லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் மீது அமெரிக்க செனட்டர் கிளயர் மக் காஸ்சில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மும்பையில் நவம்பர் 26 இல் இடம்பெற்ற தாக்குதலுக்கும் லண்டனில் இடம்பெற்ற கொலைகளுக்கும் இந்த அமைப்பின் மீதே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை டோன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. லஸ்கர் அமைப்பு இந்தப் பாரிய தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கையில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொள்வதற்கு உதவ பாகிஸ்தான் மறுப்பதுடன் அக்குழுவை பாதுகாப்பதாகவும் மிஸோரியின் செனட்டர் கிளயர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், அவர் (கிளயர்) கூறுவது போன்று பாகிஸ்தானின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லையென தான் கருதவில்லையென்று அட்மிரல் பிளயர் கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலையடுத்து லஸ்கர் அமைப்பின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிளயர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பாகிஸ்தானியர் மத்தியில் லஸ்கர் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களை தமது தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவதாகவும் செனட்டர் கிளயர் மக் காஸ்சில் கூறியுள்ளார்.