ஊடகவியலாளர் களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைத்து மாற்று திட்டமொன்றை அமுல்படுத்த மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மேற்படி ஓய்வூதிய திட்டத்துக்கு அரசின் ஒருங்கிணைந்த நிதியினூடாக 100 மில்லியன் ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
ஊடக அமைச்சும், சமூக சேவைகள் சமூக நல அமைச்சும் இணைந்து மேற்படி ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டமொன்றை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தாமல் ஒதுங்கியுள்ளனர். இதனால் இந்தத் திட்டம் ஒழுங்காக செயற்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக மாற்று யோசனைகள் பெற்று புதிய திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரப்பட்டுள்ளது.