நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நேபாள நாட்டின் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன கடந்த வெள்ளிக்கிழமை (14-ம் தேதி) காலை 6.30 மணியளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 37 வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 11 உடல்கள் மீட்கப்பட்டன. சனிக்கிழமையன்று 2 குழந்தைகள் உட்பட 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் கப்லே தெரிவித்தார். விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள பகுதி என்பதால் அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.