். “அப்படியானால் நீங்கள் தமிழீழக் கொள்கையை விட்டுவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த அவர் “யுத்தம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சமஸ்டிக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் யாரானாலும் தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார்.

“நீதி மன்றம் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு இந்த ஒன்றுகூடலை நடத்துகிறீர்கள் ?” என்று கேட்ட போது, “லண்டனில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சியை புலத்தில் உள்ள புலிகள் கைப்பற்றுவதற்கான சதித்திட்டமா இது ?” எனத் தேசம்நெற் கேட்டபோது அப்படியல்ல என்றவர், “புலிகள் சமஸ்டிக்கொள்கையை ஏற்றுக்கொண்டு வரவிரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் உள்வாங்குவோம்” என்றார். அது போல், “ரொலோ மற்றும் புளொட் அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை விட்டுவிட்டு தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார். அப்படியானால் “தமிழரசுக் கட்சி இனி புலி அரசுக்கட்சியாகி விடுமா? வெளிநாட்டு கிளைகளில் இருந்தும் கட்சியின் மத்திய குழுவுக்கு உறுப்பினர்கள் அனுப்பப்டுவார்களா?” என்று கேட்டதற்கு “சமஸ்டிக்கு உடன்படும் புலிகள் தமிழரசுக் கட்சியில் இணையலாம். லண்டனில் இருந்து ஐவர் மத்திய குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கும்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

சின்னத்துரை சிறிவாஸ் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளின் பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரன் மற்றும் எம் ஏ சிறிதரனுடன் பேசியதாகவும் அவர்கள் இருவரும் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அல்லாமல் இணைந்து பயணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் போடப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் எம் ஏ சுமந்திரன் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியானால் இந்தக் குழப்பத்திற்குப் பின் யார் உள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க சின்னத்துரை சிறிவாஸ் மறுத்துவிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியானவர்கள் யாரும் இல்லை. சுமந்திரனை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். “ஆனால் எம் ஏ சுமந்திரனை புலத்து புலிகள் நேற்று பெப்ரவரி 25இல் ஏற்பாடு செய்த எழுச்சிநாள் கூட்டத்தில் ‘தேசியத் துரோகி’ என்று அறிவித்துள்ளனரே ?” என்று கேட்ட போது, “புலத்து புலிகள் அவ்வாறு கூறவில்லை. சிலர் அக்கருத்துடன் உள்ளனர். இலங்கையில் உள்ள கட்சியின் சில உறுப்பினர்களே அதனை எழுச்சி மாநாட்டில் கூறியுள்ளனர்” என்றார்.

“தமிழரசுக் கட்சிக்குள் புலிகளை உள்வாங்குகிறீர்கள் அதே சமயம், எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியுள்ளவர் இல்லை என்கிறீர்கள்? இதுவென்ன விசித்திர அரசியல்?” எனத் தேசம்நெற் கேட்டபோது ஊடகங்கள் உண்மையான விடயங்களை அறிந்திருக்வில்லை எனத் தெரிவித்தார் சின்னத்துரை சிறிவாஸ். ஊடகங்கள் உண்மையை அறியவில்லையா அல்லது சிறிவாஸ் புலிகளின் ‘டபிள் ஏஜென்டா’ என்பது விரைவில் தெரியவரும்.

தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு மாவை சேனாதிராஜாவின் பதவிமோகமே காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு தமிழரசுக் கட்சி ஆதரவாளர் தெரிவித்தார். அதே சமயம் எம் ஏ சுமந்திரன் மற்றவர்களை அனைத்துச் செல்வதில்லை என்றும் அவரிடம் ஆளுமையும் திறமையும் இருந்த போதும் அவரது எதேட்சதிகாரம் ஆபத்தானது என மற்றுமொருவர் தெரிவித்தார். அவர் சிறிதரனிடம் மற்றவர்களை அனைத்துச் செல்லும் பண்பு இருப்பதாகவும் அது முக்கியமானதும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழில் இருந்த மற்றையவர் கேதீஸ், வரலாற்று மையத்திலிருந்த ஒரு ‘றோ புலி’. இவர் ‘நிலா – திவாகரன்’ அணியின் ‘றோ – தமிழீழம் எடுத்துத் தரும்’ என்று நம்புகின்ற ஒரு தூண். அவர்கள் ஏற்பாடு செய்த ‘மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்’ என்ற ஜனவரி 28 நடந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். இவர்களின் ‘றோ – தமிழீழம்’ கதையாடலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. தன்னையொரு வல்லரசாக ஆக்கிக்கொண்ட இந்தியாவுக்கே கதைசொல்லி தமிழீழம் வாங்கலாம் என்று நம்பிய ஆர்வக் கோளாறுகளுக்கு, தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இந்த றோ – புலிகள் விக்கினேஸ்வரனுக்கு காவடி எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து தற்போது றோ வின் பராமரிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சீன எதிர்ப்பு ஆய்வாளர் மு திருநாவுக்கரசு எழுதிய வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என்று ஒரு காவடியையும் எடுத்தனர். அது தொடர்பான நூல் ஒன்றை தமிழ் தேசிய பற்றாளர்களான சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டனர். காலத்துக்கு காலம் இந்த ஆர்வக்கோளாறுகளின் குறும்புகள் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்துவதாக அமைகின்றது.

