இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 3 ஆம் கட்ட பரிசோதனை முடியாது நடைமுறைக்கு வந்ததாக பலரும் குற்றச்சாட்டு !

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவி‌ஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம்(03.01.2021) ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதில் கோவி‌ஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (இந்திய ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவுக்கு முதலிலும், அடுத்ததாக தடுப்பூசி சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிய பூனவல்லா, அதைத் தொடர்ந்தே தனியார் சந்தைக்கு அனுப்பப்படும் எனவும், அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரலுக்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் “கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது.

3 ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை  தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை  வலியுறுத்துகிறேன். அதுவரை,கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *