குடாநாட்டில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்பு அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு 35 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கபட்டு உள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று திங்கள் கிழமை வரை 36 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 12 தொடக்கம் 15 வயது வரையான சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கவதாகவும், அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான பெற்றோரை இழந்த சிறுவர்கள் தனிமையில் வாழ்வதாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட, அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினராலும் உளநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.