2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் பெற்றுத் தருவார் என்று நம்பிய அவர்களின் ‘அரச அறிவியல்’ தெளிவை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் ‘மதியுரைஞர் பாலசிங்கம்’ அவர்களை சிஐஏ ஏஜென்ட் என்றும் அவருக் ‘அரச அறிவியல்’ போதாது என்பதும் கொஞ்சம் ரூ மச். ஆனால் மோடி ஜீ யின் கோசலம் பருகி வளர்த்த ‘அரச அறிவியல்’படி ‘றோ தமிழீழம் பெற்றுத் தரும்’ என்று ஜனவரி 28இல் ஒற்றைக் காலில் நின்று சன்னதம் ஆடிவிட்டு 28 நாள் கழிந்து. தமிழீழத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளுங்கள், கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு விடும் அந்தர் பல்டி அடிப்பதற்கு றோ புலிகளால் மட்டுமே முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் போய், தமிழர்களின் தாகம் றோத் தமிழீழம் ஆகி இப்போது தமிழர்களின் தாகம் சமஸ்டி என்று தொடங்கின இடத்திலேயே வந்து நிற்கிறது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

1980களில் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாகி தங்கள் வாக்கு வங்கி இடதுசாரிகள் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்க முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்ற கோசம், அன்று தமிழ் இளைஞர்களை ஐஸ் போதை மாத்திரைக்கு இணையாக உசுப்பேற்றியது. அவ்வாறு தனது பதின்ம வயதில் உசுப்பேற்றப்பட்ட பல்லாயிரம் இளைஞர்களில் ஆர் ஆர் உம் ஒருவர். ஆம் இவருடைய சொந்த ஊரான சுழிபுரம் மண் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கோட்டையாக இருந்தது. இந்த மண்ணின் வடக்கம்பரை பகுதியிலேயே 1976இல் தமிழீழக் கோரிக்கையை முன் வைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதனால் ஆர் ஆர் இன் தலைமுறையினர் ஆயதங்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

சுழிபுரத்தில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் பொன்னாலையில் யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை தமிழ் தேசியம் தனது வாக்கு வங்கிக்கு இடைஞ்சல் எனக் கருதி போட்டுத்தள்ளியது. அதே சமயம் தெற்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்பு சக்தியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பெரும் தேசியவாதத்தை பரல் கணக்கில் நெய்யூற்றி தென்பகுதி எங்கும் எரியவிட்டது. முறுக்கேறிய இளைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்கள் தாக்குதல்கள் எதிரியைக் குறி வைத்ததிலும் பார்க்க தங்களுக்குள்ளேயே குத்து வெட்டு போட்டுத் தள்ளியும் உள்ளனர். அவ்வாறு முதற் சகோதரப் படுகொலையாகக் கருதப்படும் சுந்தரம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

இதே சுழிபுரத்தில் பொதுவுடமைக் கருத்துக்களை வளர்த்தெடுத்தவர் கே ஏ சுப்பிரமணியம். எழுபதுகளின் பிற்பகுதிகளிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் ஈழத்தமிழர் அரசியலில் சுழிபுரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய வாதக் கருத்துக்களும் இடதுசாரித்துவச் சிந்தனையும் ஒன்றையொன்று முரண்டுபிடித்த இடங்களில் சுழிபுரம் குறிப்பிடத்தக்கது. அதில் கே ஏ சுப்பிரமணியத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மீரான் மாஸ்ரர் என்று அறியப்பட்ட இவருடைய மகனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு முரண்பட்ட அரசியல் கருத்துநிலைகளால் உந்தப்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறையற்ற வடிவமாகச் செயற்பட்ட காந்தியத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களில் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்ததியார் மிகக் குறிப்பிடத்தக்கவர். அவரால் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலர் காந்தியத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் பின்னர் புதிய தமிழ் புலிகள் பிளவுபட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாக்கப்பட்ட போது கழகத்தின் உறுப்பினர்கள் ஆயினர். இவ்வாறு சுழிபுரத்தில் அவருடைய பதின்ம வயதில் அரசியல் நடவடிக்கைகளால் தேடப்பட்ட ஆர் ஆர் 1981களில் திருகோணமலையில் இயங்கிய காந்தியப் பண்ணையில் மறைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினர் இஸ்ரேல் மோசாட் உளவுப் பிரிவின் ஆலோசணைப்படி தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தினர். 1981 இல் யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலை உட்படப் பல படுகொலைகள் இடம்பெற்றது. இளைஞர்கள் கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டனர். யாழ் திருநல்வேலியில் 1983இல் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலும், அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்புசக்தியாக என்றும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தென்பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. இவற்றின் எதிரொலியாக தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக ஆயுத அமைப்புகளை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தனது பங்குக்கு இந்தியாவும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்ட தமிழ் ஆயத அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயதங்களும் வழங்கி அவர்களை வீங்கிப் பெருக்க வைத்தது. இயற்கையான முறையில் அரசியல் ரீதியாக படிப்படியாக வளராமல் ஆயதம் தாங்கிய அரசியலற்ற இயந்திரங்களாக ரோபோக்களாக போராளிகள் உருவாக்கப்பட்டனர். படுகொலைகளும் சகோதரப்படுகொலைகளும் சர்வசாதரணமானது. எல்லாப் போராளிகளும் தமிழ் மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்கள் உயிர்களை துச்சமென மதித்து ஆயதம் ஏந்தச் சென்றனர். அப்போது திருவடிநிலையில், மாதகலில் எந்த இயக்கத்தின் படகு அக்கரைக்குச் செல்ல காத்திருக்கின்றதோ அந்தப் படகில் ஏறினர். படகு தரையிறங்கும் போது தான் தெரியும் அவர்கள் எந்த இயக்கத்தில் சேர்கிறார்கள் என்பது. புளொட் படகில் ஏற வந்தவர் புலிகளின் படகில் ஏறி புலியான கதையும் மாறி நடந்த கதைகளும் ஏராளம்.

காந்தியப் பண்ணையில் திருகோணமலையைச் சேர்ந்த பார்த்தன் என்று அறியப்பட்ட ஜெயச்சந்திரனை நண்பராக்கிக் கொண்ட ஆர் ஆர் ஓரிரு ஆண்டுகள் திருகோணமலையிலேயே வாழ்ந்து 1983 இல் தமிழகத்துக்குச் சென்று ஆயதப்பயிற்சி எடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயத அமைப்புகைள நோக்கி ஓடிய போது அவ்வாறு ஓடியவர்களை கவர்ந்து இழுத்ததில் புளொட் வெற்றிகண்டது. வடக்கு கிழக்கின் கிராமங்கள் தோறும் புளொட் அமைப்பின் கட்டமைப்புகள் பெருமளவில் காணப்பட்டன. எண்ணிக்கையின் அடிப்படையில் புளொட் ஒரு பெரும் அமைப்பாக காணப்பட்டது. அதிலும் சுழிபுரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோட்டையாக இருந்து புளொட்டின் கோட்டையாக மாறியது. புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் விசுவாசிகள் பெரும்பாலும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் 1984இல் உமாமகேஸ்வரன் பின்தளமான இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது சுழிபுரத்திலேயே தங்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தாயகத்துக்கு வந்த முதல் போராட்டக் குழுவின் தலைவர் உமாமகேஸ்வரன் தான்.

சுழிபுரம் புளொட்டின் வளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அதே அளவுக்கு அதன் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தங்கள் தலைவர் உமாமகேஸ்வரனை உளவுபார்க்க வந்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் நோட்டிஸ் ஒட்ட வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆறு பதின்மவயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிகக் கோரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அரையும் குறையுமாக புதைக்கப்பட்டனர். ஈழத்தமிர்கள் பல்வேறு படுகொலைகளைச் சந்தித்த போதும் இவ்வாறு மோசமானதொரு படுகொலையை அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மேற்கொண்டது இன்றும் மாறாத வடுவாக உள்ளது. அந்த ஆறு இளைஞர்களும் கூட சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களைப் படுகொலை செய்த கந்தன் என்ற கந்தசாமியின் தலைமையில் இப்படுகொலையைச் செய்தவர்களும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே. ஏற்கனவே புளொட் அமைப்புக்குள் சந்ததியார் உட்பட உட்படுகொலைகள் தொடர்பான விடயங்கள் பூதாகரமாகி கழகம் பாரிய இருப்புச் சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுழிபுரம் படுகொலை மக்கள் மத்தியில் இருந்து கழகத்தை அந்நியப்பட வைத்தது.

தமிழீழ மக்கள் கழகத்தில் இருந்த அரசியல் தெளிவுடைய சக்திகள் படிப்படியாக தங்களை கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் பெரும்பாலும் அரசியல் தெளிவற்ற ஆயதங்களை மட்டுமே நம்பியவர்களின் கையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தள்ளப்பட்டது. இதற்கு கழகத்திலிருந்து வெளியேறியவர்களுக்கும் கணிசமான பொறுப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமை அரசியல் தெளிவற்ற ஆயதமேந்திய சுழிபுரம் ரோபோக்களிடமே இருந்தது. சுடு என்று நினைத்தாலேயே சுட்டுவிடுவார்கள்.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களை ஒவ்வொன்றாக அழித்து 1986இல் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவை முற்றாக அழித்த போது, தமிழீழம் என்ற கோரிக்கையே அர்த்தமற்றதாகியது. அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவம் படுகொலை செய்த போராளிகளைக் காட்டிலும் தங்களுக்குள்ளேளே சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் அதிகம். 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வவுனியாவில் தளம் அமைத்து தனித்து செயற்பட ஆரம்பித்தது. கடத்தல், கொள்ளை, கப்பம், கொலை என்பன தாசன் என்று அறியப்பட்ட மாணிக்கதாசனால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் ஆர் ஆர், உமாமகேஸ்வரனின் தலைமையை பாதுகாக்கும் அனைத்தையும் மேற்கொண்டு வந்தவர். 1988இல் உமமாகேஸ்வரனின் மாலைதீவைக் கைப்பற்றும் திட்டத்திற்கு புலனாய்வை மேற்கொண்டவர் ஆர் ஆர் எனத் தெரியவருகின்றது. மேலும் இத்தாகுதல் திட்டத்திற்கு சென்றவர்களில் ஆர் ஆர் மிக முக்கியமானவர். அதனால் ஆர் ஆர் க்கு ஏனையவர்களைக் காட்டிலும் கூடுதல் தண்டணை வழங்கப்பட்டது.

மாலை தீவில் 5 ஆண்டுகால சிறைவாசம் ஆர் ஆர் ரை மிகவும் மாற்றியமைத்தது. எம் கே சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்த ஆர் ஆர் க்கு அவர்கள் தொடர்ச்சியாக நூல்களை அனுப்பி வந்துள்ளனர். சிறையில் நிறையவே வாசித்த ஆர் ஆர் வாசிப்பால் பூரணமடைந்த ஒரு மனிதராக மாறினார். ஆனால் 1993 இல் ஆர் ஆர் மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய பொழுது அவருடைய கழகத்தினதும் நாட்டினதும் நிலை முற்றிலுமாக மாறியிருந்தது.

ஆர் ஆர் போன்று தமிழ் இளைஞர்கள் வரிசையில் நின்று தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி தமிழ் தேசியத் தலைவர்களுக்கு நெற்றித் திலகம் இட்ட காலங்கள் மறைந்தது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழ் தேசியத் தலைவர்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்ப, இவர்களை நம்பி ஆயதம் ஏந்திய, அரசியலில் அரிச்சுவடி மட்டும் படித்த அல்லது அதுவும் படியாத இளைஞர்கள் ஆயதங்களை அத்தலைவர்கள் பக்கம் திருப்பினர். தங்கள் கைகளைக் கீறி இரத்த திலகம் இட்டவர்கள், 1989 யூலை 13 அத்தலைவர்களையே இரத்த வெள்ளத்தில் வீழ்த்தியது வரலாறு. அதற்கு அடுத்த சில தினங்களிலேயே ஆர் ஆர் இன் நேசத்துக்குரிய தலைவர் உமாமகேஸ்வரன் ஆர் ஆர் இன் சுழிபுரம் நண்பர்களாலேயே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆர் ஆர் இன் இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் ஊரவர்கள் அதற்கு சில மாதங்கள் முன் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் மாலைதீவுச் சிறையில் இருந்து திரும்பிய ஆர் ஆர் தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளரானார். 1999 செப்ரம்பர் 2இல் உள்வீட்டு சதியும் சேர்ந்து மாணிக்கதாசன் கொல்லப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மிக மோசமான படுகொலைகள் உட்பட பல கப்பம், கடத்தல், கொள்ளை எனப் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்தவர் மாணிக்கதாசன். இவரது படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் ஐரோப்பாவரை நீடித்திருந்தது. இதுவரை இவ்விடயங்கள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை.

இதுவிடயமாக ஆர் ஆர் உடன் பேசப்பட்டபோது, “நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதுவும் சொல்லலாம். எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்ந்து பாருகங்கள். எங்கள் வாழ்வே ஒவ்வொரு நாளும் போராட்டமே” என்று பதிலளித்தார். தமிழ் மக்களிள் விடுதலைக்காக அன்று போராடச் சென்ற ஆர் ஆர் போன்ற குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை எப்படி மதிப்பீடு செய்வது என்பது மிகக் கடினமானதும் சிக்கலானதுமாகும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட ஏராளமான கோடிக்கணக்கான சொத்துக்கள் இன்னமும் அதன் தலைவர் சித்தார்த்தனின் குடும்பத்திடமும் மாணிக்கதாசனின் உறவினர்களிடமும் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது. ஆர் ஆர் இடம் இருந்த சொத்துக்களும் அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே கைமாற்றப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர் ஆர் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்ல மனிதராகவே பலராலும் கணிக்கப்படுகின்றார். தன்னுடைய பதின்ம வயதில் தன்னுயிரை துச்சமென மதித்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச் சென்றவர்களை, அவர்களது போராட்டப் பயணத்தின் பின்னணியில் மதிப்பீடு செய்வதென்பது மிகக் கடினமானது. மாலைதீவில் இருந்து நிறைந்த வாசிப்போடு தாயகம் திரும்பிய ஆர் ஆர் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் சட்டக் கல்வியைக் கற்றுள்ளார். பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளையும் செய்துள்ளார். உலகம் பூராகவும் உள்ள அவருடைய தோழர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்துகின்றனர். நிறைந்த அநியாயங்களும், நியாயங்களும் கொண்ட போராட்டப் பயணத்தில் அநியாயத்திற்கும் நியாயத்திற்குமான இடைவெளி எமது போராட்டத்தில் மிகக் குறுகியதாக்கப்பட்டுவிட்டது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போராளிகளிடையே காணப்பட்டது. ஆதலால் ஆர் ஆர் இன் போராட்ட வாழ்வும் அதன் நியாயத்தன்மையும் எப்போதும் விவாதத்துக்குரியதாகவே இருக்கும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைப் பொறுத்தவரை அந்த அமைப்பின் கடைசித்தூண் ஆர் ஆர் என்றால் மிகையல்ல. இப்போதைய தலைவர் சித்தார்த்தன் கூட கழகத்தின் உறுப்பினராக உமாவின் மறைவுக்குப் பின் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு கழகத்தையும் தெரியாது. போராட்டமும் தெரியாது. கழகத்தின் இருப்புக்கான தேவை இல்லாமல் போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. கழகம் காலாவதியாகி விட்டது. இனிக் கழகம் மெல்லக் கலையும். அதுவே அரசியல் யதார்த்தமாகும்.

