கிளிநொச்சியில் கிணறு ஒன்றிற்குள்ளிருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர் அவரது கிணற்றை துப்பரவு செய்து கொண்டிருந்த போது இரண்டு எறிகணைகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள படையினரிடம் தகவல் தெரிவித்தார் படையினர் அவ்விடத்திற்குச் சென்று மேலும் கிணற்றிலுள்ள சேற்றினை அகழ்ந்த போது 14 வரையிலான எறிகணைகள் அக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.
கடந்த யுத்தத்தின் போது படையினர் அப்பகுதிகளை கைப்பற்ற முன்னேறிய நிலையில் அப்பகுதியிலிருந்த புலிகள் அக்கிணற்றிற்குள் தாங்கள் வைத்திருந்த எறிகணைகளை போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என படையினர் தெரிவித்தனர்.