4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த லியோனல் மெஸ்சி !

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி,  அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

33 வயதான மெஸ்சி 2004-ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

ஆனாலும் அணியின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரால் பல்வேறு சட்ட சிக்கல்களால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற முடியவில்லை.

இந்த நிலையில் மெஸ்சி கடந்த 2017 முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் விளையாட்டு உலகில் தனி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் உள்ள தகவல்படி ஒரு சீசனுக்கான மெஸ்சியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.

ஆனாலும் ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.

ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடியை மெஸ்சி ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *