முல்லைத்தீவு, சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் படகுகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பத்து படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. படையினரால் நிர்மூலமாக்கப்பட்ட படகுகளில் தற்கொலை படகுகள் நான்கும் அடங்குவதாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 3.30 மணி வரை இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த அவர் இந்த நடவடிக்கைகளுக்கு கடற்புலிகளின் தலைவர் சூசை தலைமை வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுமாத்தளன் வடக்கு பிரதேசத்தை இராணுவத்தின் 55வது படைப்பிரிவினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றினர். அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவும் பொருட்டு கடற்புலிகளின் சுமார் 40 படகுகள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வருவதை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சாலை தென்பகுதியில் கரையோரத்தை நோக்கி புலிகளின் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் வேகமாக வந்துள்ளன. படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். படையினரின் இந்த தாக்குதலில் 10 படகுகள் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. ஏனைய படகுகள் தப்பிச் சென்றுள்ளன.
இவற்றில் நான்கு தற்கொலை படகுகள் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன என்றும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.