நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்து இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வருண் காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கி இருப்பேன் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆவேசமாக பேசினார். பீகாரில் உள்ள கிஷன்கன்ஞ்சில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் பேசுகையில்,
கடந்த தேர்தலின்போது ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ. மதவாதத்தை தூண்டி விட்டது. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்னையை கையில் எடுத்தனர். பா.ஜ.வின் இந்த சூழ்ச்சியை ஆர்.ஜே.டி. கட்சியும் நானும் தோற்கடித்து ஏமாற்றம் அடைய வைத்தோம். பாபர் மசூதியை இடித்ததில் நேரடியாக தொடர்பு உடைய அத்வானியின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.