இலங்கையின் கிழக்கே மூதூரில் சம்பூர் பிரதேச உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இருப்பிடங்களை இழந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களில் முதற்கட்டமாக ஒரு தொகுதியினர் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி அகதி முகாமுக்கு அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 குடும்பங்களைச் சேர்ந்த 2700க்கும் மேற்பட்டவர்கள் 11 அகதி முகாம்களில் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாகத் தங்கிவருகிறார்கள்.
மூன்று முகாம்களை மூடிவிட்டு அங்கிருந்தவர்களை கிளிவெட்டிக்கு அனுப்பிவைக்க அதிகாரிகள் முன்னர் செய்திருந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை.
சில குடும்பங்கள் சுய விருப்பத்தின் பேரில் சென்றிருந்தாலும் பல குடும்பங்கள் கட்டாயத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியேற்றப்பட்ட பலரும் கூறுகின்றனர்.
எனினும் மக்கள் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டதாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள் குடியேற்றப் பிரிவு இணைப்பு அதிகாரியான அருணாசலம் செல்வேந்திரன் மறுத்துள்ளார்.