சாத்தியப்படக்கூடிய பகுதிகளில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அப்பகுதிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ஆதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இடங்கள் பல பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதிகளிலிருந்த படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களிலுள்ள பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது. அவ்வாறான பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாவுள்ளது. அதனை நீக்குவது தற்போது சாத்தியமற்ற விடயம். ஆகவே அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன,; யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் காண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மக்கள் முன்னர் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்து வந்தனர் என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.