கடந்த சில தினங்களாக வடக்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி. முல்லைத்தீவுப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் கூடாரங்கள் மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது. கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால் தறப்பாள் கூடாரங்கள் பலவும் கிழிந்து சேதமாகியுள்ளன.
கூரைகள் திருத்தப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களும் இம்மழையினால் பாதிப்படைந்துள்ளனர். சில பகுதிகளில் வீடமைப்பு கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தயாரிக்கப்பட்டு வந்த சிமெந்து கற்கள் இம்மழையினால் கரைந்து சேதமாகிப் போனதையும் அவதானிக்க முடிந்தது.
எதிர்வரும் பருவமழைக் காலத்திற்கு முன்னர் வீடமைப்பு பணிகள் முடிவுறாவிட்டால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்புகள் எற்படும் என்பதை கடந்த சில நாட்கள் பெய்த மழையினால் மக்கள் படும் சிரமங்களை வைத்து உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.