பாகிஸ் தான் அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் தொடர்ந்து அணு ஆயுதத்தை பரப்பும் அபாயம் உள்ளதாக ஒபாமா அரசு கூறியுள்ளது. அணு ஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கு விற்றதால் 5 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர்கான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ் கூறியதாவது:- அப்துல் காதிர்கான் விடுதலை பற்றி பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. அணு ஆயுத பரவல் குறித்து ஜனாதிபதி ஒபாமா பல தடவை கவலை தெரிவித்துள்ளார். காதிர்கான், அவரது வீட்டுக்காவலுக்கு காரணமான அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்கும் செயலில் மீண்டும் ஈடுபட மாட்டார் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஒபாமாவும், அவரது அரசும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கார்டன் துகுயிட் கூறியதாவது:- அப்துல் காதிர்கான் விடுதலை மிகவும் வருந்ததக்கது. அவர் இன்னமும் அணு ஆயுதங்களை பரப்பும் ஆபத்தானவராக இருந்து வருகிறார். அவர் வடகொரியாவுக்கும், ஈரானுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை விற்றதால் சர்வதேச பாதுகப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். அப்துல் காதிர்கான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை, பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதையும் மீறி அவரை விடுவித்தது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.
காதிர்கான் விடுதலைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி பிறகு விரிவாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹால்ப்ரூக், அடுத்த வாரம் பாகிஸ்தான் செல்கிறார். அப்போது அவர் இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் பேசுகிறார். காதிர்கான் விடுதலை குறித்து பிரான்சு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எரிக் செவாலியரும் கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவலில் காதிர் கான் ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இவ்விவகாரத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே, காதரிர்கான் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி தெரிவித்தார்.