நாற்பதடி பள்ளத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீழ்ந்த வான் ஒன்றை ரயிலும் மோதித் தள்ளிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை நண்பகல் அப்புத்தளையில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
அப்புத்தளை, பன்சலை வீதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் வேகமாக வந்த “டெலிக்கா’ ரக வானொன்று வீதியை விட்டு விலகி சுமார் 40 அடி பள்ளத்திலுள்ள புகையிரதத் தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த வான் தீப்பற்றிய அதேநேரம், நானுஓயாவிலிருந்து வந்த சரக்கு ரயிலும் அந்த வானை மோதித் தள்ளிச் சென்று தண்டவாளத்தை விட்டுத் தூக்கி வீசியுள்ளது.
பள்ளத்தில் வீழ்ந்ததால் வான் சாரதி காய மடைந்த நிலையில், வானை ரயில் மோதியதால் வான் மேலும் சேதமடைந்ததுடன், வான் சாரதியும் படுகாயமடைந்து பலத்த எரிகாயங்களுக்குமுள்ளானார். இதையடுத்து அங்கு வந்தவர்கள் வான் சாரதியை ஒருவாறு மீட்டு அப்புத்தளை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.