வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் – டக்ளஸ்

 epdp.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து யாழ் நோக்கி வரும் எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யாழ் குடாநாட்டு மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டுமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஏ-9 பாதை விடுவிக்கப் பட்டுள்ளதால் அதன் மூலம் பெரும் நன்மையடையப் போவது குடாநாட்டு மக்களேயாவர் என்றும் இதேபோன்று புலிப் பயங்கரவாதம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படும்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பாரிய நன்மைகளை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது தங்களது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகள் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக அப்பாவி பொதுமக்களையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெளிவுபடுத்தியதுடன் இந்த மக்களை விடுவித்துக் கொள்வதும், விடுவிக்கப்பட்டு வரும் மக்களைப் பேணிப் பாதுகாப்பதும் இன்று எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாக உள்ளதென்றும் உணர்த்தினார்.

வன்னியில் இருந்து வரும் மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து அரச மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடாநாட்டில் உள்ள மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இம்மக்களின் நலன்கருதி செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *