விடுதலைப்புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். ஏற்கனவே எமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகள் இவ்விரு பிரச்சினைகளையும் வெவ்வேறாக்கிப் பார்ப்பதற்கு தவறிவிட்டன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளின் பிரச்சினையை வேறாகவும் தமிழ் மக்களது பிரச்சினையை வேறாகவும் பார்த்து வருவதால் தமிழ் மக்கள் தொடர்பில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார். எனவே எமது மக்களது எதிர்காலம் குறித்து எவ்வித தயக்கமும் இருக்கத் தேவையில்லை என்று சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் வடமாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சென்று சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா; இந்த மக்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பது தற்காலிக ஏற்பாடாகும். விரைவில் இந்நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும். இம்மக்களின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நாலாயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். எனவே தற்காலிகமாக இங்கு தங்கியுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கூடிய விரைவில் இம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இம்மக்களுக்குகென கூட்டுறவு சங்கக்கடை ஒன்றை திறப்பதற்கும் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்போருக்கு கற்கைகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரச பணிபுரிபவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கும் மக்களுக்கான தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கும் விளையாட்டு மைதான வசதிகளை விஸ்தரித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் வரை நம்பிக்கையுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கும்படியும் இம்மக்களைக் கேட்டுக்கொண்டார