கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்வறிக்கைகள் அவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்த நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 18.19.20 ஆம் திகதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்தது.
எதிர்வரும் மாதம் 9.10,11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இவ்வாணைக்குழுவினர் சாட்சியங்களையும் பதிவுகளையும் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் சாட்சியங்கள் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அது ஊடகங்களுக்கும் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.