தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்கு திடசங்கற்பம் பூணுவதற்கு இன்றைய நாளில் தொழிலாளர் வர்க்கத்தினர் கடமைப்பட்டுள்ளனரென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
தொழிலாளர் வர்க்கத்தின் ஞாபகார்த்த தினமாக கருதப்படும் உலக தொழிலாளர் தினமான மே தினத்தை உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கை வாழ் தொழிலாளர் மக்களும் மிகவும் அபிமானத்துடன் கொண்டாடுகின்றனர்.
இலங்கை வாழ் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்கள் போராடி இது வரையில் பெற்றுக் கொண்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது மக்களின் அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். தொழிலாளர் மக்கள் தமது உரிமைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் அதே நேரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பானது எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.
முப்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்த பயங்கரவாத போராட்டத்துக்கு முடிவினை கண்டுவரும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை போன்ற முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக்கு உலக பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அது முக்கியமாக தொழில் துறைக்கும் வெளிநாட்டு வருமான வழிகளுக்கும் பொதுவாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மோசமான முறையில் தாக்கம் செலுத்துகின்றது.
எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும், சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பாரதூர பொறுப்பினை ஓர் அரசாங்கம் என்றவகையில் நாம் பொறுப்பேற்றுள்ளோம். இந்தப் பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி தொழிலாளர் வர்க்கத்தின் ஒத்துழைப்பானது ஏனைய காலங்களை விடவும் இன்று இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இந்தக் குறிக்கோளை முன்வைத்து மே தினத்தைக் கொண்டாடும் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது வாழ்த்துரைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.