 

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.

யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா? இந்திர(ன்)லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா?

யாழில் பெப்பரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த் தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்க்க இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்து தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி, ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர். ரசிகர்கள், நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது. எழுபதுகளில் தமிழாராச்சி மாநாட்டில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதம் அதிஸ்ரவசமாக அன்று நிகழவில்லை. நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வை இந்திரன் ஆரம்பிக்கப்போகின்ற நோர்தேர்ன் யூனி வர்சிற்றிக்கான விளம்பரமாகவே ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் யாழ் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர்இ நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர். தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

“இது இசை நிகழ்ச்சி அல்ல இது ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி….. இலவசம் எனக் கூறி எமது இளைஞர் பரம்பரையை அவமானப்படுத்திஇ அவர்களைக் கோபம் கொள்ள வைத்த கூத்து… இந்த நிகழ்ச்சிக்கு எம்மவர்கள் குடும்பம், குடும்பமாக சென்றது எமது பிழை….” என்கிறார் ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பினைச் சேர்ந்த தம்பி தம்பிராசா.

இது தொடர்பாக தேசம்நெற்க்குத் தெரிவித்த இந்நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்ற முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரான த ஜெயக்குமார், “அமையப் போகின்ற பல்கலைக்கழகம் ஒரு திரைப்படத்துறை சார்ந்த பல்கலைக்கழகம் என்றால் கூட தம்மன்னா கோஸ்டியைக் கொண்டு வந்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது. ஆனால் நொதேர்ன் யூனிவர்சிற்றி, Sri Lanka Institue of Information Technology – SLIIT உடன் இணைந்து கணணித்துறைசார்ந்த கற்கைநெறிகளையே மேற்கொள்ள உள்ளது. இதற்கு தம்மன்னா கோஸ்டி எதற்கு?” என்றார். இதே கேள்வி கல்வியியலாளர்கள் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்திரன் என்று அறியப்பட்ட நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ் சுதுமலையிலிருந்து கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். அங்கு வெற்றிகரமாக “மஜிக் வூட்ஸ்”மற்றும் பல துணை நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அக்காலகட்டத்தில் புலிகளும் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது தமிழகத்திலும் புலிகள் சில பல முதலீட்டு முயற்சிகளில் ஒன்று இந்த மரங்களை தளபாடங்களை உற்பத்தி செய்வதும் ஏற்றுமதி செய்வதும். அவ்வேளையில் புலிகள் தங்கள் முதலீட்டுக்கு நம்பகரமான ஒரு நபர்களைத் தேடிய போது ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்’ இந்திரனுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம். இத்தகவலை புலிகள் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்ட நம்பகமான ஒருவர் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். இது தொடர்பாக இந்திரனுடைய பள்ளி நண்பரும் தமிழீழ விடுதலைப் புலிகளில் மாத்தையா அணியில் இருந்தவருமான தேவன் குறிப்பிடுகையில், அது இந்திரனின் முதலீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.

இந்த மஜிக் வூட்ஸின் விளம்பரத்திற்கு வந்தவர் தான் ரம்பா. அப்போது இவர் தயாரித்த ‘திறி ரோசஸ்’ என்ற படம் தோல்வியடைந்த நிலையில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது இந்திரன் அவரைக் கண்டு காதல் வசப்பட்டார். ரம்பாவின் கடனையும் அடைத்தார். அத்தோடு முதல் மனைவியை விவாகரத்துச் செய்து ரம்பாவைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பிரபல்யமானார்.

