கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அங்குள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இயங்க வைப்பது மற்றும் அபிவிருத்தி பணி குறித்தும் ஆராயவென இன்று விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து சென்றுள்ள மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர் களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மீண்டும் இயங்க வைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பாடசாலைகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் கடமைக்கு திரும்பச் செய்வதற்கென இடம்பெயர்ந்துள்ள ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும், குடாநாட்டுடன் அவர்கள் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருப்பதற்கு ஏதுவாக யாழ்- கிளிநொச்சி, முல்லைத்தீவு பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் ஆளுநர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.