மனிதாபிமான பணிகளில் அரசுடன் சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயார்

tna-logo.jpgபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடனான பேட்டி முழுமையாக இங்கே தரப்படுகிறது.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டது. இந்தச் சந்திப்புக்கும் மேலாக ஜனாதிபதியுடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றுக்கும் நீங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இவ்வாறானதொரு தனிப்பட்ட சந்திப்புக்கான அவசியம் தான் என்ன?

பதில்: சர்வகட்சிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தோம் என்பதே உண்மை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மனித அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முடிவெடுத்திருந்தோம்.

வவுனியா அகதி முகாம்களிலுள்ள மக்களை நாம் பார்வையிட அனுமதித்தல், இடம்பெயர்ந்த மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட கம்பி வேலிக் கூடாரங்களுக்குள் தொடர்ந்தும் வாழக் கூடாதென்பதற்காக அவர்களை விரைவாகச் சொந்த இடங்களில் குடியேற்றுதல், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் போன்றன குறித்து நாங்கள் பல நாடுகளிடம் குறிப்பாக இந்தியாவிடமும் ஐ.நா. பிரதிநிதிகளிடமும் வலியுறுத்தி வந்தோம். இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசுவதென்றும் முடிவெடுத்தோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஒரு முன்னோடியாக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவைச் சந்திப்பதெனத் தீர்மானித்தோம். இதன்படி கடந்த மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சு அறையில் சந்தித்து, இடம்பெயர்ந்துள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து விளக்கினோம். அவர்களைப் பார்க்க முடியாத எமது நிலை குறித்தும் தெரிவித்தோம். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமலிருந்தார். இன்று அவர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் எடுத்துக் கூறினோம். மேலும் மனிதாபிமானப் பணிகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்ட டாக்டர்களின் தடுத்து வைப்புக் குறித்தும் பிரஸ்தாபித்தோம். ஆகவே இந்த விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சர் டலஸிடம் முன் வைத்தோம். அப்போது அமைச்சர் டலஸ், ஜனாதிபதியை நீங்கள் சந்தித்து பேசினால் என்னவென்று எம்மைக் கேட்டார். இதுதான் உண்மையில் நடந்தது.

கேள்வி: இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலும் கூட சர்வகட்சிக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றனவே. அதற்கான அழைப்புகள் உங்களுக்கும் அனுப்பப்பட்டன. அந்த வேளையில் நீங்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தீர்களே? அழைப்பினை ஏற்று நீங்களும் கலந்து கொண்டிருந்தால் சில பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கிடைத்திருக்குமல்லவா?

பதில்: ஆம், சர்வகட்சிக் குழுக் கூட்டங்களில் பங்கு கொள்ளுமாறு எமக்கு இருமுறை அழைப்புகள் வந்தன. ஆனால் அன்றைய சூழ்நிலைகள் ஜனாதிபதியைச் சந்திக்க எம்மை அனுமதிக்கவில்லை.

கேள்வி: ஜனாதிபதியை சந்திக்கும் உங்கள் முடிவுக்கு சாதகமான பதில் கிடைத்ததா? ஜனாதிபதியை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: இல்லை. இதுவரையும் எந்தவித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இறுதியாக நடைபெற்ற சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அழைப்புக் கிடைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நாம் எமது கட்சியைச் சேர்ந்த எம். பிக்கள் சிலரை என்.ஸ்ரீகாந்தா தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து எமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்குமாறு கூறினோம். அங்கு சென்ற எமது பிரதிநிதிகள் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார்கள். ஆனால் இதுவரைக்கும் வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பேச எமக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் பிரதிநிதிகளான நாம் அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி அனுமதி தர மறுப்பதன் காரணமாகவே இந்த விடயங்களை அண்மையிலும் இந்தியா மற்றும் ஐ.நா பிரதிநிதிகளிடமும் முறையிட்டோம். இதேவேளை, இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது தொடர்பாகவும் அவர்களின் நலன் குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக ஒரு குழுவினை அரசாங்கம் அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழுவில் கூட ஒரு தமிழ் அரச பிரதிநிதியோ நாடாளுமன்றப் பிரதிநிதியோ உள்வாங்கப்படவில்லை. இதன் காரணமாக அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட மனிதாபிமானப் பணிகள், தொடர்பில் இரு தரப்பும் சந்தித்துப்பேசுவதில் தவறில்லை. சுனாமி காலத்தில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒரு ஒப்பந்தத்தையே செய்திருந்தார்கள். அவ்வாறாயின் எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் பேசுவதில் தவறில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

கேள்வி: வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எண்ணிக்கை, இடம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளிவருகின்றனவா?

பதில்: ஆம். அகதிகளாக வந்த மக்களின் பெயர்பட்டியல் முதலில் வெளியிடப்பட வேண்டும். இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 4,30,000 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்ததாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் முன்னர் தெரிவித்திருந்தார். உலக உணவுத் திட்டத்தின் தகவல்களின் அடிப்படையில் 3,30,000 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கமோ முல்லைத்தீவு மாவட்டத்தில் 70,000 பேர்மட்டுமே இருந்ததாக சர்வதேச ரீதியாகவே பிரசாரத்தை மேற்கொண்டது. இவ்வாறான முரண்பாட்டு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 3,15,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களுக்கு வந்திருந்தனர். இது ஆச்சரியத்தையே தந்தது. ஆகவே மீதியான சுமார் ஓர் இலட்சம் மக்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதனை நாம் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளோம். ஆகவே இவ்வாறான முரண்பாடான தகவல்கள் காரணமாக உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அந்த மக்களைச் சந்தித்துப் பேச வேண்டியுள்ளது.

அடுத்ததாக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப் பட வேண்டும்.

கேள்வி: சமஷ்டிக்கே இடமில்லை யென்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?

பதில்: தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது ஒரு சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தையே முன் வைத்திருந்தோம். தந்தை செல்வாவின் அந்தத் திட்டத்துக்காக மக்களும் வாக்களித்து வந்தனர். இது தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுத் திட்டம் குறித்தோ பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதெல்லாம் ஒரு முறையான தீர்வுத் திட்டத்தை எந்த சிங்கள அரசாங்கத் தலைமைகளுமே முன்வைக்கவில்லை. தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் பங்கு கொண்ட வட்டுக்கோட்டை மாநாட்டில் முன் வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை கூட சிங்கள அரசியல் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது. இன்று இந்த அரசாங்கமும் சமஷ்டியை நிராகரித்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை எவ்வாறு முன் வைக்கப்போகிறதென்று கூட இன்னும் தெளிவாகக் கூறவில்லை. சமஷ்டியை நிராகரிக்கிறார்களென்றால் வேறெதனை முன் வைக்கப்போகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் நாம் ஒரு புதிய தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமான தீர்வொன்றினைக் காணும் வகையில் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டமொன்றை தயாரிக்கும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. எமது இந்தத் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திலும் முன் வைக்கப்படும். தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுய உரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சி முறை ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் எமது தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போது அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே ஏற்படக் கூடிய உடன்பாடானது புதியதொரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் சென்றால் அந்தத் தீர்வுத் திட்டத்தில் நாம் முன்வைத்த மூன்று அடிப்படை அம்சங்களும் உள்வாங்கப்பட வேண்டும். அல்லது இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படக் கூடிய ஒரு அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்

இந்த நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தனது முழுப் பங்களிப்பையும் வழங்கி தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளுகின்றோமென்ற உணர்வைக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா உதவும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதேபோன்று இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கும் இந்தியா தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பை யும் வழங்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பிலும் அதனைத் தீர்த்து வைப்பதிலும் காட்டும் அக்கறை போன்று இந்தியாவும் தனது பங்களிப்பை நல்கி தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைத் துரிதப்படுத்த உதவி செய்ய வேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வை எட்டவும் மனிதாபிமான பணிகளுக்குப் பங்களிப்புச் செய்யவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

கேள்வி: 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தினை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமே?

பதில்: இல்லை, 13 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலத்தை ஜே.ஆர். ஜெயவர்தன தனது விருப்பப்படியே நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் இந்தத் திருத்தச் சட்ட மூலம் எங்கள் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவோ அல்லது தீர்வுக்கான அடிப்படையாக இருக்கமாட்டாது. நாம் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இதனை நாம் அண்மைக்காலங்களில் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்தத் திருத்தச் சட்டமூலமானது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இதனை இந்திய அரசாங்கத்துக்கு நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்தச் சட்ட மூலம் அதிகாரத் தைப் பகிர்ந்து கொடுக்கவோ அல்லது ஆட்சியில் பங்களிப்புச் செய்யவோ அதிகாரத்தைப் பரவலாக்கவோ இடமளிக்கவில்லை. பொலிஸ், சட்டம். ஒழுங்கு, காணி, நிலப்பங் கீடுகளுக்கான அதிகாரங்கள் கூட 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வில்லை. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் வரலாற்று போராட்டங்கள் என்ன இலக்குக்காக நடத்தப்பட்டனவோ என்ன இலக்குக்காக நாங்கள் உடன்பாடுகள் கண்டோமோ அவற்றில் எதனையும் இந்த 13 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டிருக்காத காரணத்தினால் இதனை நாங்கள் நிராகரித்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வளவு தான் கோரிக்கைகளை தமிழ் நாடு அரசிடமோ புதுடில்லி அரசிடமோ முன்வைத்தாலும் கூட அவர்கள் அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லையே.

