இடம்பெயர்ந்து வரும் வவுனியா மக்களின் நலன்பேண நான்கு விசேட செயலணிகள்

risard.jpgவிடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *