மீள வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதேநேரம், பொது மக்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். விமான மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
புதுமாத்தளன் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை நேற்று முன்தினம் வெள்ளி மாலையிலிருந்து அரசாங்கம் மீள வரையறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளமுள்ளி வாய்க்கால் – கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் நீளமும், ஒன்றரை கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாகப் புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் புலிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருக்கக் கூடாதென பிரிகேடியர் தெரிவித்தார். மேற்குறித்த பகுதியிலேயே பொது மக்கள் அதிகம் தங்கியிருப்பதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகக் கூறிய பிரிகேடியர், இனி பொதுமக்களைப் புலிகளால் வைத்திருக்க முடியாதென்றும் கூறினார்.
இதேவேளை, தற்போது புலிகள் சிக்குண்டுள்ள பகுதிக்குள் படையினர் 800 மீற்றர் தூரம் வரை உட் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி சுமார் இரண்டாயிரம் கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் படையினர் முன்னேறி வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.