பதில்: மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்ததை நாங்கள் அறிவோம். எங்கள் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களென்ற விடயத்திலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற விடயத்திலும் இந்தியா எதனையும் கருத்திற் கொள்ளவில்லை என்ற அபிப்பிராயமும் நிலவியது. இந்த விடயத்தில் எங்களுக்கும் ஆழமான வேதனை உண்டு. எமது மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்ற நிலையிலும் இந்தியாவுக்கும் சென்று இங்குள்ள நிலைவரம் தொடர்பில் விளக்கினோம். முழுமையான ராஜதந்திரத்தை பிரயோகித்து இந்த யுத்தத்தை நிறுத்தும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதனைக் கூட அவர்கள் கருணையோடு அணுகவில்லை. இது இன்னும் வேதனை தருகிறது.

இருப்பினும் இந்தியா தொடர்பில் நாங்கள் முற்று முழுதாக நம்பிக்கையை இழந்து விடவில்லை. இலங்கைத், தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு ஒரு தீர்வைக்காண உதவ வேண்டுமென்பதில் நாங்கள் இன்னும் திடமாக உள்ளோம். இதன் காரணமாகவே இந்தியத் தேர்தல் முடிந்தவுடனும் புதுடில்லிக்குச் சென்று இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உண்மை நிலைமைகளை விளக்கி இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்தியா உதவ வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை விடுத்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர் என்.எஸ். கிருஷ்ணாவைச் சந்தித்து நாம் பேசிய போது எமக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. நாம் முன்வைத்த அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றே நாம் நம்புகிறோம்.

கேள்வி: ஆனால் ஒன்றும் நடக்க வில்லையே?

பதில்: ஆம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நாம் திருப்திப்படமுடியும். ஆனால் எமது பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவுமென்ற நம்பிக்கை எமக்கு இன்னும் உள்ளது.

கேள்வி: யாழ் மாநகராட்சி, வவுனியா நகராட்சி தேர்தல் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்தத் தேர்தலை இப்போது நடத்தக் கூடாதென்றே நாம் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இரத்தம் காய்ந்து போவதற்கு முன்னர் இவ்வாறு ஒரு தேர்தல் நடத்துவது நல்லதல்ல. பலவீனப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மக்களை வென்றெடுத்து, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, அந்த மக்கள் தமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற மாயைத் தோற்றத்தை வெளியுலகுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்காகவே இந்தத் தேர்தலை அரசு நடத்துகிறது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 8/2/2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • DEMOCRACY
    DEMOCRACY

    Did the Govt. death squad kill the arrested Tamil Tiger leaders in the prisons? Friday, July 31, 2009.
    (August 01, Jaffna, Sri Lanka Guardian) Information filtering through highly restricted government sources confirms that number of LTTE leaders arrested in the IDP camps immediately after the defeat of the LTTE have been killed after severe torturing in the prisons in the southern Sri Lanka.–http://www.srilankaguardian.org/2009/07/did-govt-death-squad-kill-arrested.html-

    இலங்கைத் தமிழருக்கு ஒரு வேண்டுக் கோள்!, இந்திய, அமெரிக்க, சீன,தூதுவராலயங்களுக்கு முன்பு, “லார்டு லபுகுதாஸ்” மாதிரி கையில் கொடியுடன் பிக்னிக் மாதிரி வந்துவிடுகிறீர்கள்!, அனால் “சக மனித உயிர்களை” காப்பாற்றுவதற்கு, எள்ளளவும் உணர்வுகளை வெளீப்படுத்த மாட்டீர்கள்!. யோகி, புதுவை, வே.பாலக்குமரன் போன்றவர்களை காப்பாற்ற அணித்திரள எதுவும் தடையிருந்ததாக எனக்கு தெரியவில்லை. கே.பி.யப் போல, அவர்கள் வெளிநாடுகளுக்கு ஆரம்பத்திலேயே ஓடிவரவில்லை, பயம் காரணமாக?, என்று சொல்லப்பட்டாலும், பிரபாகரனுடையேயே இருந்தவர்கள்!……
    “இலங்கைத் தமிழர்களா!! அப்படியென்றால் என்ன!!??”, என்ற என்னுடைய கேள்விக்கு யராவது பதில் கூறினல், தேவலை!. இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருகிறது, என்பது நிதர்சனம் என்றாலும், அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து மூக்குடைப் படாதீர்கள்!!. சாதாரண மனிதர்களாக மனிதாபிமானத்துடன் வாழப் பழகுங்கள்!. மேல் குறிப்பிட்டுள்ள செய்தி உண்மை என்றால்!, “என்னுடைய ஆழ்ந்த கண்ணிர் அஞ்சலி!!”.

    Reply