யாழ். குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் இலகுவில் சென்று வருவதற்கான நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள ஏனைய பாடசாலைகளைத் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, பருத்தித் துறை ஹாட்லி கல்லூரி, மெதடிஸ்ட் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கான போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இளங்கோவன் குறிப்பிட்டார்.
உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் சிறிது தூரத்தை நடந்துசெல்ல வேண்டியுள்ளதால், அவர்களின் அசெளகரியத்தைக் களைய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உயர் பாதுகாப்பு வலயங்களில் இன்னமும் 51 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட வேண்டியுள்ளன.