எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எரிபொருள் விநியோகத்தை சீரமைப் பதற்காகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்த சட்டப்படி வேலைப் போராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய ஊழியர்கள் இன்று முதல் வழமைபோல கடமைக்குத் திரும்புவர் என மேற்படி தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஓரிரு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற் சங்கங்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளபோதும் நாடு பூராவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பெற்றோல் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்று தெரிவித்தார்.
பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அடங்கலாக சகல துறைகளையும் சார்ந்த தொழிற் சங்கங்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளதாகவும் இதன்போது பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏனைய அரச ஊழியர்களை விட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்.
அவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் யுத்தம் முடிவடைந்து ஒரு சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவது அநீதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை நாடுபூராவும் உள்ள 32 பிராந்திய எண்ணெய்க் களஞ்சி யங்களினூடாகவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனியன்று மாத்திம் 10 இலட்சம் லீட்டர் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியது.