ஏப்ரல்21 சஹ்ரான் குழுவினரின் தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று ஷாபி ஷிஹாப்தீன். சஹ்ரான் தாக்குதலை அடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளும் – அடக்குமுறைகளும் அரங்கேறின.
இந்த நாட்களில் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான திவயின பத்திரிகை “வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சிங்கள தாய்மாரை இலக்கு வைத்து கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சுமார் 4000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2019 23 திகதி ” என மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு காட்டுத்தீ போல இலங்கையில் – குறிப்பாக தென்னிலங்கையில் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களும் – தீவிர சிங்கள அரசியல் கட்சிகளும் இதனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொண்டன.
பௌத்த பிக்குகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிதான விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் உடனடியாக வைத்தியர் ஷாபியை கைது செய்ததது காவல்துறை. வெறும் வதந்திகளை வைத்து மட்டுமே அந்த ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் அரங்கேறின. ஷாபி ஷிஹாப்தீன் தீவிரவாத கொள்கைகளை உடைய முஸ்லீம் குழுக்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கிடையில் ஷாபி ஷிஹாப்தீனின் வீட்டின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் அவருடைய குடும்பத்தினரும் மானபங்கப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை வைத்து மிகப்பெரிய அரசியல் அரங்கேறிக்ககொண்டிருந்ததது. 2019 – மே – 24 பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானார் ஷாபி. தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பல சிங்கள பெண்கள் கருத்தரித்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஷாபி நிரபராதி எ்னபதை வெளிப்படுத்தின. தொடர்ந்து ஷாபி விடுதலையானார்.
கைது தவறானது என்ற முடிவுக்கு வந்ததுடன் பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் ஷாபி குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.
அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.
சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அதன்படி, வைத்தியர் ஷாஃபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.
வைத்தியர் ஷாபி பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.
தற்போது நாட்டில் கடும் நெருக்கடியில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக தமது சம்பள நிலுவையை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி வழங்கியுள்ளார்.
உண்மையிலலேயே இன்று வரை ஷாபி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டைமுன்வைத்த திவயின பத்திரிகை நிறுவனமோ, அல்லது வதந்திகளை மட்டுமே வைத்து ஷாபியை கைது செய்த குருணாகல் பொலிஸ் பிரிவோ அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. வைத்தியர் ஷாபி மேற்கொண்ட மருத்துவப்பணி குருணாகல் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு அவப்பெயரை சந்தித்த ஷாபி மீதும் அவருடைய குடும்பத்தனர் மீதும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மீதும் மிக இலகுவாக குற்றஞ்சுமத்தி ஒரு மனிதரின் சமூக அந்தஸ்தை கிழித்தெறிந்ததது இந்த சிங்கள பேரினவாதம்.
ஆனால் இவை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வைத்தியர்ஷாபி எந்த வைத்தியசாலை நிர்வாகத்தால் குற்றவாளியாக்கப்பட்டாரோ – அவமானப்படுத்தப்பட்டாரோ அதற்கே தன்னுடைய ஊதியப்பணமான 2.6மில்லியன் ரூபாவை வழங்கி இனவாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
2ம் உலகப்போர் முடிந்ததை தொடர்ந்து ஜேர்மனி கிழக்கு ஜேர்மனி – மேற்கு ஜேர்மனி என இரண்டாக பிளவுபட்டது. அது வரை ஒற்றுமையுடள் வாழ்ந்த மக்கள் ரஷ்ய சார்பு – அமெரிக்க சார்பு என இருகூறாக்கப்பட்டனர். இதனை நினைவுபடுத்த பேர்ளினில் கிழக்கு – மேற்கு ஜேர்மனியை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டது. ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்கள் மீது தமது வெறுப்பை காட்ட குப்பைகளை கொண்டு சென்று மதிலின் மறுபக்கமாக வீசிக்கொண்டேயிருந்தனர். எனினும் மற்ற பகுதி மக்கள் குப்பைகளை வீசாது பழங்களையும் – நறுமணபபொருட்களையும் கொண்டு போய் வீசினார்களாம்.
நமக்கு அவர்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களை வீசுவோம் என பெரிய விடயத்தை சிங்கள பேரினவாதிகளுக்கு தனது செயல் மூலம் ஷாபி வெளிப்படுத்தியுள்ளார்.