உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 10 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19)இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் – இருபாலை வீதியில் உள்ள இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் தான் போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,

* 3, 42, 53 மற்றும் 70 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவுடன் ஒத்துப்போகின்றன, மேலும் அவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

*இருப்பினும், அந்த சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழிந்தபடி திருத்தினால், அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* 4வது ஆவது சரத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருத்தம் செய்யப்பட வேண்டும்.

* 61 (1) சரத்து அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சரத்து மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால், அந்த முரண்பாடு நீங்கிவிடும். அதற்கேற்ப, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 72 (2) வது சரத்தும் திருத்தப்பட வேண்டும்.

* 83 (7) சரத்து விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் பிரிவின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால் அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* மேலும், சட்டமூலத்தின் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, எளிய பெரும்பான்மையால் மட்டுமே சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் திர்மானித்துள்ளது.

“பரல் கணக்கில் புலிகளின் தங்கம்” – இரண்டு நாட்கள் தேடிய பொலிஸாருக்கு கிடைத்தது என்ன..?

குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.

 

அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.

இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A 9 வீதி ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் !

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இருப்பிடத்தை அறிய வேண்டி ஏழு வருடங்களாக உண்மையைக் கண்டறியும் வேட்கையை நிறைவு செய்யும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி A 9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை பயணித்துள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில், எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள்  நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் சிங்கள மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற காணாமல்போன உறவுகளின் போராட்டத்தில் கலந்துகொண்டவேளை அவர்  இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

மக்கள் பேரவைக்கான இயக்கமாக இன்று கிளிநொச்சியில் ஒன்று கூடி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.  இதுவரை ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தின் மூலம் வடக்கின் தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ரணில் ராஜபக்சவின் மக்கள் விரோத அரசாங்கம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மிதிக்கும் பேரங்களை செய்யும் அநியாய வேலைத்திட்டத்தை செய்து வருகின்றது.  நாங்கள் மக்கள் பேரவைக்கான இயக்கமாகவும் மக்களாகவும் நீதிக்காக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றுபடுவது இன்றியமையாதது.

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ரஸ்ய பிரஜைகள் – மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவீடு !

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருகை தரும் ரஸ்ய பிரஜைகள் பாலியல்தொழிலில் ஈடுபடுவதாக கரிசனைகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில்  இவர்களில் சில பெண் சுற்றுலாப்பயணிகள்  விபச்சாரத்தில் ஈடுபடுவதாக  கரிசனைகள் வெளியாகியுள்ளன.

உள்வருகை விசா இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா சீனா ரஸ்யா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் கொரோனா போன்றவற்றினால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ரஸ்யா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களிற்கு உள்வருகை விசா தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் தனிநபர்கள் இந்த நடைமுறையை துஸ்பிரயோகம்செய்கின்றனர் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு 208 253 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் இவர்களில் சுமார் 32000 பேர் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள்.

இதேவேளை இவர்களில் சிலர் பாலியல்தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.குறிப்பாக கொழும்பில் நட்சத்திர விடுதிகளில் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இரவுவிடுதிகளின் மூலமும் சிலர் முகவர்கள் மற்றும் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தேடிக்கொள்கின்றனர்    மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவிடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

சில இணையதளங்கள் இது குறித்து விளம்பரங்களை வெளியிட்டுவருகின்றன ரஸ்ய பெண்கள் அதிகளவிற்கு முக்கிய பிரமுகர்களை இலக்குவைத்தே செயற்படுகி;ன்றனர்.

இதேவேளை இந்த விடயத்தை கையாள்வதில்குழப்பங்கள் உள்ளதை குடிவரவுகுடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் தெரிவில் வெளிப்படுவது சாதிய குளறுபடியா அல்லது ஆணாதிக்க சிந்தனையா..?

கடந்த வருடம் யாழ்ப்பாண தீவுப் பகுதி இந்து பாடசாலை ஒன்றில் கிறிஸ்தவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார் என்பதற்காக மாணவர்களை மதவாதம் சார்ந்த கருத்தியலுக்குள் தள்ளி ஒரு போராட்டம் ஒன்றை குறித்த பாடசாலை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தமை சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களை கிளப்பிவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19) காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் முன்னைய அதிபராக செயற்பட்டவரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்ற கருத்தை மையப்படுத்தி விவாதங்கள் வெளியாகியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க சாதி தொடர்பான பிரச்சனைகளும் குறித்த பாடசாலை அதிபர் தெரிவில் காணப்படுவதாக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதுடன் பாடசாலையின் முன்னாள் அதிபர் உயர் சாதியை சாராதவர் என்பதற்காக புதிதாக உயர்சாதியை சேர்ந்த பெண் அதிபரை நியமித்துள்ளதாகவும் இருந்தபோதிலும் அது தொடர்பிலும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசம்நெட்இற்கு தகவல் அளித்த சமூக நலன்விரும்பி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் இலங்கை பொலிஸார் !

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட  விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்த நிலையில் திங்கட்கிழமை (19) பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்போது நீதவான், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், உள்ளிட்டோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.