ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • chandran.raja
    chandran.raja

    திரு புன்னியாமீனின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி. இவையெல்லாம் இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளும் கவனத்தில் எடுக்கக் கூடியதே!. கவனத்தில் எடுத்தே!! ஆகவேண்டும். அந்த விதத்தில் திரும்பவும் நன்றி செலுத்துகிறேன்.

    மூன்றாம் உலகநாடுகளின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் நடவடிக்கைகளும் ஒன்றும் புரியாத செய்திகள் அல்ல. என்னென்ன வாக்குறிகளை சுடச்சுட அள்ளி வீசுவார்கள் என்பதை நாம் கண்டுகளித்துள்ளோம். உதாரணத்திற்கு இந்தியாவே எடுத்துக் கொள்ளலாம். மக்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களை தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை. அவர்களோ ஒவ்வொருவரின் கால்களில் விழுந்து கும்புடுவதற்கு வீடு தேடி
    வருவார்கள். வரும் போது அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி உறையில் பணநோட்டுகளும் இடப்பட்டிருக்கும். இதுவே தேர்தல் காலங்களில் நடக்கும் சதாரணநிகழ்வுகள். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால்…

    கடந்தகால போர் அதுவும் இலங்கைப் பிரஜைகளின் அப்பாவி ரத்தத்தில் நடத்தப்பட்ட முப்பதுவருடயுத்தம் எந்த ஊடகமும் செய்தி தொழில்நுட்பமும் அடைந்துவிடாத வெற்றியை இலங்கை உழைப்பாளிமக்களில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு இராணுவ அதிகாரி இன ஐக்கியத்தையோ மத ஐக்கியத்தையோ கோராத ஒரு மனிதன் ஒருசில நாட்களில் விழித்தெழிந்து உங்களுக்கு சமதர்மத்தை பிரயோகிக்கிறேன் என்று சொல்வதை எந்த செய்தித்தொடர்பு தொழில்நுட்பமும் நியாயப்படுத்த முடியாது. அந்த இடத்தில் எந்த அறிவுஜீகளும் எண்ணிக் பார்கமுடியாதவாறு சில அதிசயங்களும் இலங்கை மண்ணில் நடந்தேறும். இதுவே! மக்கள் தான் வரலாற்றை முன்கொண்டு செல்லுகிறார்கள் என்பதற்கும் சாட்சியாகவும் நாளைய உதயத்திற்கு ஒரு கீற்றாகவும் கிழக்காசிய மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லிவிட்டு போகும்.

    Reply
  • Ajith
    Ajith

    This is the first balanced article published in this web. Over the past 60 years since the so called politicians ruled this country. After 60 years of corrupted rule by Sinhala buddhist rule, Ceylon has become one of the worst corrupted nation and finally the country is being charged for war crimes, genocide, human right abuses, unlawful abductions and killings, over 30 journalists were killed and no freedom of speech and movement of people. We only talk 30 years of civil war between tamils and Sinhala. We forget the war between sinhalese. SWRD Bandaranaike’s Sinhala only policy killed thousands of tamils. Srimavo’s ruled killed over 10,000 sinhala youths. JR jeyawarde’s rule killed thosands of tamils. Premadasa’s rule killed over 40,000 sinhala youths. Now, Rajapakse brothers rule killed over 100,000 tamils. The blood thirsty politician took our country to the worst and now we have slaves of India. India orders to remove Fonseka and Rajapake removed him immediately. India ordered to kill tamils and Rajapakse did that. What else you expect from Rajapakse. Do we need him to fully surrender our independence to India. India is the country who trained and armed tamil insurgents and finally ordered to kill them. Rajapakse was against to India in 1989 and supported JVP terrorism but he is a slave of India and JVP is against to India.
    Why don’t we hand over the power to Sarath Fonseka who was not a politician but stands to get rid of a President who is a slave of India. We Sri Lankan’s need changes. Some tamils who cannot come of out slavery cannot understand the India’s coup. For Sinhalese, India is the first enemy. We want independence from India. So Sarath is the man we need.

    Reply
  • niru
    niru

    //1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.//

    சரத்தை அதரிக்க கோரும் புலிகளின் ஆதரவுக்காரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது இவைகளே

    Reply
  • Ajith
    Ajith

    Those who support Rajapakse should understand that vote to Sarath Fonseka is not in support of Sarath Fonseka. It is well known truth that Rajapakse regime has committed war crimes, human right abuses and a threat to true democracy. They personallt hold 75% of the wealth of Nation. This is the worst corrupted regime murdered not only tamils but also sinhalaese who raise their voice against corruption. Who runs the white van democracy in Sri Lanka. Who killed Lasatha? Who sold our soverignity to blood thirsty India? Why should tamils and sinhalese vote for Rajapakse? Whether Sarath gets two third of votes to remove the Presidency, he will take action to put war criminals under proper justice system.Sarath Fonseka was a servant under Dictator Rajapakse. He followed Rajapakse orders as any other government servant. It is natural that slaves who were in the Rajapakse payrole get agitated of change becuase they have to face their fate as associated with war crimes. According to Rajapkse, they have defeated LTTE. So, why should they worry too much about LTTE for presidential election. LTTE is not an issue for presidential election. The economy,corruption, human rights violation and war crimes are the issues to be discussed. Can’t you run politics without LTTE?

    Reply