நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று (20ம் திகதி) நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குசாவடிகளினுள் ஒரே நேரத்தில் இருந்தபடி கண்காணிக்கவென இரு கண்காணிப்பு அமைப்புக்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் கண்காணிப்பு பணிகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மீள் வாக்களிப்பு இடம்பெறும் 38 வாக்குச் சாவடிகளினதும் உள்ளே இருந்தபடி இரு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இப்பணியில் பெப்ரல் அமைப் பும், தேர்தல் வன்முறைகளைக் கண் காணிப்பதற்கான மத்திய நிலையமும் 76 பிரதிநிதிகளை ஈடுபடுத்தவுள்ளன.
இதேநேரம் மேற்படி 38 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் வாக்க ளிப்பைக் கண்காணிக்கும் பணியில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம், கபே ஆகிய அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புக்கள் சுமார் 160 பிரதிநிதிகளை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
இது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குச் சாவடியினுள் இருந்தபடி கண்காணிக்கவென 38 பிரதிநிதிகளையும், நடமாடும் ஐந்து வாகனங்களில் 20 பேரையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இணைப்பாளர் டி. திஸாநாயக்கா குறிப்பிடுகையில், வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிக்கும் பணியில் 35 பிரதிநிதிகளையும் ஐந்து நடமாடும் வாகனங்களில் 10 பிரதிநிதிகளையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.