தற்போது தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் மேலும் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பா. பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன், சிறுவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இடைநிலை காலநிலையினால் முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.
அதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை பரவலாக தொடராக மழை பெய்துவருகின்றது. இதனால் இடம்பெயர்ந்து கூடாரங்களில் உள்ள மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கூடாரங்களிலுள்ள துவாரங்கள் காரணமாக ஒழுக்கு ஏற்பட்டு சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் கடந்தவாரம் கப்பலில் வந்த 110 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றோம். மேலும், உணவுப் பொருட்கள் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.