நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்லிணிக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீ ஆனந்தசங்கரி ஆகியோரின் வழியைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளது. வழமையாக காலம் கடந்து ஞானோதயம் பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை குறித்த காலத்திற்குள் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லாத போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணமாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னதாக லண்டனில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த வீ ஆனந்தசங்கரி நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தோன்றிச் சாட்சியளிக்க ததேகூ தயங்கலாம் எனவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். சில சமயம் நேரில்சாட்சியம் அளிக்காமல் எழுத்தில் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்பி விட்டு இருந்துவிடுவார்கள் எனவும் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
சாட்சியங்களில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள், தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இன்னல்கள், தமிழ் மக்களின் வரலாறு, அவர்களின் அபிலாசைகள் ஆகிய விடயங்கள் கூட்டமைப்பின் சாட்சியங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ததேகூ நேரடியாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போதும் ஏன் அவர்களை விடுவிக்கும்படி ததேகூ கோரவில்லை போன்ற கேள்விகள் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்கப்படும். மேலும் புலிகளுக்கும் ததேகூ க்கும் இருந்த உறவு பற்றியும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்படலாம்.