நேற்றைய நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிகழ்வு முகாமைத்துவம் இன்மையே காரணம் என ஜேர்மனியில் வாழும் சமூகச் செயற்பாட்டாளரும் தொழில் முனைவருமான இரத்தினசாமி ரமேஸ்வரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் மதுபோதையிலும் போதைப்பொருட்கள் பாவித்த நிலையிலுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்சியைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வாறானவர்களை நிகழ்வில் பங்கேற்க விடாமல் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பும் கூட. ஒரு பொதுவான களியாட்ட நிகழ்வை எப்படி நடத்தக்கூடாது என்ற வரலாற்றுப் படிப்பினையை இந்திரன் ஈழத்தமிழர்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழில் வந்து செய்கின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிடும் தம்பி தம்பிராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை மோசடி செய்த பலர் தற்போது தாயகம் திரும்பி யாழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். இந்தப் பட்டியலில் வரக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பி தம்பிராசா, குறிப்பிடாத சிலர்:
வலன்ரைன்ஸ் டேய்க்கு பிரான்ஸ், லண்டன் ஸ்ரைலில் பூட்டுப் போடவும், காதல் செய்யவும் தங்கள் ரீட்சா ஹொட்டலுக்கு கூவி அழைக்கும் ஐபிசி பாஸ்கரன்,
யாழ் ஆணாதிக்க வெள்ளாள சைவப் பழம் ஆறுதிருமுருகனிடம் ஆசீர்வாதம் பெற்று யாழில் மதுவும் மாதுவுமாக டிஸ்கோ கிளப் நடாத்தும் திருவள்ளுவருக்கு திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் வைத்து வள்ளுவரின் வரலாற்றை யாழில் மாற்றியமைத்த புலிகளின் ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் ரில்கோ ஹொட்டல் உரிமையாளருமான திலகராஜா,

 

பிரான்ஸ் லாக்குர்னே சிவன் ஆலயம் நடத்தும் நல்லூரில் உள்ள காமவிடுதி லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரன்,
(அண்மையில் யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரே மகனின் மனைவி) மருமகளிடம், அவரின் தாயும் தங்கையும் குடியிருந்த கொழும்பு வீட்டை சீதனமாக எழுதித்தரச்சொல்லி வற்புறுத்திய கொடைவள்ளல் சுவிஸிலிருந்து வந்து எம்ஜிஆர் வேசம் போடும் ‘தியாகி’ அறக்கட்டளையின் வாமதேவன் தியாகேந்திரன் (இவர் லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரனின் சகோதரர்.)

லண்டனில் உள்ள சில புலி ஆதரவு ஆர்வக்கோளாறுகள் எவ்வாறு இந்திய உளவுத்துறை றோ உடன் சேர்ந்து தமிழீழம் காணப் போகிறோம் என்று கூறுகிறார்களோ அதே போல் மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசோடும் புலனாய்வுத்துறையோடும் சேர்ந்து யாழில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். யாழ் சட்டத்தரணி செலஸ்ரினின் மொழியில் சொன்னால், “தம்மன்னாவை அழைத்து இளைஞர்களை எழுச்சிபெற வைத்து தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்கின்றனர்”.

யாழில் இந்திரன் பல்கலைக் கழகம் கட்டுகிறாரோ இல்லையோ இந்திரலோகக் கன்னிகைகள் கழகம் கட்டுவார் என்பதை மட்டும் உறுதியாகத் தெரியப்படுத்தியுள்ளார். உலகில் கவர்ச்சி நடனம் ஆடி பல்கலைக்கழகம் கட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இந்திரனையே சேரும். தவறணைக்கும் பாருக்கும் கவர்ச்சி நடனம் போட்டு ஆண்களை வரவழைப்பது மேற்குநாட்டுக் கலாச்சாரம். அது லண்டனில் தவறணை நடத்தும் கொன்ஸ்ரன்ரைனின் வியாபார தந்திரம். அதையே இந்திரன் யாழில் பல்கலைக்கழகத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். பதிவு செய்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொல்லிஇ இளைஞர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்கள் தகவல்களைச் சேகரித்தனர். காரியமானதும் ரிக்கற்றுகளுக்கு பணம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹொட்டல்காரர்கள் யாழை அந்தப்புரமாக்க, இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்திரலோகக் கன்னிகைகள் கழகத்தை கொண்டுவந்து ஒரு சிக்ஸரே அடித்துள்ளார். யாழின் தமிழ் தேசியம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. இவர்களினால் ஈர்க்கப்பட்டு இன்னும் பல வெளிநாட்டு வியாபாரப் புள்ளிகள் யாழில் ஹொட்டல் கட்ட ஓடித்திரிகின்றனர்.

