ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை மாற கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் வேண்டும் – ஜனாதிபதி

mahinda0.jpgஆசியாவின் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் நமது கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையானது கடல், வான் மற்றும் வர்த்தகத் துறை கேந்திர நிலையமாக மாறிவருகின்ற போதும் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினரை விஞ்ஞான உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் வெற்றிபெறக் கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு கல்வித் துறையில் சகல அதிகாரிகளுக்குமுரியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கல்வித்துறை நிர்வாகச் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிப தியைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று முன்தினமிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும் நாடு இது. அந்த ஜனநாயகத்தை நாம் தொடர்ந் தும் பாதுகாப்பது அவசியம். ஜனநாயகத்தை உதாசீனப்படுத்திய காலகட்டமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம்.

சமாதான உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சித்த யுகமொன்று இருந்தது. இது போன்ற செயல்கள் ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாது. பட்டலந்தை வதை முகாம் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. எனினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஆரம்பித்த போராட்டத்தின் பலனை இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

இந்நாட்டின் சகல மக்களினதும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதாலேயே வடக்கு மக்களும் தமக்கு விருப்பமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தீர்மானித்தோம். இதன் மூலம் நாட்டின் சகல மக்களும் சமமாக ஜனநாயக உரிமையை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்.

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. எனினும் அவர்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவன் என்ற வகையில் அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். நான் ஒரு பகுதியினருக்கு தலைவனாக இருப்பதில் பயனில்லை.

அதனால் தான் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன். எனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்களாக உள்ள போதும் அவர்களுக்கு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலைக் கொண்டு வந்தோம்.

அம்மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுள்ளோம். மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. தற்போது நிவாரணக் கிராமங்களில் 94,000 பேரே உள்ளனர். தினமும் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தவறு என சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் இதனை நான் தவறென்று கருதவில்லை. மக்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    அதுக்கான அவசியம் இல்லை என நினைக்கிறேன்; அதுதான் நீங்கள் பாகிஸ்தான் இந்தியா சீனா ரஸ்யா என நாலு திசையும் கண்ணை காட்டி அவர்களுக்குள் ஒரு தெளிவான ஜனநாயகத்தை உருவாக்கி விட்டீர்களே; அதுவும் சரிதான் இந்த நாலு நாக்கு முக்காவிடம் இருந்து
    தப்ப இலங்கையர்க்கு கண்டிப்பாக கல்வி அறிவு மட்டுமல்ல உலகறிவும் வேண்டும்;

    Reply
  • saami
    saami

    கேந்திர நாடு என்று இப்பவா தெரியுது. அமெரிக்கன் விட்ட அறிக்கை நல்லா வேலை செய்யுது

    Reply