முல் லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப்பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது