அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.