எண்பதுகளில் ஈபிஆர்எல்எப் ஆல் கடத்தப்பட்ட அமெரிக்க அலன் தம்பதிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தும் சுழிபுரத்தில் புளொட்டின் மிருகத்தனமான கோரப் படுகொலையை படமெடுத்தும் பிரபலமான லண்டன் தவறணை பார் உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைன் சட்டத்தரணி தேவராஜனிடம் மண்கவ்வி நீண்டகாலம் தன்னை மௌனமாக்கிக் கொண்டவர். கோமாவில் இருந்து எழுந்து தமிழ் தேசியவாதியாகியுள்ளார். தற்போது தனது தவறணை வியாபாரத்திலிருந்து ஓய்வுபெறப்போவதாக லண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் வட்ஸ்அப் குறுப்பில் குமுறியிருந்தார், ஓய்வூதியர் கொன்ஸன்ரைன் யாழ் தமிழ்ப் பத்திரிகைகளை வடஸ்அப் குறுப்பில் பகிர்வதை தனது தமிழ் தேசியக் கடமையாக எண்ணிச் தன் ஓய்வுக்காலத்தை மிகப்பெறுமதியாகக் களித்து வருகின்றார். அவர் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி யாழில் ஹொட்டல் கட்டும் திட்டத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இவரொரு கிறிஸ்தவர் என்பதால் கோயில்கட்ட முடியாததால் ஹொட்டல் கட்டும் தமிழ்த் தேசிய நிரோட்டத்தில் ஒரு வழியாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை ஹொட்டலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புதமொழியை ஹொட்டலியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என யாழ் சிவனடியாரான சிவநாதன் நளினமாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அ அமிர்தலிங்கம் நிச்சாம சாதியத்துக்கு எதிரான கிளர்ச்சி பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நிச்சாமம் பீக்கிங்காக மாறுகிறது எனச் சினந்துகொண்டார். யாழில் சாதிய ஒடுக்குமுறை சங்கிகளினாலும் தமிழ் தேசியவாதிகளினாலும் கூர்மையடைந்திருக்கும் இந்நிலையில் யாழை தாய்லாந்தின் பட்டாயாவாக்கும் கைங்கரியத்தில் தமிழ் தேசிய ஹொட்டலியர்கள் ஆறுதிருமுருகனின் ஆசீர்வாதத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திரன் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்ச்சி முற்றிலும் தவறானது என்று தட்டிக்கழித்துவிடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றுதான் பல லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஆனால் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை இந்திரன் ஏற்பாடு செய்த நோக்கம், நிகழ்ச்சி ஏற்பாடு, அந்த மண்ணின் மரபுகளை கருத்திலெடுக்காதது, வியாபார உத்திக்காக குறிப்பாக நடிகைகளை போகப்பொருளாக இளைஞர்கள் முன் நிறுத்தியது என்பன மிகமோசமான மன்னிக்க முடியாத செயல். உலகின் முன் யாழ் சமூகத்தை, யாழ் இளைஞர்களை பாலியல் இச்சைக்கு அலைபவர்களாக சித்தரிக்க வைத்துள்ளார். ஒரு சில இளைஞர்கள் தவறான முறையில் நடந்துகொள்வார்கள் எனற கணிப்பில்லாமல் இவ்வாறானதொரு களியாட்ட நிகழ்வை நடத்தியது அவருடைய முட்டாள்தனம். இதில் யாழ் இளைஞர்கள் மீதோ யாழ் மக்களின் மிதோ எவ்வித தவறும் கிடையாது.

மேற்கு நாடுகளின் தவறணைகளில், பார்களில் சில பத்துப்பேர் கலந்துகொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கே வாயில் காப்பாளர்கள் இருப்பதும் பொலிஸார் வரவழைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வு. இந்திரன் இந்நிகழ்வை நடத்துவதற்கு முன், லண்டன் தவறணை உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைனிடம் ஆலோசணை பெறாதது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

இதே போல் ரோ தமிழீழம் பெற்றுத்தரும் என்று ஆர்ப்பரிக்கும் வட்ஸ்அப் போராளி நிலா பிரபாகரன் தன்னை மதியுரைஞராக வைக்காமல், கிறிஸ்தவரான சிஐஏ ஏஜென்டான அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்ததால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18, 2009இல் தோல்வியடைந்ததாக உறுதியாக நம்புகிறார். முன்னையது இந்திரன் விட்ட வரலாற்றுத் தவறு. பின்னையது வே பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறு. இதுதான் காலக்கொடுமை என்பது.

யாழ் மக்களும் இளைஞர்களும் ‘மானாட மயிலாட’ பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதனை நேர்மையுடன் பார்வையாளர்களை ரசிகர்களை மதித்து, வரக்கூடிய விளைவுகளை அறிந்து முற்கூட்டியே திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சரிவரச் செய்து நடத்த வேண்டும். லண்டனில் வோல்தம்ஸ்ரோவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமாருடனான ஒரு உரையாடல் ஒன்று 2009இல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை லண்டன் திருக்கோயில்கள் ஒன்றியக் கோயில்களில் ஒன்றின் தர்மகர்த்தாவும் பாஉ சிறிதரனின் நிதியாளருமானவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட போதையூட்டப்பட்ட தமிழ் தேசிய புலி ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டத்தைக் குழப்ப மூன்று மணிநேரம் போராடினார். ஆனால் கொன்ஸ்ரன்ரைன் மிகச்சாதுரியமாக இரு பட்டாலியன் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரை இறக்கி கூட்டத்தை மிகவெற்றிகரமாக நடத்தினார். இந்திரன் கொன்ஸ்ரன்ரைனோடு ஒரு கொன்ஸ்பிரன்ஸ் ஹோல் போட்டிருந்தால் இன்றைய தலைப்புச் செய்திகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது மிக முக்கிய பாடம். இதுதான் இந்திரன் மூலம் ஈழத் தமிழர்கள் 2024 பெப்ரவரி 9இல் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.

