::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இலங்கையில் ஐ.பி.எல் போட்டிகள் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை ஐ.பி.எல். போட்டி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரிடம் தாம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்றை விடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர்,

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷாவுடன் நான் அண்மையில் திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தினேன். அப்போது இராஜதந்திர நிலைமை குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் ஐ.பி.எல் தொடரின் மூன்று போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு நான் ஆலோசனை முன்வைத்தேன்.

இந்தப் போட்டிகளை இலங்கையில் நடத்த வாய்ப்புக் கிடைத்தால் அது முக்கிய வெற்றியாக அமையும்” என்றார்.

தென்னிந்தியாவிலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மத்தளையை ஐ.பி.எல். வலயமாக மாற்ற வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் பொதுத் தேர்தல் காரணமாக இதற்கு முன்னர் இரு முறை ஐ.பி.எல். போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டிருந்தன.

2009 தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டதோடு 2014 இல் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் மத்திய கிழக்கில் ஆடப்பட்டன. நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொடருடன் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் விக்கெட் கீப்பராக தமிழ் வீரர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷாருஜன் சண்முகநாதன் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சினெத் ஜெயவர்தன தலைமையிலான குறித்த குழாமில் புலிண்டு பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஜான் நெத்சர, ருசன்ட கமகே, ஷாருஜன் சண்முகநாதன், டினுர கலுபஹன, மல்சா திருப்பதி, விஷ்வா லஹிரு, கருக சக்கெத், டுவின்டு ரத்நாயக்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தெவ்மிக மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழாமிற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு – கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் மாணவனாவான் சாருஜன் சண்முகநாதன் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை முன்னுதாரணமாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Asian Classic Powerlifting Championship 2023 – இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த புசாந்தன் !

மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

No photo description available.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா / பசிபிக் / ஆப்ரிக்கா பளுத்தூக்கும் போட்டியில் squat முறையில் 325kg தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை புசாந்தன் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் சனத் ஜயசூரிய !

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) !

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.

பிலிப்பைன்ஸ் National Masters & Seniors Athletics போட்டி – 75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலத்திருநாயகி !

இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தராவார். இவர் தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டியில் ( National Masters & Seniors Athletics) போட்டியில் பங்கேற்று 02 தங்கம் மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

1500m ஓட்டப்போட்டி மற்றும் 5000m விரைவு நடைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 02 தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் 5000m ஓட்டப் போட்டியில் பங்குப் பற்றி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபா பரிசு – இலங்கை கிரிக்கெட் சபை

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

19 வயதான அவர், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் தோற்றத்தை 2.03.20 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்காக முதல் ஆசிய விளையாட்டு தடகள தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த தருஷி கருணாரத்னவுக்கு கிரிகெட் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

தருஷி கருணாரத்ன 2019 ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் போட்டிகள் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் தசுன்!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.

 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாரிய தோல்வியை சந்தித்தமையால் நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து கேள்வியெழுப்பட்டுவந்தது.

 

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக இருக்க வேண்டும். தசுன் சானக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியவர் என்று  இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா கருத்து தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த $5000 டொலர்களை இலங்கை மைதான பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய சிராஜ் !

10 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்ற இந்திய அணிஆசிய கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

51 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி ஏழாவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் களமிறங்கிய இஷான் கிஷான் 23 மற்றும் சுப்பமன் கில் 27 ஓட்டங்களை எடுத்தனர்.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதிலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சில் அனல் பறந்தது.இதனால் அடுத்தடுத்து இலங்கை விக்கெட்டுக்கள் சரிந்தன.

இறுதியில் 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ்17,துசன் ஹேமந்த ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப்பெற்றனர்.ஏனைய அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பந்து வீச்சில் இந்திய அணி சர்பாக சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதேவேளை போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற மொஹமத் சிராஜ் தனக்கு கிடைத்த $5000 டொலர்களை கடுமையான மழையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு செயற்பட்டு மைதானத்தை துப்புரவாக்கிய  மைதானம் பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.