தெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவது தொடர்பாக ஆராய்வது முன்முதிர்ச்சியற்றது என்று சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் ஷீல் காந்த் சர்மா கூறியதாக பேர்னாமா செய்திச் சேவை நேற்று புதன்கிழமை தெரிவித்தது.
புதுடில்லியில் 2007 இல் சார்க்கின் 14 ஆவது உச்சிமாநாடு இடம்பெற்ற வேளை சார்க்நாடுகளின் மத்தியில் பொதுவான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் யோசனையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலாவதாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால், இந்தத் தெற்காசிய நாடுகள் மத்தியில் தாழ்ந்த மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் நிதிப்பாய்ச்சல் குறைவாக இருப்பதும் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்குரிய சாதகமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றகரமான கட்டத்தை எட்டும் போதே பொதுவான நாணயம் புழக்கத்தில் விடப்படுவது வழமையான நடைமுறையாகும். எமது வழக்கங்களை உகந்தவகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எமது பொருளாதாரத்தைத் தாராளவாதப் போக்கிற்கு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய நிலைமையிலேயே உரிய வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஷீல் காந்த் சர்மா கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட பிரிட்டனின் “ஸ்ரேலிங்” இன்னரும் யூரோ வலயத்திற்கு வெளியிலேயே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 கோடி மக்களைக் கொண்ட தெற்காசியாவில் நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 11 பில்லியன் டொலராகவே இருக்கின்றது