தென்னிலங்கையில் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் -அரசு எச்சரிக்கை

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் தலைநகர் கொழும்பிலும் தென்னிலங்கையில் முக்கிய இலக்குகளிலும் எந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாமென எச்சரிக்கை விடுத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, சுதந்திர தினக் கொண்டாட்ட காலப்பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிட்டியிருப்பதாகவும் தெரிவித்தது. வன்னியில் படு தோல்வியடைந்து விட்ட நிலையில், புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏற்கனவே 16 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாகவும் மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமெனவும் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைமைகளை விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சுதந்திர தினத்தன்றோ, அதற்கு இடைப்பட்ட காலத்திலோ கொழும்பில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் 16 பேர் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். இவர்களில் இருவர் இம்மாத ஆரம்பத்திலேயே பலியாகிவிட்டனர்.மீதமுள்ள 14 பேரும் கொழும்புக்குள்ளேயோ அல்லது தலைநகரை அண்மித்த பகுதிகளிலேயோ பதுங்கியுள்ளனர். எந்த வேளையிலும் கொழும்பில் முக்கிய இலக்குகளை குறிவைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும். அதேசமயம், கொழும்புக்கு வெளியேயும் முக்கிய நிலைகளைத் தாக்க புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் தலைநகரிலும் தெற்கின் முக்கிய பகுதிகளிலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. கொழும்புக்குள் பிரவேசிக்கும் சகல நுழைவாயில்களிலும் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் உள்வரக்கூடிய சகல வாகனங்களும் பொது மக்களும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவர். அதே சமயம் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள், பயணிகள் சோதனைக்குள்ளாக்கப்படும். பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்ற போதிலும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் பொது மக்கள் இக்காலப் பகுதியில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *