வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்த பொதுமக்களில் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்தது.
வன்னியில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் ஐ.சி.ஆர்.சி.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓஷியன்’ எனும் கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இயங்கும் தற்காலிக ஆஸ்பத்திரியிலிருந்தே இவர்கள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த அனைத்து நோயாளிகளும் காயமடைந்தவர்களுமே ஐ.சி.ஆர்.சி. மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார்.