ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டமொன்றை முஸ்லிம் இடதுசாரி முன்னணி நடத்தவுள்ளது. மருதானை ஸாஹிரா கல்லூரிக்கு சமீபமாக இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்த அறிக்கையில்;
இவர் இராணுவப் பதவியிலிருந்த காலத்தில் இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும் அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக உரிமைகள் வழங்கப்பட்டால் இறுதிவரை போராட வேண்டுமெனக் கூறியிருந்தார். மேலும், தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வந்தார் வசித்தார் எனவும் கூறியிருந்தார். எனவே இப்படிப்பட்ட சிறுபான்மை இன விரோதத்தை பாராட்டுகின்ற ஒருவரை முஸ்லிம் மக்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. எமது இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியே மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.