தமிழ் தேசியத்தை போர்துக்கொண்டு ஹொட்டலியர்களோடும் கள்ளச்சாமிகளோடும் ஆறுதிருமுருகன் போன்றவர்கள் போடும் கூத்திலும் பார்க்க யாழ் இளைஞர்கள் தம்மன்னாவின் நடனத்தை பார்த்து ரசிக்கச் சென்றதில் எந்தத்தவறும் கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்தை உங்கள் அந்தப்புரமாக்காமல், பாலியல் சுரண்டலில் ஈடுபடாமல் அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னேற்றும் வைகயில் செயற்பட வேண்டும். அதுவொன்றே அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறி தங்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள் இலங்கை மற்றும் நாடுகளினது உளவு அமைப்புகளின் முகவர்களோடும் இலங்கையில் உள்ள தவறணை ஒப்பந்தங்களை விநியோகிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளான தற்போதைய தேசியத் தலைவர் சிறிதரன் போன்றவர்களுக்கு வாரி இறைத்து அங்குள்ள இளைஞர்களை போதையில் மிதக்க விடாமல் அந்த இளைஞர்களின் கல்வி, பொருளாதார மற்றும் தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதைக் கொண்டுவந்தவர் கல்வி அமைச்சராக இருந்த கன்னங்கரா. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் பின் இடதுசாரிகளினது உழைப்பும் கணிசமானது. செல்வந்த நாடுகளான மேற்குலகில் கூட பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி என்ற நிலையில்லை. ஆனால் வறிய நாடான இலங்கையில் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை இலவசக் கல்வியுள்ளது. ஆனால் அண்மைய காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உலகவங்கியின் அழுத்தம் காரணமாக அரசு தனது பொறுப்புக்களைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. காலப்போக்கில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டம் நாசுக்காக நடந்தேறி வருகின்றது.

இலங்கையில் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளன. கல்விக்கடன் பெற்று படிக்கச் செல்லும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் வந்து, பொதுமருத்துவமனைகள் வினைத்திறனற்றவையாகிக் கொண்டுள்ளன. அதனால் பணம் உள்ளவரே சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை பணமுள்ள மாணவர்களுக்கே கல்வி என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

“இந்திரனால் ஒருநாள் களியாட்ட நிகழ்வையே திட்டமிட்டு குழப்பமின்றி நடத்த முடியவில்லை. இவர் எப்படி பல்கலைக்கழகம் நடத்துவார்?” என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் லாப நோக்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் இப்போது இருக்கின்ற கல்விக்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்து, சமூகத்தில் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். இது விழிம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். அம்மக்களை தொடர்ந்தும் ஏழ்மையில் தங்களுக்கு சேவகம் செய்யும் கூலிகளாக தம்மன்னாவைக் கண்டவுடன் ஓடிச் சென்று விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரல்.

மேலும் பெண்களை போகப்பொருட்களாக முன்னிறுத்துவதும் அவர்களை இந்த ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் வட்ஸ்அப் குறுபிப்பில் போட்டு பந்தாடுவதும் மிகக்கீழ்த்தரமான செயல். அவர்கள் நடிகைகளாக இருந்தாலும் அது அவர்களுடைய உத்தியோகம். அவர்களை விபச்சாரிகளாகச் சித்தரித்து பாலியல் இச்சைகளுடன் எழுதி சிற்றின்பம் காண்கின்ற கீழ்த்தரமான செயல்களை தமிழ் தேசியம் முற்றாகக் கைவிடவேண்டும்.

ஆறுதிருமுருகன் தன்னைப் பெற்றெடுத்த தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதுவதைக்காட்டிலும் தன்னைப் போன்ற தன்னோடு கூடி உறவாடும் ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் எப்படி நடந்துகொள்வது என்று எழுதினால் யாழ் சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகனுக்கு ஆறாவது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். அத்தோடு சற்று சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.

ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடக்கூடாது என்பது பழமொழி. ஒரு காலத்தில் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் கீழ் இலங்கை முழவதற்குமே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அதற்கான திறமையின்றி நியமிக்கப்பட்டு பதவி விலகிய ஆறுதிருமுருகன், யாழில் வழிதவறிய ஆண்கள் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும், தொலைக்கப் போகும் ஒழுக்கத்தை ஏன் பெண்களிடம்; தேடுகின்றார்? யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் படுத்துக் கிடந்து என்னதான் செய்தார் ஆறுதிருமுருகன்?

புலம்பெயர்ந்த ஹொட்டலியர்கள், கோயில் கடைக்காரர்கள்;, வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மண்ணின் பண்புகளை மதித்து தாயகமக்களின் இயலாமையை பலவீனங்களை தமிழ் தேசியம் என்ற போர்வையில் முதலீடாக்காமல் அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சுயமரியாதையோடும் கௌரவத்தோடும் வாழவிடுங்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதில் தமிழ் தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே முன்னிற்கின்றனர். இவ்வாறான அனைத்து பிற்போக்குத் தனங்களையும் களையெடுத்து ஏனைய சமூகங்களோடு, மதப்பிரிவினரோடு, சக இனத்தவரோடு கைகோர்த்து அனைத்து மக்களிற்குமாக குரல்கொடுக்கின்ற முற்போக்குத் தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுவொன்றே இலங்கையர் அனைவருக்குமான விடுதலைக்கு வித்திடும்.

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.