மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு – 5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *