சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே இலங்கைக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது..
வடக்கில் இடம்பெறும் மோதல்கள் பற்றி கடந்த சில தினங்களாக சர்வதேச சமூகத்தினர் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது நடைமுறையில் சாத்தியப்படாத சில சம்பவங்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்பிலான பொய்யான அறிக்கைகளே வெளியிடப்பட்டு வருகின்றன. இது எமக்கு வேதனையை அளிக்கிறது. புதுக்குடியிருப்புப் பகுதியில் நிலவும் நிலைமைகள் தொடர்பில் பல பிழையான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களைப் படையினர் வைத்தியசாலைகள் மீது நடத்தியதாகவும் நோயாளிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே இவ்வாறான தகவல்களை வெளியிட்டு மக்களைத் தூண்டி விடுகின்றனர் கடந்த சில தினங்களாகக் கூறப்பட்ட விடயம் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதே. தற்தோதைய நிலைமையின் படி வன்னியில் நூற்றுக்கு 40 சதவீத பிரதேசத்திலேயே மோதல்கள் நடைபெறுகின்றன. இதில் தான் 3 லட்சம் பேர் பொது மக்கள் உள்ளார்கள் எனக் கூறப்பட்டது. சிவிலியன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறிவிட்டு அந்த வாகனங்களில் வெடிபொருட்களை நிறைத்துச் செல்கிறார்கள். அவை சில வேளைகளில் வெடித்து சிதறும் போதுதான் பலர் கொல்லப்படுகின்றனர். இதைப் பற்றிக் கூற எவருமே இல்லை.
புலிகள் சிவிலியன்களை விடுவிக்காது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பற்றி யாருமே கதைப்பதாக இல்லை. இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளைப் பாவிக்கின்றனர் என சர்வதேச சமூகம் பொய்க்குற்றம் சாட்டியது. நாம் அதைப் பாவிப்பது என்றால் நாமே அதை உற்பத்தி செய்ய வேண்டும். அதை உற்பத்தி செய்வது யார்? கொத்தணிக் குண்டுகளைப் பாவித்தனர் எனக் குற்றம் சாட்டிய சர்வதேச சமூகமே பின்னர் அது தவறு எனக்கூறி மன்னிப்புக் கோரியது என்றும் அமைச்சர் கூறினார்.
இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இங்கு கருத்துத் தெரிவிக்கையில் படையினர் முல்லைத்தீவுப்பகுதியை 177 சதுர கிலோ மீற்றருக்கு மட்டுப்படுத்தியுள்ளனர். விஸ்வமடுவின் கிழக்கு பகுதியில் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தின் கிழக்காக படை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை கைப்பற்றப்பட்டதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்றார்.